கந்தர் அந்தாதி - அருணகிரிநாதர் நூல்கள்
சீர்க்கை வனப்பு மலர்வேங்கை யானவன் செஞ்சிலையோர் சீர்க்கை வனப்பு னிதத்தவ வேடன் றினைவளைக்குஞ் சீர்க்கை வனப்பு னமதுருக் காட்டிய சேய்தமிழ்நூற் சீர்க்கை வனப்பு னிமிர்சடை யோன்மகன் சிற்றடிக்கே. |
37 |
மனம் திருந்துதல், அழகாகும், புஷ்பங்கள் உள்ள, வேங்கை மரமாக நின்றவனும், சிறந்த வில்லை உடைய குறவர் கூட்டத்தினர், சந்தேகப்பட்ட தன்மையை, கோபித்து, அந்தக் காட்டில், தூய சன்னியாசி ரூபம் எடுத்தவனும், தினைப் பயிரைக் காவல் காத்து வந்த, சிறந்த வள்ளிக்கு, மலை அரிசி (தினை அரிசி) விளையும் அந்த வயலில், தன்னுடைய உண்மை சொரூபத்தைக் காட்டிய, குமாரக் கடவுளும், தமிழ் இலக்கியத்தில் காணப்படும் 30 சீர்க்கும், தலைவனாக (ஞான ஞானசம்பந்தராக) அவதரித்தவனும், கங்கா ஜலமும், அருகம்புல்லும், விளங்கும் நீண்ட, ஜடாபாரத்தை உடைய சிவகுமாரனாகிய முருகனின், சிறிய திருவடிகளுக்கு (சீர்க்கை வனப்பு) ..
சிற்றம் பலத்தை யரன்புநெய் நூற்றிரி சிந்தையிடுஞ் சிற்றம் பலத்தை வரஞான தீபமிட் டார்க்குப்பரி சிற்றம் பலத்தை யருளுஞ்செந் தூரர் பகைக்குலமாஞ் சிற்றம் பலத்தைப் பதவரந் தோளிலிந் தீவரமே. |
38 |
பர ஆகாச வெளியாகிய, சுவாமியும், பக்தி என்னும், நெய்யை வார்த்து, ஆகம சாஸ்திரம் என்னும் நூலை, திரியாக்கி, இதயமாகிய, தீபம் ஏற்றுகின்ற, தகழியில் இட்டு, ஜீவனுக்கு பற்று கோடாகிய, கிருபை உண்டாகும் பொருட்டு, மெய்ஞான தீபத்தை, ஏற்றின அடியார்களுக்கு, பரிசாக, தனது குக சாயுச்யம் என்னும் பலனை, கிருபை செய்யும், செந்திலாண்டவனின், எதிரிகளை அழித்த, சிறிய பாணம் அல்ல, என் இதயத்தில் தைத்து வருத்துவது, அந்தக் கந்தனின், அழகிய புயத்தில் அணிந்த, நீலோற்பலமாகிய பாணம் தான். ..
தீவர கந்தரி தாம்பகி ராருற வானசெம்பொன் தீவர கந்தரி யாநொந்த போதினிற் செச்சையவிந் தீவர கந்தரி சிந்துரை பாக சிவகரண தீவர கந்த ரிபுதீ ருனதடி சேமநட்பே. |
39 |
வறுமையாகிய பாவத்தை, ஏற்றுக் கொண்டு, மனது உடைந்து வேதனைப் படும்போது, உறவினர் என்று சொல்லப்படும் பெரிய ஐஸ்வரியவான்கள், தீந்து போன, அந்துப்பூச்சியால் அரிக்கப்பட்ட, கேழ்வரகு தானியத்தைக் கூட, தானம் கொடுக்க இசைய மாட்டார்கள் (ஆதலால்), வெட்சி மாலையும் நீலோற்பல மாலை¨யும் புனைந்தவனே, குகையில் வாழும் வள்ளியம்மையையும், யானையால் வளர்க்கப்பட்ட தேவசேனையையும், இருபக்கங்களிலும் வைத்திருப்பவனே, சிவ தியானம் செய்யும், புத்தியை, வரமாக அளிக்கும், கந்தப் பெருமாளே, எதிரிகளை அழிக்கும் உனது திருவடிகளே, பொக்கிஷமும் உறவுமாகும். ..
சேமர விக்கம் படையாக வீசுப தேசமுன்னூற் சேமர விக்கம் பலந்தரு வாய்செரு வாயவெஞ்சூர்ச் சேமர விக்கம் திரித்தாய் வருத்திய வன்றிறென்றல் சேமர விக்கம் புயவாளி விண்டிரை தெண்டிரையே. |
40 |
சிவந்த, சூரியனுக்கு, அர்க்கிய ஜலத்தை, + மந்தேகர்களின் தடையை விலக்கும் ஆயுதமாக, இறைக்கின்றவர்களும், தமக்கு செய்யப்பட்ட காயத்திரி மந்திர உபதேசத்தையும், முப்புரி நூலின் தூய்மையையும், காப்பாற்றுகின்ற மறையோர்களின், யாகத்தில் கொடுக்கும் அவிர் பாகத்திற்கு, அழகிய, நல்ல பலனை கொடுப்பவனே, போர் செய்யும், கொடிய சூரபத்மனின், வைரம் பொருந்திய, மாமிசத்தினால் ஏற்பட்ட, (விக்னம்) இடையூறை, அழித்தவனே, என்னைத் துன்புறுத்துகின்றன, காமச் சின்னமாகிய அன்றில் பட்சியும், மன்மதனின் தேராகிய தென்றலும், மணியோசை கேட்கச்செய்வதால் எருதுகளும், கரும்பு வில்லும், தாமரைப்பூ பாணமும் ஆர்ப்பாட்டத்துடன் முழங்குகின்ற தெள்ளிய அலையை உடைய சமுத்திரமுமே. ..
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அந்தாதி - Kandhar Andhadhi, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - சீர்க்கை, வனப்பு, தீவர, சிற்றம், விக்கம், சேமர, கந்தரி, பலத்தை, செய்யும், என்னும், உடைய, அந்தக், சிறந்த, காட்டிய, அழகிய, பாணம், கிருபை, பலனை, அரிசி, எதிரிகளை, சிறிய