கந்தர் அந்தாதி - அருணகிரிநாதர் நூல்கள்
தெளிதரு முத்தமிழ் வேதத்திற் றெய்வப் பலகையின்கீழ் தெளிதரு முத்தமிழா நித்தர் சேவித்து நின்றதென்னாள் தெளிதரு முத்தமிழ் தேய்நகை வாசகச் செல்விதினைத் தெளிதரு முத்தமிழ் செவ்வே ளிருப்பச் செவிகுனித்தே. |
25 |
தெளிவைத் தருகின்ற, இயல் இசை நாடகம் என்ற முத்தமிழிலும், நான்கு மறைகளிலும், முதலில் விளங்கிய தெய்வீகமாகிய சங்கப் பலகையிலும் (மதுரையில்), மாசற்ற, குற்றால மரத்தின் கீழினும் (தட்சிணாமூர்த்தியாக), முதன்மை ஸ்தானத்தில் விளங்குகின்ற, அழிவில்லாத நித்தியராகிய சிவ பெருமான், பணிந்து நிற்கக் காரணம் என்ன? நட்சத்திரம் போல, பிரகாசிக்கும், முத்தையும், தேவாமிர்தத்தையும், ஒத்த, பல்லையும், வார்த்தையையும் உடைய, மங்கையாகிய, தினை தானியத்தை கொழிக்கின்ற வள்ளி, கொடுக்கும், முத்தத்தில், ஆனந்தத்தில் அமிழ்ந்திருக்கும், முருகப் பெருமான், குருவாய் எழுந்தருளி உபதேசிக்க, செவியைத் தாழ்த்திக் கொண்டு, பணிந்து நிற்கக் காரணம் என்ன?) ..
செவிக்குன்ற வாரண நல்கிசை பூட்டவன் சிந்தையம்பு செவிக்குன்ற வாரண மஞ்சலென் றாண்டது நீண்டகன்மச் செவிக்குன்ற வாரண வேலா யுதஞ்செற்ற துற்றனகட் செவிக்குன்ற வாரண வள்ளி பொற்றாண்மற்றென் றேடுவதே. |
26 |
நாகாசல வேலவனே, என்னுடைய காதுக்கு, உன்னுடைய நீங்காத, உரிமையை (உனக்கும் எனக்கும் விடாத தொடர்பை ஏற்படுத்தி) கொடுக்கும், உன்னுடைய கீர்த்தியை சேர்த்துக் கொள்ள, வலிய, என் இதயமாகிய, செந்தாமரையில் இருக்கும், ஜீவாத்மாவாகிய பட்சி, இல்லற துன்பத்தைப் பார்த்து நடுங்கும் பொழுது, உன்னுடைய கொடியாகிய சேவல், பயப்படாதே என்று சொல்லி, என்னை அடிமை கொண்டது, மிகப் பெரிய, முன்பு செய்த வினையால் விளையும், ஜனனத்திற்கு விதையாகிய, மலை போன்ற ஆசைக் கூட்டத்தை, போர் புரிவதில் வல்லமை உள்ள, உன் திருக்கை வேல், தகர்த்து விட்டது, உன்னுடைய கிரியா சக்தியாகிய தேவயானை, இச்சா சக்தியாகிய வள்ளி இவர்களின், சிறந்த திருவடிகள் என் சிரசின் கண் வந்து அமர்ந்தன, இனி நான் சம்பாதிக்க வேண்டிய வேறென்ன இருக்கிறது. ..
தேடிக் கொடும்படை கைக்கூற் றடாதுளஞ் சேவின்மைமீன் தேடிக் கொடும்படை கோமான் சிறைபட வேறுளபுத் தேடிக் கொடும்படை யாவெகு நாட்டன் சிறைகளையுந் தேடிக் கொடும்படை மின்கேள்வ னற்றுணை சிக்கெனவே. |
27 |
நெஞ்சமே, பாசக் கயிற்றை, சேர்ந்திருக்கும் (பிடித்திருக்கும்), கையை உடைய, எமன், இந்த உடலாகிய கூட்டை அழிப்பதற்கு முன், இப்போதே சம்பாதித்துக்கொள், ரிஷபம், தனுஷ், ஆடு, மீனம், விருச்சிகம் (முதலிய எல்லா ராசிகளையும்), எல்லா திசைகளிலும் உள்ள அண்டங்களையும் சிருஷ்டித்த, பிரம்ம தேவனை, சிறையில் அடைத்து, வேறு தெய்வங்களின், பக்தியில், மாறிப்போகும் மனப்பான்மையை, அடையாத, ஆயிரம் கண்களை உடைய இந்திரனின், சிறையை நீக்கினவரும், நீரிலும் நெருப்பிலும் சமணர்களால் செலுத்தப்பட்ட, பனை ஏடுகளையும், அவர்கள் செய்த பல கொடுர செயல்களையும், அழித்த, சுவாமியான, தெய்வயானை நாயகனாகிய கந்தக்கடவுளின், நல்ல அனுக்கிரகத்தை, உறுதியாக, (தேடிக்கொள் மனமே) ..
சிக்குறத் தத்தை வழங்கா திழந்து தியங்குவர்தே சிக்குறத் தத்தை வடிவே வெனார்சிவ ரன்பர்செந்தாள் சிக்குறத் தத்தை கடிந்தேனல் காக்குஞ் சிறுமிகுறிஞ் சிக்குறத் தத்தை யனகிலெப் போதுந் திகழ்புயனே. |
28 |
(தினைப்பயிரை உண்ண வந்த) கிளிகளை ஓட்டி, அந்த தினைப்பயிரை, ரட்சிக்கின்ற, பெண்ணாகிய, குறிஞ்சி நிலத்தில் வாழும் குறப்பெண்ணாகிய, அந்த வள்ளிநாயகியின், மார்பின் சுவட்டால், சதாகாலமும், பிரகாசிக்கின்ற புயத்தையுடைய கந்தக்கடவுளே, உன் வேலாயுதத்தை புகழ்கின்ற அடியார்கள், உன் சிவந்த திருவடிகளை, உறுதியாய் பற்றிக்கொள்ளக் கண்டும், சில அஞ்ஞானிகள், தம்முடைய புகழ், நலியும்படி, இழச்சிக்கு இடமானதும், குறைந்து போவதுமாகிய, செல்வத்தை, நல்ல வழியில் தர்மம் செய்யாமல், பல வழிகளில் அவற்றைத் தொலைத்து, வருந்துவார்கள், வடிவேலைத் துதிக்காதவர்களே இவர்கள். ..
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அந்தாதி - Kandhar Andhadhi, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உன்னுடைய, தெளிதரு, தேடிக், கொடும்படை, தத்தை, சிக்குறத், செவிக்குன்ற, வாரண, வள்ளி, உடைய, முத்தமிழ், அந்த, எல்லா, நல்ல, பெருமான், பணிந்து, தினைப்பயிரை, சக்தியாகிய, என்ன, கொடுக்கும், காரணம், செய்த, உள்ள, நிற்கக்