கந்தர் அனுபூதி - அருணகிரிநாதர் நூல்கள்
வினையோட விடுங் கதிர்வேல் மறவேன் மனையோடு தியங்கி மயங் கிடவோ கனையோ டருவித் துறையோடு பசுந் தினையோ டிதணோடு திரிந் தவனே. |
40 |
வள்ளி மலையில் சுனைகளிடத்தும், மலை அருவிகள் விழுமிடத்தும், பசுமை நிறங்கொண்ட தினைப் புனத்திடத்தும், பரணிடத்தும், வள்ளிப் பிராட்டிக்கு அருள் செய்யும் பொருட்டு சுற்றித் திரிந்த பெருமானே, ஆன்மாக்களின் இருவினைகளையும் ஓடச் செய்யும், ஞான ஒளி வீசுகின்ற வேலாயுதத்தை ஒருகாலும் மறக்க மாட்டேன், இல் வாழ்வில் கலக்கம் கொண்டு மயங்கி அழியலாமோ? ..
சாகா தெனையே சரணங் களிலே காகா நமனார் கலகஞ் செயுநாள் வாகா முருகா மயில்வா கனனே யோகா சிவஞா னொபதே சிகனே. |
41 |
அழகனே, முருகப் பெருமானே, மயிலின் மீது வரும் பெருமானே, யோகீசனே, சிவ ஞானத்தை பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு உபதேசம் செய்பவனே. யமன் வந்து என் உயிரை பறித்துக்கொண்டு போகும் அந்தக் கடைசி நாளில், அடியேன் இறந்து போகாதபடி, அடியேனை உமது திருவடி நிழலிலே தங்கும்படி காத்தருளும். ..
குறியைக் குறியாது குறித்தறியும் நெறியைக் தனிவோல நிகழ்த் திடலுஞ் செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற் றறிவற் றறியா மையு மற்றதுவே. |
42 |
தியானிக்கப் படுகின்ற பொருளை, காலம், இடம் முதலியன பற்றி நினைக்காமல் தியானிக்கப்படும் பொருளைப் பற்றியே எண்ணிக்கொண்டு, பசு, பாச ஞானங்களை விட்டு, பதி ஞானத்தால் அறியும் உண்மை வழியை, ஒப்பற்ற வேலாயுதத்தை உடைய கடவுள் மெளன குருவாய் வந்து உள் நின்று உணர்த்திய உடனே, உலகத்தாறோடு நெருங்கும் உறவு நீங்கி, வாக்கும் அற்று, நினைவும் அற்று, சுட்டி அறிகின்ற அறிவும் அற்று, அறியாமையும் முற்றிலும் நீங்கிவிட்டன. ..
தூசா மணியுந் துகிலும் புனைவாள் நேசா முருகா நினதன் பருளால் ஆசா நிகளந் துகளா யின்பின் பேசா அநுபூதி பிறந் ததுவே. |
43 |
தூய்மையான இரத்தின மணிகளும், ஆடைகளும் அணிகின்ற வள்ளி பிராட்டியாரின், காதலனே, முருகப் பெருமானே, நீ காட்டிய அன்புடன் கூடிய அருளினால், ஆசையாகிய விலங்கு, தூள் தூளாக பொடியான பின் மெளன நிலையுடன் கூடிய அநுபூதி நிலை எனக்குக் கிடைத்தது. ..
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அனுபூதி - Kandhar Anuboothi, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெருமானே, அற்று, மெளன, அநுபூதி, வந்து, கூடிய, முருகப், செய்யும், வேலாயுதத்தை, முருகா, வள்ளி