கந்தர் அந்தாதி - அருணகிரிநாதர் நூல்கள்
சேதக மொன்று மனாதியுந் தாதையுந் தேடரியார் சேதக மொன்றுஞ் சதங்கையங் கிண்கிணி செச்சையந்தாள் சேதக மொன்றும் வகைபணி யாயினித் தீயவினைச் சேதக மொன்று மறியா துழலுயிர்ச் சித்திரமே. |
49 |
தனது ஐந்து சிரங்களில் ஒன்றை இழந்தவரும், மற்ற தேவர்களைக் காட்டிலும் நிலையான வாழ்க்கையை உடையவருமாகிய, ஆதி காடவுளுமாகி பிரம்மனும் அவனின் பிதாவாகிய திருமாலும், அடிமுடி தேடி கண்டு பிடிக்க முடியாத பரமசிவனின், குமாரனே, நல்ல முறையில் ஒலி செய்யும், சதங்கை, சிரேஷ்டமான, மணிகள், வெட்சி மாலை (இவைகளை எல்லாம் அணிந்த), அழகிய உனது திருவடிகளில், சிவந்த என் இருதயம், தியானித்து ஒருமைப்படும்ப, எனக்கு அருள வேண்டும், தற்போது, முன் செய்த தீ வினையாகிய, சேற்றில், கரை சேறுவதற்கு வழி தெரியாமல், உழலுகின்ற, இச் ஜீவ வாழ்க்கை, பொய்யானது. ..
சித்திர மிக்க னவில்வாழ் வெனத்தெளி யுந்தவவா சித்திர மிக்க னெறிக்கழிந் தேற்கினிச் செச்சைநல்வி சித்திர மிக்க தனக்குறத் தோகை திறத்தமுத்தி சித்திர மிக்க வருளாய் பிறவிச் சிகையறவே. |
50 |
பொய்யாக உள்ள, நாம் காண்கின்ற கனவைப் போன்றது, இந்த பிரபஞ்ச வாழ்க்கை, என்ற மன உறுதியை நல்கும், தவ சித்திகளின் வலிமையை (நாடாமல்), மன்மதனுடைய காம நூல் வழியில், கெட்டுப்போன எனக்கு, இனிமேலாவது, வெட்சி மாலை அணிந்த, சிறந்த, அற்புதமான அழகுடைய, பெருத்த தனபாரமுடைய, மயில் போன்ற வள்ளியின், மணாளனே, இந்த பிறப்பாகிய பந்தம் நீங்க, மோட்சப் பேறானது பரிபூரணமாக கிட்டும்படி, எனக்கு அருள வேண்டும் ..
சிகைத்தோகை மாமயில் வீரா சிலம்புஞ் சிலம்பம்புரா சிகைத்தோகை மாமயில் வாங்கிப் பொருது திசைமுகன்வா சிகைத்தோகை மாமயில் வானில்வைத் தோய்வெஞ் செருமகள்வா சிகைத்தோகை மாமயில் செவ்விநற் கீரர்சொற் றித்தித்ததே. |
51 |
கொண்டையையும், தூவியையும் உடைய, பெரிய, மயிலை வாகனமாக உடையவனே, கிரவுஞ்ச மலையையும், முழங்குகின்ற, சமுத்திரத்தினிடத்தில், ஒழுங்கான, மேல் கிளைகளை உடைய, மா மரமாக நின்ற சூரபத்மனையும், இருளுக்கு இடமாகிய மாயையும், விலக்கி, போர் செய்து, நான்கு முகத்தை உடைய பிரம்மன், பிரணவப் பொருள் தெரியாமல் வேதத்தைக் கற்ற குற்றத்திற்காக, அவனைக் கோபித்து, பெரும் மகிழ்ச்சியை, அழகுக்கு இருப்பிடமான, தேவ லோகத்தில், விளைவித்தவனே, கொடிய போரில் வல்லவனாகிய (பாண்டிய மன்னனின்), குமாரியின்*, குதிரை முகத்தை, தீர்த்தவனே, யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட, மயிலைப் போன்ற அழகுடைய தேவயானையின், கலவி இன்பத்தை விட, நக்கீரர் சொல்லிய திருமுருகாற்றுப்படை, உனக்கு இனிமையாக இருந்தது போலும். ..
தித்திக்குந் தொந்திக்கு நித்தம் புரியுஞ் சிவன்செவிபத் தித்திக்குந் தொந்திக் கறமொழி பாலக தேனலைத்துத் தித்திக்குந் தொந்திக் கிளையாய் விளையுயிர்க் குஞ்சிதைதோல் தித்திக்குந் தொந்திப் பனவேது செய்வினைத் தீவிலங்கே. |
52 |
தித்தி தொந்தி என்கிற தாள வரிசைகளுக்கு ஏற்ப, நடனம் புரிகின்ற, சிவபெருமானின், செவிகளாகிய, வரிசையான புலனிடத்து, நுழையும்படி, பிரணவப்பொருளை, அச்சிவனின் கலக்கம் ஒழியும்படி, உபதேசம் செய்த, குமாரனே, தேன் பண்டங்களின் இனிமையினால், இனிப்புற்று இருக்கும், வயிற்றை உடைய (கணபதிக்கு), தம்பியே, கருப்பையில் உண்டாகிற ஜீவனுக்கும், அழிந்து போகிற, தோலாகிய இந்தப் பைக்கும், சம்பந்தம் ஏற்பட்டு பிறப்பு உண்டாவதற்கு, காரணம், நான் முப்பிறவியில் செய்த, கருமங்களாகிய, கொடிய தளைகள் தானோ? ..
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அந்தாதி - Kandhar Andhadhi, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மிக்க, மாமயில், உடைய, சேதக, சித்திர, தித்திக்குந், சிகைத்தோகை, செய்த, எனக்கு, தொந்திக், அழகுடைய, கொடிய, முகத்தை, தெரியாமல், வெட்சி, குமாரனே, மொன்று, மாலை, அணிந்த, வேண்டும், அருள, வாழ்க்கை