கந்தர் அந்தாதி - அருணகிரிநாதர் நூல்கள்
நூல்
திருவாவி னன்குடி பங்காள ரெண்முது சீருரைச திருவாவி னன்குடி வானார் பரங்குன்று சீரலைவாய் திருவாவி னன்குடி யேரகங் குன்றுதொ றாடல்சென்ற திருவாவி னன்குடி கொண்டதண் கார்வரை செப்புமினே. |
1 |
லட்சுமி தேவிக்கு நாயகனாகிய திருமாலும், நல்ல பெண் தெய்வமாகிய உமையை இடப்பக்கத்தில் வைத்திருக்கும் சிவபெருமானும், மதிக்கும் விதத்தில், பழமையான வேதத்திற்கு, சிறந்த பொருளை விளக்கிய, சாமர்த்தியம் உடைய, இளங்குமாரனாகிய முருகப்பெருமான், நிரந்தரமாக வாசம் செய்யும், வானளாவும் திருப்பரங்குன்றம், சிறந்த செந்தில் பதி, பங்கயம் பொருந்திய பழநி, சுவாமி மலை, அந்தக் கந்தக் கடவுள் திருவிளையாடல் செய்த பல குன்றுகள், நடந்து, பூமி அதிர்கின்ற, யானைக் கூட்டங்கள், வாழ்கின்ற, குளிர்ந்த, கருமேகங்கள் சூழ்ந்த பழமுதிர்சோலையையும், துதி செய்யுங்கள். ..
செப்புங் கவசங் கரபா லகதெய்வ வாவியம்பு செப்புங் கவசங் கரிமரு காவெனச் சின்னமுன்னே செப்புங் கவசம் பெறுவார் கணுந்தெய்வ யானைதனச் செப்புங் கவசம் புனைபுயன் பாதமென் சென்னியதே. |
2 |
ரிஷப வாகனத்தை உடைய, புனித முர்த்தி யாகிய, ஈசனின், குமாரனே, தெய்வீகமாகிய, சரவணப் பொய்கையின் நீரில், செனித்த, தூயனே, சங்கை ஏந்தியுள்ள திருமாலின் மருகனே, என்றெல்லாம், விருதுகள், முன்னதாகவே சொல்லி வர, அதைக் கேட்டவுடன் அந்த இடத்திலேயே, தன்னிலை அழிந்து சானித்தியம் அடையும் பவனி மாதர்களின், (அவசம் ஆவேசம்), பார்வையும், தெய்வயானையின் மார்பாகிய கவசத்தையும், சட்டையாக தரித்துள்ள, தோள்களை உடைய முருகப் பெருமான், திருவடிகள், என் தலையின் மீது வீற்றிருந்தன. ..
சென்னிய மோகந் தவிராமு தோகண் டிகிரிவெண்ணெய்ச் சென்னிய மோகம் படவூ தெனத்தொனி செய்தபஞ்ச சென்னிய மோகந் தரம்புனத் தேன்புணர் தேவைத்தெய்வச் சென்னிய மோகம் பணிபணி யேரகத் தேமொழிக்கே. |
3 |
சிரசின் மேல், கங்கா ஜலத்தின், ஆரவாரம், நீங்காத (சிவபெருமான் உண்ட), நஞ்சமோ, இந்தத் தலைவியின் கண்? சக்கரம் ஏந்தி, நவநீதத்தைத் திருடிய, புல்லாங்குழல் இசைக்கும் (திருமால்), தேவர்கள் எல்லாம் மயக்கம் அடையும்படி, ஊது என்று கட்டளை இட்டு, சப்தத்தைக் கிளப்பிய, இவளின் (இந்தத் தலைவியின்) கழுத்து சங்கு போன்று இருக்கிறது, வள்ளிபுனத்தில் வாழும் வள்ளியைக் கலந்த, குமரக் கடவுளை, தெய்வீகமாகிய சோழ ராஜன், அதிக ஆசையுடன் வணங்கி, திருப்பணி செய்த, சுவாமி மலையில் வாழும் தேன் போன்ற மொழியை உடைய இந்தப் பேண்ணுக்கு. ..
தேமொழி யத்தம் பெறவோந் தனக்கன்று சேணுலகத் தேமொழி யத்தம் சினங்காட் டவுணரைச் சேமகரத் தேமொழி யத்தம் புயமவர் சூடிகை சிந்தவென்ற தேமொழி யத்தம் பதினா லுலகுமந் தித்ததொன்றே. |
4 |
தேன் போன்ற மொழியை உடைய பார்வதியின், பாதியாகிய சிவபெருமான், பெற்றுக்கொள்ளும்படி, பிரணவத்திற்கு, முன்பு, தேவலோகத்தின், நலனெல்லாம் அழியும்படி, தம்முடைய கோபத்தைக் காட்டிய, சூரபத்மாதிகளை, ஆண் சுராக்கள் வாழும், இடமாகிய சமுத்திரத்தில், கணுக்களை உடைய, கரங்களும், தோள்களும், அவர்களின் சிரங்களும், பூமியில் விழும்படி, அவர்களை ஜெயித்து அழித்த, குமரக் கடவுள், உபதேசித்த, பொருள், ஈரேழு பதினாலுலகமும் ஒரே தன்மையாக பொருந்தி இருந்தது. ..
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அந்தாதி - Kandhar Andhadhi, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உடைய, திருவாவி, தேமொழி, யத்தம், செப்புங், சென்னிய, னன்குடி, வாழும், தலைவியின், குமரக், மொழியை, சிறந்த, இந்தத், தேன், சிவபெருமான், கவசம், கவசங், கடவுள், தெய்வீகமாகிய, சுவாமி, மோகம், மோகந், செய்த