கந்தர் அந்தாதி - அருணகிரிநாதர் நூல்கள்
திகழு மலங்கற் கழல்பணி வார்சொற் படிசெய்யவோ திகழு மலங்கற் பகவூர் செருத்தணி செப்பிவெண்பூ திகழு மலங்கற் பருளுமென் னாவமண் சேனையுபா திகழு மலங்கற் குரைத்தோ னலதில்லை தெய்வங்களே. |
29 |
விளங்குகின்ற, மாலை சூட்டிய, தனது திருவடியை, வணங்குகின்ற அடியார்களின், திருவாக்கின்படி நடக்க (சம்பந்தரின் ஒவ்வொரு பதிகத்திலும் 11 வது பாட்டாக திருக்கடைக் காப்பு என்று ஒரு பாட்டு உண்டு. அப்பதிகத்தை பாடுவார்க்கு என்ன பலன் கிடைக்கும் என்பார். இதன்மூலமாக அடியாருக்கு அந்தப்பலனைத் தேடிக்கொடுப்பதை இங்கு கூறுகிறார்). தேவாரத் திருப்பதிகங்களை ஓதி, தான் அவதரித்த சீர்காழியையும், தான் காத்தளித்த அமராவதியையும், தான் என்றும் கலியாண சுபுத்திரனாக நிற்கும் திருத்தணியையும், துதித்து, அணியும் திருவெண்ணீறு, மும்மலத்தைப் போக்கடிக்கும், முழுப்பொருள் இதுவே என்று நம்பும் கற்புடமையையும், கொடுக்கும், என்று நினையாத, சமணக் கூட்டங்களை, வருத்தம் தரும், கழுமரத்தில் ஏற்றி, கலக்கம் அடைந்து அழியும்படி, வாதுபுரிந்த சம்பந்தப்பெருமான் ஆகிய குமரக் கடவுள் அன்றி, வேறு பிரத்யக்ஷ தெய்வங்கள் கிடையாது. ..
தெய்வ மணம்புணர் தீகால் வெளிசெய்த தேவரைந்த தெய்வ மணம்புண ராரிக்கு மருக செச்சையந்தார் தெய்வ மணம்புண ருங்குழ லாளைத் தினைப்புனத்தே தெய்வ மணம்புணர் கந்தனென் னீருங்க டீதறவே. |
30 |
மற்ற தேவர்களையும், பூமி, நீர், அந்தக்கரணம், நெருப்பு, காற்று, ஆகாசம் முதலிய ஐந்து பூதங்களையும், படைத்த, பிரம்ம தேவன், நம்மேல் எழுதிய தலை எழுத்தை (முருகனின் நாம சங்கீரத்தனம்), அழித்துவிடும். (அதனால்) மாசற்ற, அழகிய, கருட வாகனனாகிய, நரசிம்மரின் மருகனே, வெட்சி மாலை அணிந்த தெய்வமே, நறுமணம் வீசும், கூந்தலையுடைய வள்ளியை, தினைப்புனத்தில், கந்தர்வ மணம் செய்துகொண்ட, குமரக் கடவுளே என்று துதியுங்கள், உங்கள் தீய வினை எல்லாம் ஒழியும்படி ..
தீதா வசவ னுபவிக்க மண்ணிலும் விண்ணிலுஞ்செந் தீதா வசவ னியாயஞ்செய் வேதிய ரேதியங்காத் தீதா வசவ னிமலர்செல் வாசாக் கிரவசத்த தீதா வசவன் புறப்பா ரெனுமுத்தி சித்திக்கவே. |
31 |
தீமையாகிய, இழிச்சொல், அனுபவிக்கும்படியாய், பூலோகத்தில் புகழ் பெறவும், தேவர்கள் உலகத்தில் போகங்களைப் பெறவும் எண்ணி, சிவந்த அக்னி தேவன், ஏறுகின்ற, ஆட்டை, கருணை இல்லாமல் பலி கொடுத்து யாகம் செய்கின்ற, மறையோரே, இனி அப்படி திகைக்காமல், தெளிவான அறிவை, தந்தருள்க என்று, இடப வாகனத்தை உடைய, சிவபிரானின், மைந்தனே, கருவி கரணங்கள் ஐவேலை செய்யும் விழிப்பு நிலையிலும், அவைகள் ஒடுங்கி இருக்கும் துரிய நிலையிலும், உனக்கு எங்களிடத்தில் கிருபை உண்டாகி கடாட்சிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள், மோட்சம், உங்களுக்கு கிடைக்கும்படி. ..
சித்திக்கத் தத்துவ ருத்திர பாலக செச்சைகுறிஞ் சித்திக்கத் தத்துவ ரத்தியின் மாவென்ற சேவகவிச் சித்திக்கத் தத்துவர் வாய்மொழி மாதர்க் கெனுந்திணைவா சித்திக்கத் தத்துவ ருத்தப் படாதுநற் சேதனமே. |
32 |
அடியேனுக்கு கிட்டும் படி அருள வேண்டும், தத்துவ மூர்த்தியே, சிவனார் குமாரனே, வெட்சி மாலை அணிந்த, குறிஞ்சி நிலத்திற்கு அதிபதியே, அலை தாவுகின்ற, உப்பை உடைய, கடலின் கண், மா மரமாக நின்ற சூரனை, ஜெயித்த, வீரனே, மிகவும் விருப்பமுடன், கரும்பும், அந்த சிவந்த பவளமும், வாயும், மொழியாகும், பெண்களுக்கு, என்று வர்ணிக்கும் காம சூத்திரத்தை, ஓயாமல்படித்து, இதற்கு இனமான வெகுளியினால், துன்பப் படாமல், நல்ல ஞான அறிவை, அடியேனுக்குக் கிட்டும்படி அருள வேண்டும்). ..
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அந்தாதி - Kandhar Andhadhi, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - சித்திக்கத், திகழு, தீதா, தெய்வ, தத்துவ, மலங்கற், மாலை, வேண்டும், தான், உடைய, அறிவை, அருள, நிலையிலும், அணிந்த, மணம்புணர், குமரக், மணம்புண, தேவன், பெறவும், வெட்சி, சிவந்த