கந்தர் அந்தாதி - அருணகிரிநாதர் நூல்கள்
தித்தவித் தார மனித்தரைத் தேவர் வணங்கமுன்போ தித்தவித் தாரகை மைந்தர்செந் தூர்க்கந்தர் சிந்துரவா தித்தவித் தார முடையா ரருள்வெள்ளந் தேக்கியன்பு தித்தவித் தாரந் தனிவீ டுறத்துக்கச் செவ்வனவே. |
5 |
தித்த என்ற தாள ஜதி விரிவுகளை, தன்னுடைய நடனத்தின் மூலம், அழிவில்லாத நடராஜப்பெருமானுக்கு, மற்ற தேவர்கள் எல்லாம் வணங்கும்படியாக, முன்னொருகாலத்தில் சுவாமி மலையில், உபதேசம் செய்தவரும், விஷேசமான, கிருத்திகை மாதர்களின் புதல்வரும், செந்தில் ஆண்டவரும், நெற்றிப் பொட்டை, சூரியனைப் போல் ஒளி வீசும்படி தரித்துள்ள, அற்புதமான இரண்டு தேவிமார்களை உடைய கந்தப் பெருமான், தன்னுடைய க்ருபா நதியை உள்ளத்தில் நிரப்பி, பக்தியை மூளும்படி செய்து, ஒப்பற்ற மோட்ச வீட்டை நான் அடையும்படி, பல துன்பங்களைத் தருகின்ற, பிறப்பாகிய, அக்னியை, அவியச் செய்தார். ..
செவ்வந்தி நீலப் புயமுரு காபத்தர் சித்தமெய்யிற் செவ்வந்தி நீலத்தை யுற்றருள் வாய் திங்கட் சேய்புனைந்த செவ்வந்தி நீலத் தொருபாகர் போன்ற தினிச்சிந்தியார் செவ்வந்தி நீலத்தி னீடுமுற் றாத திமிரமுமே. |
6 |
சாமந்தி மாலையையும், நீலோற்பல மாலையையும் புனைந்திருக்கும், புயங்களை யுடைய முருகனே, உன் அடியார்களுடைய, இதயமாகிய உண்மை நிலையில், மிகுதியாக பொருந்தி இருக்கும், நீ, க்ருபை கூர்ந்து, அந்த மாலையை நீ கொடுத்து அருள வேண்டும், இளம் பிறையை, அணிந்திருக்கும், சிவந்த மாலைக்காலம், பார்வதி பங்கராகிய பரமசிவனை, போல் விளங்குகிறது, இனிமேல் வரப்போகிறது, உன்னைத் தியானிக்காதவர்கள் அடையும், ஜெனனமாகிய பிறப்பு, வருத்தத்தை விளைவிக்கும், அஞ்ஞான இருளைப் போன்று, நீடித்து நிற்கும், தொலையாத, இராக்காலம். ..
திமிரத் திமிரக் கதரங்க கோபசெவ் வேலகைவேல் திமிரத் திமிரக் ககுலாந் தகவரைத் தேன்பெருகுந் திமிரத் திமிரக் தனையாவி யாளுமென் சேவகனே திமிரத் திமிரக் கனலாய சந்தன சீதளமே. |
7 |
இருள் நிறைந்ததும், திமிங்கலத்திற்கு வாசஸ்தலமாக இருப்பதும் ஆன, சமுத்திரத்தை, கோபித்த, சிவந்த வேலாயுதத்தை உடையவனே, கையிலுள்ள வேலாயுதமும், மழுங்கும்படியாக குற்றிய, ராட்ஸச குலத்திற்கு எமன் போன்றவனே, குற்றிய, மலையிலிருந்து தேன் ஆறு போல் பெருகும், காட்டு ஆற்றின் வளப்பத்தை உடைய வள்ளி நாயகியே, யானையால் வளர்க்கப்பட்ட தேவசேனா நாயகியே, மிகவும், என்னை அணைத்து எனது ஆவியை காப்பாற்ற வேண்டும், என்று சல்லாபம் பேசுகின்ற, வீரனே, பூ சப் பூசப், நெருப்பைப் போல தகிக்கின்றது, சந்தனம் முதலிய குளிர்ந்த வஸ்துக்கள் எல்லாம். ..
சீதளங் கோடு புயங்கைகொண் டார்தந் திருமருக சீதளங் கோடு முடியாளர் சேய்தனக் கேதுளதோ சீதளங் கோடு னிதருமென் பார்தொழுந் தேவிபெறுஞ் சீதளங் கோடு கொடிவேன் மயூரஞ் சிலையரசே. |
8 |
மகாலட்சுமியின், மார்பகத்தையும், சங்கையும், திருத்தோளிலும், திருக்கரத்திலும், தரித்துள்ள திருமாலின் மருகனும், குளிர்ந்த சந்திரனின், அழகிய கோணல் வடிவமான பிறையை (தரிக்கும்), சிரசை உடைய பரமசிவனின், குமாரனுமாகிய முருகனுக்கு, என்ன சொத்து உளது என்று கேட்டால், அருவெறுக்கத்தக்க, செல்வம், குற்றத்தையும், துன்பத்தையும், கொடுக்கும், என்று கருதி அதை விட்டு நீங்கிய ஞானிகள், வணங்கும், வள்ளி நாயகி மூலம், கிடைத்த சீர்வரிசைகள், ஊது கொம்பும், சேவல் கொடியும், வேலாயுதமும், மயில் வாகனமும், மலைகளை ஆளும் உரிமையுமே. ..
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அந்தாதி - Kandhar Andhadhi, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தித்தவித், செவ்வந்தி, திமிரத், சீதளங், கோடு, திமிரக், உடைய, போல், வேலாயுதமும், குளிர்ந்த, குற்றிய, வள்ளி, நாயகியே, பிறையை, மூலம், தன்னுடைய, எல்லாம், தரித்துள்ள, வேண்டும், மாலையையும், சிவந்த