கந்தர் அந்தாதி - அருணகிரிநாதர் நூல்கள்
தேசம் புகல வயிலே யெனச்சிறை புக்கொருகந் தேசம் புகல வணவாரி செற்றவ னீசற்குப தேசம் புகல திகவாச கன்சிறி தோர்கிலன்மாந் தேசம் புகல கமுதவி மானைச் செருச் செய்வதே. |
45 |
ஐந்து தலையில் ஒரு தலையை, இழந்த, பிரம்மன், எனக்கு உறைவிடமும், அடைக்கல ஸ்தானமும், வேலாயுதமே என்று முறையிட, மரக்கலங்களும் அழகும் நிறைந்த, உக்கிர குமார பாண்டியனாக வருணன் ஏவிய கடலை வற்றச் சேய்தவனும், பரமசிவனுக்கு, பிரணவ உபதேசம் செய்த, சிறந்த மொழியை உடைய கந்தக் கடவுள், கொஞ்சங்கூட அறிந்தானில்லை, பிரகாசம் பொருந்திய மாம் பூவாகிய அம்பு, காமக் கலக்கத்தை ஏற்படுத்தி, மான் போன்ற தலைவியுடன், போர் புரிகின்றதை, (சிறிது ஓர்கிலன்) ..
செருக்கும் பராக வயிராவ தத்தெய்வ யானைமணஞ் செருக்கும் பராக தனந்தோய் கடம்ப செகமதநூல் செருக்கும் பராக மநிரு பனந்தந் தெளிவியம்பு செருக்கும் பராகம் விடுங்கடை நாளுந் திடம்பெறவே. |
46 |
போர் புரியும் திறமும், மத்தகமும், கோபமும் உடைய, அயிராவதம் என்ற யானையால் வளர்க்கப்பட்ட, தேவசேனையின், மணம் வீசுவதும் இறுமாப்பும், பூந்தாதுகளும் உடைய, தன பாரத்தில், மூழ்கும், கடப்ப மாலை அணிந்த முருகனே, இவ்வுலகத்தில் (வினையால் ஏற்படும்), பிற சமய நூல்களின் கர்வத்தை, வெல்லுகின்ற, வேதாகம நூல்களை, சிருஷ்டித்தவனே, தாமரை மலர்களில் உதித்த பிரம்மாக்களும், அழிந்து, தேவர்களின் சா£ரத்தை விடுகின்ற, உகாந்த காலத்திலும், நான் நித்யத்வம் அடையும் பொருட்டு, இப்பிரபஞ்சத்தில் முடிவான பொருள் எது என்பதை எனக்கு உபதேசிக்க வேண்டும். ..
திடம்படு கத்துங் கெடீர்கன்ம லோகச் சிலுகுமச்சோ திடம்படு கத்துந் திரித்தம்பு வாலி யுரத்தும்பத்துத் திடம்படு கத்துந் தெறித்தான் மருக திருகுமும்ம திடம்படு கத்துங் கநகங் குனித்தவன் சேயெனுமே. |
47 |
உறுதிநிலை அழியும், யுகாந்த காலத்திலும், அழிவில்லாமல் இருப்பீர்கள், பூர்வ வினையால் நமக்கு ஏற்படும், இவ்வுலகத்தில் நமக்கு ஏற்படும் ஈஷனாத்ரயங்களையும் (மண், பெண், பொன்), ஓயாமல் சோதிட நூல்களை பார்த்து, சதா பிதற்றுவதையும், மாற்றி, தன்பாணங்களை, வாலியின் மார்பின் மீதும், இராவணனுடைய உறுதியான பத்து தலைகளின் மீதும், பிரயோகித்த ஸ்ரீராமனின், மருமகனே, பகை கொண்ட, முப்புரங்களையும், தான் தோன்றிய இடத்திலேயே, விழுந்து அழியும்படி, உயர்ந்த மேருமலையை, வளைத்த சிவபெருமானின், மைந்தனே, என்று துதியுங்கள். ..
சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்தசெந்திற் சேயவன் புந்தி கனிசா சராந்தக சேந்தவென்னிற் சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளிபொன் செங்கதிரோன் சேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே. |
48 |
அழகுடனும், மிகுந்த காதலுடனும், கானாறு பாய்கின்ற, வள்ளிக் காட்டில் வாழ்ந்த, வள்ளியுடன், காந்தர்வ மணம் புரிந்த, செந்தில் குமரக்கடவுளே, வலிமையில் மேம்பட்ட, பகைமை உடைய, இராக்கதர்களை அழித்தவனே, செந்நிறமான தெய்வமே, என்று துதித்தால், செவ்வாய், புதன், சந்திரன், பிரகஸ்பதி, வியாழன், ஆதித்தன், அவனுடைய பிள்ளையாகிய சனீஸ்வரன், (இவர்களின் வக்கிரத்தால் ஏற்படும்) நமது சித்தத்தை மாறுபடச் செய்யும், தீமை இல்லாது போகும். ..
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அந்தாதி - Kandhar Andhadhi, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - செருக்கும், திடம்படு, ஏற்படும், சேயவன், உடைய, புகல, புந்தி, தேசம், பராக, கத்துங், கத்துந், மீதும், நமக்கு, வினையால், போர், எனக்கு, மணம், இவ்வுலகத்தில், நூல்களை, காலத்திலும்