கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர் நூல்கள்
பத்திற் துறையிழிந் தாநந்த வாரி படிவதானால் புத்தித் தரங்கந் தௌiவதென் றோபொங்கு வெங்குருதி மெத்திக் குதிகொள்ள வெஞ்சூ ரனைவிட்ட கட்டியிலே குத்தித் தரங்கொண் டமரா வதிகொண்ட கொற்றவனே. |
35 |
பக்தியாகிய அன்பு வழியில் இறங்கி இன்பமாகிய கடலில் மூழ்குவதினால் அடியேனின் புத்தியில் அலை போன்ற அசைவுகள் தெளிவடைவது எக்காலமோ? அலைகள் போன்று பொங்கிப் பெருகும் வெப்பமான அசுரர் இரத்தம் ஆனந்தக் கூத்தாடுமாறு வெய்ய சூரபன்மனின் கிரௌஞ்ச மலை மீது ஏவிய வேலாயுதம் குத்திய மேன்மையினால் தேவர் உலகை மீட்டுக் கொண்ட மன்னர் திருமுருகப்பெருமானே.
கழித்தோடு மாற்றிற் பெருக்கானது செல்வந் துன்பமின்பங் கழித்தோடு கின்றதெக்கால நெஞ் சேகரிக் கோட்டுமுத்தைக் கொழித்தோடு காவிரிச் செங்கோட னென்கிலை குன்றமெட்டுங் கிழித்தோடு வேலென் கிலையெங்ங னே முத்தி கிட்டுவதே. |
36 |
'ஓ' நெஞ்சே, சுழித்து ஓடுகின்ற ஆற்றின் வெள்ளத்திற்கு நிகராகும் செல்வத்தினால் உண்டாகும் துன்பங்களையும் இன்பங்களையும் அறவே நீக்கிப் பற்றற்று விரைந்து செல்வது எந்தக் காலமோ? "யானையின் தந்தத்தில் உண்டாகிய முத்துக்களைக் கொழித்துக் கொண்டு ஓடுகின்ற காவிரி நதியால் சூழப்பட்டுள்ள திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ளவரே" என்று துதிக்கவில்லை, "எட்டு குலமலைகளைப் பிளந்து போகத்தக்க வேலாயுதமே" என்று நீ துதிக்கவில்லை. இவ்வாறு இருக்க உனக்கு முத்தி கிடைப்பது எவ்வாறு?.
கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை மொண்டுண் டயர்கினும் வேன் மறவேன் முதுகூளித்திரள் குண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு டிண்டிண் டெனக்கொட்டி யாடவெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே. |
37 |
கற்கண்டைப் போன்ற சொற்களையுடையவரும் மென்மையானவருமான பெண்களின் காமப் புணர்ச்சியாகிய மதுவினை நிரம்பவும் மொண்டு குடித்து அவ்வெறியால் அறிவு மயங்கினாலும் தேவரீரின் வேலாயுதத்தை அடியேன் மறவேன். முதிர்ந்த பேய்க் கூட்டங்கள் "டுண்டுண் டுடுடுடு.." என்னும் ஒலியை உண்டாக்கிக் கொண்டு பறையடித்துக் கொண்டு கூத்தாடுமாறு வெய்ய சூரபன்மனைக் கொன்று அருளிய சேவகனே.
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங்கும ரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந் தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே. |
38 |
நாட்கள் அடியேனை என்ன செய்யும்? வினை தான் என்ன செய்யும்? அடியேனைத் தேடிவந்த கோள் தான் என்ன செய்யும்? கொடிய இயமனால் தான் என்ன செய்ய முடியும்? குமரக் கடவுளின் இரண்டு திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும், தண்டைகளும் ஆறு திருமுகங்களும் பன்னிருதோள்களும் கடப்ப மலர் மாலையும் அடியேனுக்கு முன் வந்து தோன்றிடுமே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அலங்காரம் - Kandhar Alangaram, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - என்ன, டுடுடுடு, தான், செய்யும், கொண்டு, மறவேன், வந்து, துதிக்கவில்லை, வெய்ய, கழித்தோடு, முத்தி, ஓடுகின்ற, கூத்தாடுமாறு