கந்தர் அந்தாதி - அருணகிரிநாதர் நூல்கள்
தீவிலங் கங்கை தரித்தார் குமார திமிரமுந்நீர் தீவிலங் கங்கை வருமான் மருக தெரிவற்றவான் தீவிலங் கங்கை வரவா விரைக்குத் திரிந்துழலுந் தீவிலங் கங்கை யமன்றொட ராமற் றிதம்பெறவே. |
53 |
கரத்தில் அக்னியையும், தோளில் வில்வ மாலையையும், சிரசின்கண் கங்கா நதியையும், புனைந்திருக்கும் சிவபெருமானின், பாலகனே, இருண்ட, (ஊற்று நீர், ஆற்று நீர், மழை நீர்) இவைகளால் உண்டாகிய சமுத்திரம், வரண்டு போகும்படி, வில் வித்தையை காண்பித்த, வல்லவராகிய*, ராமச்சந்திர முர்த்தியின் மருகனே, அறிவதற்கு அரிதாகிய, பெரிய தீவுகளிலும், வேறு பல இடங்களிலும் பஞ்சேந்திரியங்களினால், இச்சையினால் உந்தப்பட்டு, பல புலன் நுகர்ச்சிக்காக, அலைந்து திரிகின்ற, புத்தியின், பலத்த தொடர்ச்சியை, நீ ஒழிக்க வேண்டும், எமன் தொடர்ந்து என்னைப் பிடிக்காமல், உனது திருவடியில் நான் நிலைபெற வேண்டும். ..
திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே. |
54 |
திதத்த ததித்த என்னும் தாள வரிசைகளை, தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற, உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும், மறை கிழவோனாகிய பிரம்மனும், புள்ளிகள் உடைய படம் விளங்கும், பாம்பாகிய ஆதிசேஷனின், முதுகாகிய இடத்தையும், இருந்த இடத்திலேயே நிலைபெற்று, (ஆனால்) அலை வீசுகின்ற, சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசஸ்தலமாகக் கொண்டு), அயர்பாடியில் தயிர், மிகவும் இனிப்பாக இருக்கிறதே என்று சொல்லிக்கோண்டு, அதை மிகவும் வாரி உண்ட (திருமாலும்), போற்றி வணங்குகின்ற, பேரின்ப சொரூபியாகிய, மூலப்பொருளே, தந்தங்களை உடைய, யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட, கிளி போன்ற தேவயானையின், தாசனே, பல தீமைகள் நிறைந்ததும், ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும், மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும், பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய) எலும்பை மூடி இருக்கும் தோல் பை (இந்த உடம்பு), அக்னியினால், தகிக்கப்படும், அந்த அந்திம நாளில், உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து வந்த என்னுடைய புத்தி, உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும். ..
தீதோ மரணந் தவிரும் பிறப்பறுந் தீயகற்புந் தீதோ மரணம் பரமீது தானவர் சேனை முற்றுந் தீதோ மரணந் தனபூசு ரர்திரண் டேத்தியமுத் தீதோ மரண மலையாளி யென்றுரை தென்னுறவே. |
55 |
கொடியனவற்றையே கற்கின்ற ஏ மனமே, தீமை மாத்திரமோ இறப்பும் ஒழிந்து போகும், பிறவியும் நீங்கும் (ஆதலால்), குற்றத்திற்கு, இடம் ஆகிய, கடலின் கண், அசுர சேனை அனைத்தையும், தகித்த, கை வேலை உடையவனே, கருணா மூர்த்தியே, வேள்வி முடியும் காலத்தில் வேதியர்கள் எல்லோரும் திரண்டு கொண்டு ஒரே மாதிரியாகிய உச்ச குரலில் சுப்ரமண்யோம் என்கிற மந்திரத்தை முழக்கி வணங்குகின்ற, முத்துக்குமரனே, இந்த, வேள்வியில் கொடுக்கப்படும் அவிர் பாகத்திற்கு, உரிமையை உடையவனே, குறிஞ்சிக் கடவுளே, என்று துதிப்பாயாக, உன் சித்தம் அழகு பெறவே. ..
தென்ன வனங்கனஞ் சூழ்காத் திரிநக சூலகரத் தென்ன வனங்கனந் தப்பத நீட்டினன் செல்வமுன்பின் தென்ன வனங்கனன் னீற்றாற் றிருத்திய தென்னவின்னத் தென்ன வனங்கனங் கைச்சிலைக் கூனையுந் தீர்த்தருளே. |
56 |
தென்னஞ் சோலைகளும், மேகங்கள், கவிந்து கொண்டிருக்கும், திருத்தணி, பரங்குன்றம், திருச்செங்கோடு என்னும் மூன்று மலைகளுக்கு அதிபனே, கையில் சூலத்தைப் பிடித்திருக்கும், தென் திசைக்கு அதிபனாகிய எமராஜனின், உடல், அழியும்படி, காலால் நீட்டி உதைத்த பரமசிவனின், குமாரனே, முன்னொரு காலத்தில், பின் முதுகில் கூனுடைய, பாண்டியனின் உடல் கூனை, நன்மையே பயக்கும் விபூதியினால், சரி செய்து நிமிர்த்தியது போல, இப்போது, வனப்புடைய, மன்மதனின், அழகிய, கையில் பிடித்த கரும்பு வில்லின், வளைவையும், நீக்கி, அந்த மன்மதன் என்மேல் பாணத்தை எய்தாதபடி நீ அணிந்திருக்கும் மாலையை தந்தருள வேண்டும். ..
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அந்தாதி - Kandhar Andhadhi, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தென்ன, தீவிலங், தீதோ, திதத்தத்தத், கங்கை, வேண்டும், நீர், மரணந், சேனை, கையில், உடல், அந்த, காலத்தில், உடையவனே, நிறைந்ததும், உடைய, தன்னுடைய, என்னும், கொண்டு, மிகவும், மரணம், வணங்குகின்ற, ஆகிய