கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர் நூல்கள்
காவிக் கமலக் கழலுடன் சேர்த்தெனைக் காத்தருளாய் தாவிக் குலமயில் வாகன னேதுணை யேதுமின்றித் தாவிப் படரக் கொழுகொம் பிலாத தனிக்கொடிபோல் பாவித் தனிமனந் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே. |
99 |
தேவரீரின் சிவந்த தாமரை மலர் போன்றவையும் கழலுடன் கூடிவையுமான திருவடிகளுடன் அடியேனைச் சேர்த்துக் காப்பாற்றியருள்வீராக! இறகுகளுடன் கூடிய மேன்மையான மயிலை வாகனமாக உடையவரே! உதவி சிறிதும் இல்லாமல் தாவிப் படர்வதற்குக் கொழு கொம்பு இல்லாத தனித்த கொடியைப் போல பாவியாகிய அடியேனுடைய துணையற்ற மனமானது தளர்ந்து வாட்ட முற்றுத் துடிக்கின்றது.
இடுதலைச் சற்றுங் கருதேனைப் போதமி லேனையன்பாற் கெடுதலி லாத்தொண் டரிற் கூட் டியவா கிரௌஞ்ச வெற்பை அடுதலைச் சாதித்த வேலோன் பிறவி யறவிச்சிறை விடுதலைப் பட்டது விட்டது பாச வினைவிலங்கே. |
100 |
வறியவர்க்குத் தருவதைச் சிறிதும் எண்ணாதவனும் அறிவற்றவனுமாகிய அடியேனை அன்பால் தீமையற்றத் தொண்டர்களுடன் சேர்த்து அருளியவரே! கிரௌஞ்ச மலையை அழித்து முடித்த வேலாயுதக் கடவுளின் அருளால், அடியேனின் பிறவித் துன்பம் அற்றுப் போய் இந்த உடலாகிய சிறை வாசம் முடிவுற்று விடுதலையானேன்; பாசத்தாலும் வினையாலும் வந்த விலங்கும் விட்டு ஒழிந்தது.
சலங்காணும் வேந்தர் தமக்கு மஞ்சார் யமன் சண்டைக்கஞ்சார் துலங்கா நரகக் குழியணு கார்துட்ட நோயணுகார் கலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானைக்குங் கந்தனன்னூல் அலங்கார நூற்று ளொருகவி தான் கற்றறிந்தவரே. |
101 |
சினம் கொள்கின்ற அரசர்களுக்கும் அஞ்சமாட்டார்கள், இயமனுடைய போருக்கும் அஞ்சமாட்டார்கள், இருண்ட நரகக் குழியை அடைய மாட்டார்கள், கொடிய நோய்களால் துன்புறமாட்டார்கள், புலி கரடி யானை முதலிய கொடிய விலங்குகள் குறித்தும் மனம் கலங்க மாட்டார்கள், கந்தப்பெருமானது பெருமையைக் கூறும் நல்ல நூலாகிய கந்தரலங்காரத்தின் நூறு திருப்பாடல்களுள் ஒரு திருப்பாடலையேனும் கற்று அதன் மெய்ப்பொருளை உணர்ந்தவர்களே அவர்களாவர்.
திருவடி யுந்தண்டை யுஞ்சிலம் புஞ்சிலம் பூடுருவப் பொருவடி வேலுங் கடம்புந் தடம்புயம் ஆறிரண்டும் மருவடி வாண வதனங்க ளாறும் மலர்க்கண்களுங் குருவடி வாய்வந்தென் னுள்ளங் குளிரக் குதிகொண்டவே. |
102 |
திருமுருகப்பெருமானுடைய திருவடிகளும் அவற்றில் விளங்கும் தண்டை அணிகலனும், உள்ளே மணிகள் ஒலிக்கும் சிலம்பும் கிரௌஞ்ச மலையைத் தொளைத்துப் போர் செய்த கூர்மையான வேலாயுதமும், கடப்ப மலர் மாலையும், அம்மாலைகளுடன் கூடிய விசாலமான பன்னிரண்டு புயங்களும் பொருந்திய அழகு மிக்க ஆறு திருமுகங்களும் குருமூர்த்தியாக எழுந்தருளிவந்து அடியேனுடைய மனம் குளிருமாறு ஆனந்தக் கூத்தாடின.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அலங்காரம் - Kandhar Alangaram, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கிரௌஞ்ச, நரகக், அஞ்சமாட்டார்கள், கொடிய, மனம், மாட்டார்கள், அடியேனுடைய, தாவிப், மலர், கூடிய, சிறிதும், கழலுடன்