கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர் நூல்கள்
யான்றானெனுஞ்சொல் லிரண்டுங் கெட்டாலன்றி யாவருக்குந் தோன்றாது சத்தியந் தொல்லைப் பெருநிலஞ் சூகரமாய்க் கீன்றான் மருகன் முருகன்க்ரு பாகரன் கேள்வியினாற் சான்றாரு மற்ற தனிவௌiக் கேவந்து சந்திப்பதே. |
95 |
"யான்", "தான்" என்னும் இரண்டு சொற்களும் இல்லாமற்போனாலன்றி அத்துவித முக்தி எவருக்கும் தோன்றாது. இது உண்மை. பழமை பொருந்திய பெரிய பூமியை வராகமாய் உருவெடுத்து பிளந்தவராகிய திருமாலின் திருமருகரும் முருகவேளுமாகிய கருணைக்கு உரைவிடமாகிய கிருபாகரனது உபதேசக் கேள்வியினால் சாட்சி ஒருவரும் இல்லாத ஒப்பற்ற ஞான வெளியில் திருமுருகப்பெருமானின் திருவருளால் வந்து கூடுவது அத்துவித முக்தியாகும்.
தடக்கொற்ற வேள்மயி லேயிடர் தீரத் தனிவிடில்ந ணவடக்கிற் கிரிக்கப் புறத்துநின் றோகையின் வட்டமிட்டுக் கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத் திடர்க்கப் புறத்துத் திசைக்கப் புறத்துந் திரிகுவையே. |
96 |
விசாலமான வெற்றியையுடைய திருமுருகப்பெருமானது மயிலே! உலகத்தின் துன்பம் தீரும் பொருட்டு உன்னை எம்பெருமான் தனியே செல்லவிடுவாராயின், வடதிசையில் உள்ள மகாமேருமலைக்கு அப்பாலும் உனது தோகையினால் சுழன்று பறந்து கடலுக்கு அப்பாலும் சூரியனுக்கு அப்பாலும் சக்ரவாளகிரிக்கு அப்பாலும் எட்டுத்திசைகளுக்கு அப்பாலும் நீ உலாவுவாய்!.
சேலிற் றிகழ்வயற் செங்கோடை வெற்பன் செழுங்கலபி ஆலித் தநந்தன் பணாமுடி தாக்க அதிர்ந்ததிர்ந்து காலிற் கிடப்பன மாணிக்க ராசியுங் காசினியைப் பாலிக்கு மாயனுஞ சக்ரா யுதமும் பணிலமுமே. |
97 |
கெண்டை மீன்கள் நிறைந்து விளங்குகின்ற வயல்களால் சூழப் பெற்ற திருச்செங்கோடு என்னும் திருமலையின் மீது எழுந்தருளியுள்ள திருமுருகப்பெருமானது செழுமையான மயிலானது இனிமையான ஒலியெழுப்பி, ஆதிசேடனுடைய பணா மகுடங்களைத் தாக்குதலால் மிகவும் ஒலியுண்டாகி அப்பணா மகுடங்களிலுள்ள நாகமணிகளின் குவியலும் ஆதிசேடன் மீது பள்ளிகொண்டு உலகைக் காத்தருள்கின்ற திருமாலும் அவர்தம் திருக்கரத்திலுள்ள திருவாழியும் திருச்சங்கும் மயிலின் திருவடிகளில் கிடப்பனவாயின!.
கதிதனை யொன்றையுங் காண்கின்றி லேன் கந்த வேல்முருகா நதிதினை யன்னபொய் வாழ்விலன் பாய்நரம் பாற்பொதிந்த பொதிதனை யுங்கொண்டு திண்டாடு மாறெனைப் போதவிட்ட விதிதனை நொந்துநொந் திங்கேயென் றன்மனம் வேகின்றதே. |
98 |
கந்தப்பெருமானே, வேலாயுதத்தையுடைய திருமுருகப்பெருமானே! முக்தி வீட்டை அடைவதற்குரிய நெறியொன்றையேனும் காண்கின்றேன் இல்லை. ஆற்று நீர்ப் பெருக்கு போல நிலையற்ற பொய்யான உலக வாழ்க்கையில் பற்றுடையவனாகி, நரம்புகளால் கட்டப்பட்ட உடலாகிய மூட்டையைச் சுமந்து கொண்டு துன்புறுமாறு பிறக்கச் செய்த விதியினை நினைத்து உள்ளம் நொந்து நொந்து அடியேனின் மனம் வேதனைப்படுகின்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அலங்காரம் - Kandhar Alangaram, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அப்பாலும், மீது, நொந்து, திருமுருகப்பெருமானது, புறத்துங், என்னும், அத்துவித, முக்தி, தோன்றாது