கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர் நூல்கள்
பொக்கக் குடிலிற் புகுதா வகைபுண்ட ரீகத்தினுஞ் செக்கச் சிவந்த கழல்வீடு தந்தருள் சிந்துவெந்து கொக்குத் தறிபட் டெறிபட் டுதிரங் குமுகுமெனக் கக்கக் கிரியுரு வக்கதிர் வேல் தொட்ட காவலனே. |
31 |
பொய்யான இந்த உடல் என்னும் குடிசையில் இனி அடியேன் புகாதபடி, செந்தாமரை மலரினினும் மிகவும் சிவந்த தேவரீரது திருவடியாகிய வீட்டை முத்திப்பேற்றை அடியேனுக்குத் தந்தருள்வீராக! கடலானது வெதும்பி மாமர வடிவாகி நின்ற சூரபன்மன் இரு பிளவாக முறிந்து எறியப்பட்டு குமுகுமுவென இரத்தத்தை உமிழவும் கிரௌஞ்ச மலையை ஊடுருவிச் செல்லவும் ஒளியுடைய வேலாயுதத்தை செலுத்திய காவலனே.
கிளைத்துப் புறப்பட்ட சூர்மார் புடன்கிரி யூடுருவத் தொளைத்துப் புறப்பட்ட வேற்கந்த னே துறந் தோருளத்தை வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைத்த வதைக்குங் கண்ணார்க் கிளைத்துத் தவிக்கின்ற என்னை யெந்தாள் வந்திரட்சிப்பையே. |
32 |
கிளைகளோடு புறப்பட்டு வந்த சூரபன்மனின் மார்புடனே கிரௌஞ்ச மலையையும் ஊடுருவித் தொளைத்துக்கொண்டு வெளிப்பட்ட வேலாயுதத்தை உடைய கந்தப்பெருமானே! துறவிகளின் மனத்தை வளைத்துப் பற்றிக்கொண்டு அவர்கள் துடி துடிக்குமாறு வதைசெய்யும் கண்களையுடைய பெண்களுக்கு மெலிந்து தவிக்கின்ற அடியேனை எப்பொழுது வந்து காத்தருள்வீரோ?
முடியாப் பிறவிக் கடலிற் புகார்முழு துங்கெடுக்கு மிடியாற் படியில் விதனப் படார்வெற்றி வேற்பெருமாள் அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலமடங்கப் பொடியாக் கியபெரு மாள் திரு நாமம் புகல்பவரே. |
33 |
தாண்ட முடியாத பிறவிப் பெருங்கடலில் மூழ்கமாட்டார்கள்; எல்லா நலன்களையும் கெடுக்கும் வறுமைப் பிணியால் வேதனைப்பட மாட்டார்கள்; வெற்றி பொருந்திய வேலாயுதத்தைத் தாங்கியவரும், தம் திருவடிகளை வணங்குகின்ற அடியவர்களுக்கு நன்மையைத் தருகின்ற பெருமாளும், அவுணர் கூட்டம் அழியும் படி தூளாகச் செய்த பெருமாளுமாக விளங்கும் திருமுருகப்பெருமானின் திருநாமத்தை ஓதுபவர்கள்.
பொட்டாக வெற்பைப் பொருதகந்தா தப்பிப் போனதொன்றற் கெட்டாத ஞான கலைதரு வாயிருங் காமவிடாய்ப் பட்டா ருயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக்குங் கட்டாரி வேல்வழி யார்வலைக்கேமனங் கட்டுண்டதே. |
34 |
நுழை வழியாகுமாறு கிரௌஞ்ச மலையுடன் போரிட்ட கந்தக் கடவுளே, அடியேனை விட்டுத் தப்பிப் போனதாகிய அன்பன்றி வேறு ஒன்றிற்கும் எட்டாத மெய்யறிவு வித்தையை தந்தருள்வீராக! பெரிய காமமாகிய தாகம் கொண்டவருடைய உயிரை முறுக்கி எடுத்துக் குடித்துத் தமது பசியைத் தணித்துக் கொள்ளும் வாளாயுதத்தையும் வேலாயுதத்தையும் ஒத்த கண்களையுடைய பெண்களின் வலையினில் அடியேனின் மனம் அகப்பட்டுக் கொண்டு கட்டுப்பட்டு விட்டதே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அலங்காரம் - Kandhar Alangaram, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கிரௌஞ்ச, அடியேனை, கண்களையுடைய, அவுணர், தப்பிப், தவிக்கின்ற, புறப்பட்ட, காவலனே, தந்தருள்வீராக, வேலாயுதத்தை, சிவந்த, வளைத்துப்