கந்தர் அந்தாதி - அருணகிரிநாதர் நூல்கள்
தெண்டன் புரந்தர வக்குன்றில் வாழ்கந்த சிந்துவிலுத் தெண்டன் புரந்தர லோகஞ் செறாதுசெற் றோய்களைவாய் தெண்டன் புரந்தர நற்கேள் சிறுவ ரழச்செய்தெம்மைத் தெண்டன் புரந்தர வின்படி நூக்கிய தீ நரகே. |
41 |
வணங்குகிறேன், நாகாசல வேலவனே, சமுத்திரத்தின் கண், மகாபலசாலியான சூரபத்மன், இந்திர லோகத்தை, அழிக்காதபடி, அவனை வதைத்தவனே, (என்னைக் குறைவரக் காப்பாற்றி) தண்டாயுதத்தை உடைய எமன், தொன்று தொட்டு வந்து, அழகிய நல்ல சுற்றத்தாரும், பிள்ளைகளும், என் உடலைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு அழச்செய்து, எம் உயிரைப் பிரித்து, தெள்ளிய தன்மையை உடைய, தன் ஊராகிய எம்புரிக்கு கூட்டிச் சென்று, தனது உத்தரவின்படி, சென்று நுழைக்கும், நரகாக்கினியைக் நீக்குவாய்) ..
தீனந் தினத்து தரச்செல்வர் பாற்சென் றெனக்கென்பதோர் தீனந் தினத்து முதரா னலஞ்சுடச் சேர்ந்துசுடுந் தீனந் தினத்து னிகளைசெங் கோட்டினன் செந்திலந்நீர் தீனந் தினத்து தவத்துப் பிரசதஞ் செய்யவற்றே. |
42 |
புத்தி கெட்ட, கூட்டத்தாரிடை, கொடையாளி என்று பேசப்படும், அவர்களிடத்தில் போய், எனக்கு தருமம் செய்யுங்கள் என்று இரக்க வைக்கும், மிகவும் கொடியதான, வறுமை, தினந்தோறும், வயிற்றில் பசியாகிய அக்னி எரியும் பொழுது, அதனுடன் சேர்ந்து என்னை தகிக்கின்றது, தீமையாகிய, நம்முடைய, நாள்தோறும் வருத்துகின்ற துன்பத்தை, நீக்க வல்ல, சேங்கோட்டு வேலவனின், செந்திலம்பதியிலுள்ள, அழகிய ஜலம், சிவப்பு நிறத்தைக் கொண்ட, பவளம் போன்ற இதழை, இனிய சங்கைப் போல, வெண்மை நிறமாக, கொடுக்க வல்லதோ? ..
செய்யசெந் தாமரை யில்லாத மாதுடன் செந்தினைசூழ் செய்யசெந் தாமரை மானார் சிலம்பிற் கலந்துறையுஞ் செய்யசெந் தாமரை யென்னுங் குமார சிறுசதங்கைச் செய்யசெந் தாமரை சேர்வதென் றோவினை சேய்தொலைத்தே. |
43 |
தினை விளையும் நிலத்தை உடைய, ஒழுங்கான, சிறுகுடி என்னும் நகரத்தாருக்கு, தெரியாமல், அந்தத் தினைப்புனத்தைக் காவல் செய்த வள்ளி நாயகியை, சிவந்த கொல்லைப் பயிரைச் சூழ்ந்து கொண்டிருந்த, ஆடு, தாவுகின்ற கடம்பை என்கிற மான் கூட்டம், மற்றும் வேறு ஜாதி மான்கள், நிரம்பி இருக்கும், குன்றில், அவளைக் காந்தர்வ மணம் செய்து கொண்ட, கந்தக் கடவுளே, அழகிய கொன்றை மாலையை உடைய சிவபெருமான், ஐயனே எனப் போற்றுகின்ற குமாரக் கடவுளே, சிறிய சதங்கை அணிந்த, அழகிய, சிவந்த நின் திருவடித் தாமரையை, நான் அடைவது எந்தக் காலம்? இருவினைகளையும் தூரத்தில் நீக்கிவிட்டு. ..
சேதாம் பலதுறை வேறும் பணிகங்கை செல்வநந்தன் சேதாம் பலதுறை யாதசிற் றாயன் றிருமருக சேதாம் பலதுறை செவ்வாய்க் குறத்தி திறத்தமுத்திச் சேதாம் பலதுறை யீதென் றெனக்குப தேசநல்கே. |
44 |
சேது முதலிய, மற்றும் பல புண்ணிய தீர்த்தங்களும், வணங்குகின்ற, கங்காதேவியின் மைந்தனே, நந்த கோபனின் பாலகனாய் அவதரித்து, வெண்ணை திருடனாய் யசோதையால் கட்டப்பட்ட தம்புக் கயிற்றால் அன்றி, வேறு எதற்கும் கட்டுப்படாத, சிறு இடையனாகிய கிருஷ்ண மூர்த்தியின், செல்வ மருமகனே, சிவந்த, ஆம்பல் பூ நிறம்போலும், உற்ற, சிவந்த வாயை உடைய, வள்ளி மணாளனே, மோட்சத்திற்கும் எனக்கும் உள்ள பெரிய தூரத்தை, தாண்டக்கூடிய, நல்ல பலனைக் கொடுக்கக் கூடிய மார்க்கம், ஏது என்று, எனக்கு நீ உபதேசம் செய்ய வேண்டும். ..
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அந்தாதி - Kandhar Andhadhi, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உடைய, தினத்து, தெண்டன், செய்யசெந், சிவந்த, தாமரை, தீனந், புரந்தர, அழகிய, சேதாம், பலதுறை, வேறு, கடவுளே, எனக்கு, நல்ல, சென்று, கொண்ட, வள்ளி