கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர் நூல்கள்
ஓலையுந் தூதருங் கண்டுதிண்டாட லொழித் தெனக்குத் காலையு மாலையு முன்னிற்கு மேகந்த வேள் மருங்கிற் சேலையுங் கட்டிய சீராவுங் கையிற் சிவந்தசெச்சை மாலையுஞ் சேவற் பதாகையுந் தோகையும் வாகையுமே. |
27 |
திருமுருகப்பெருமானின் பக்தனாகிய அடியேன் இயமனின் ஓலையையும் அவனது தூதரையும் கண்டு கலங்குவதே இல்லை. காரணம், கந்தவேளாகிய திருமுருகப்பெருமான் தம் பீதாம்பரத்தின் மீது கட்டும் கச்சை, அதில் செருகிய சிறிய கூரிய உடைவாள், தோளில் அணிந்த சிவந்த நிறமுடைய வெட்சி மலர் மாலை, சேவற்கொடி, மயில் வாகனம் வெற்றி மாலைகள் ஆகியவற்றோடு எனக்கென்று காலையிலும் மாலையிலும் அடியேன் முன் காட்சியளித்து அருள்புரிகின்றார்.
வேலே விளங்குகை யான் செய்ய தாளினில் வீழ்ந்திறைஞ்சி மாலே கொளவிங்ஙன் காண்பதல் லான் மனவாக்குச்செய லாலே யடைதற் கரிதா யருவுரு வாகியொன்று போலே யிருக்கும் பொருளையெவ்வாறு புகல்வதுவே. |
28 |
வேலாயுதமே விளங்கும் திருகரத்தையுடைய திருமுருகப்பெருமானின் சிவந்த திருவடியில் விழுந்து அன்புடன் வணங்குவதே அப்பரம்பொருளை இவ்வுலகத்தில் காண்பதற்குரிய ஒரே வழியாகும். மனம், வாக்கு, செயல் என்ற முக்கரணங்களால் பெறுதற்கு அரியதாகி அருவமும் உருவமும் ஆகி எப்போதும் மாறுபாடின்றி ஒரு தன்மையாகவே திகழும் பரம்பொருளை வேறு எவ்வாறு எடுத்துச்சொல்வது?
கடத்திற் குறத்தி பிரானரு ளாற்கலங் காதசித்தத் திடத்திற் புணையென யான் கடந் தேன் சித்ர மாதரல்குற் படத்திற் கழுத்திற் பழுத்தசெவ்வாயிற் பனையிலுந்தித் தடத்திற் றனத்திற் கிடக்கும் வெங்காம சமுத்திரமே. |
29 |
குறிஞ்சி நிலத்தில் வாழ்கின்ற குறத்தி வள்ளி அம்மையாரின் கணவராகிய திருமுருகப்பெருமானின் அருளால், கலக்கமடையாத உள்ளத்தின் உறுதியைத் தெப்பமாகக்கொண்டு அடியேன், அழகிய பெண்களின் நிதம்பத்திலும் கழுத்திலும் சிவந்த அதரங்களிலும் மூங்கில் போன்ற தோள்களிலும் நாபியாகிய தடாகத்திலும் கொங்கைகளிலும் கிடக்கின்ற வெப்பமாகிய காமம் என்னும் கடலைத் தாண்டிக் கரையேறினேன்.
பாலென் பதுமொழி பஞ்னெf பதுபதம் பாவையர்கண் சேலென்ப தாகத் திரிகின்ற நீசெந்தி லோன்றிருக்கை வேலென் கிலைகொற்ற மயூர மென்கிலை வெட்சித்தண்டைக் காலென் கிலைமன மேயெங்ங னேமுத்தி காண்பதுவே. |
30 |
பாலை ஒத்தது பெண்களின் சொல், பஞ்சை ஒத்தது பாதம், கண்கள் கெண்டை மீனை ஒத்தவை என்று எண்ணி மயங்கித் திரிகின்ற மனமாகிய நீ, திருச்செந்தூர்த் திருமுருகப்பெருமானின் திருக்கையில் விளங்கும் வேலாயுதமே என்று சொல்கின்றாயில்லை; வெற்றிபொருந்திய மயில் என்றும் சொல்கின்றாயில்லை; வெட்சி மலரையும் தண்டையையும் அணிந்த திருவடிகள் என்கின்றாயில்லை. ஆதலால் நீ முத்திப் பேற்றை அடைவது எங்ஙனமோ?.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அலங்காரம் - Kandhar Alangaram, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - திருமுருகப்பெருமானின், சிவந்த, அடியேன், பெண்களின், திரிகின்ற, ஒத்தது, குறத்தி, சொல்கின்றாயில்லை, யான், அணிந்த, வெட்சி, மயில், வேலாயுதமே, விளங்கும்