கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர் நூல்கள்
குமரா சரணஞ் சரணமனெf றண்டர் குழாந்துதிக்கும் அமரா வதியிற் பெருமாள் திருமுக மாறுங்கண்ட தமராகி வைகுந் தனியான ஞான தபோதனர்க்கிங் கெமராசன் விட்ட கடையோடு வந்தினி யென்செயுமே. |
87 |
குமரப்பெருமானே, தேவரீரின் திருவடிகளில் சரணம், சரணம் அடைக்கலம் என்று கூறியவாறு தேவர் குழுக்கள் துதி செய்கின்ற அமராவதி என்னும் தேவருலகில் எழுந்தருளியுள்ள திருமுருகப்பெருமானின் மேன்மை பொருந்திய திருமுகங்கள் ஆறையும் தரிசித்துப் பக்தித் தமராகி இனிது வாழ்கின்ற ஒப்பற்ற ஞானம் வாய்க்கப்பெற்ற தவச் செல்வர்களுக்கு இயமன் எழுதியனுப்பும் இறுதிக் கால ஓலையானது இங்கு வந்து அவர்களை இனிமேல் என்ன செய்ய முடியும்?.
வணங்கித் துதிக்க அறியா மனித ருடனிணங்கிக்குணங் கெட்ட துட்டனை யீடேற்றுவாய் கொடி யுங்கழுகும் பிணங்கத் துணங்கை யலகை கொண்டாடப் பிசிதர்தம்வாய் நிணங்கக்க விக்ரம வேலா யுதந் தொட்ட நிர்மலனே. |
88 |
தேவரீரின் திருவடிகளைப் பணிந்து திருப்புகழைப் பாடிப் பரவுவதற்கு அறியாத மனிதர்களோடு சேர்ந்து நற்குணம் அற்றுப் போன தீயவனாகிய அடியேனைக் கடைத் தேறச்செய்து அருள்புரிவீராக! போர்க்களத்தில் காக்கைகளும் கழுகுகளும் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொள்ளவும் பேய்கள் துணங்கைக் கூத்தினை மகிழ்ந்து ஆடவும், அரக்கர்கள் தம் வாயிலிருந்து கொழுப்பினை உமிழவும் வீரம் பொருந்திய வேலாயுதத்தை அவர்கள் மீது விடுத்து அருளிய நிர்மலனே!.
பங்கே ருகனெனைப் பட்டோ லையிலிடப் பண்டுதளை தங்காலி லிட்ட தறிந்தில னோதனி வேலெடுத்துப் போங்கோதம் வாய்விடப் பொன்னஞ் சிலம்பு புலம்பவரும் எங்கோ னறியி னினிநான் முகனுக் கிருவிலங்கே. |
89 |
தாமரை மலரில் வாழும் பிரம்ம தேவன் அடியேனைத் தனது விதியேட்டில் எழுத முற்காலத்தில் தமது காலில் விலங்கு பூட்டியதை அறியானோ? ஒப்பற்ற வேலாயுதத்தை எடுத்துப் பொங்கும் படியான கடலானது வாய் விட்டு அலறவும் பொன்னுருவான கிரௌஞ்ச மலை கதறவும் வருகின்ற எமது இறைவனாகிய திருமுருகப்பெருமான் அறிவாராயின் இனிமேல் நான்கு முகங்களுடைய பிரம்ம தேவனுக்கு இரண்டு விலங்குகள் பூட்டப்படும்!.
மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில் சேலார் வயற்பொழிற் செஙfகோடனைச் சென்று கண்டுதொழ நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே. |
90 |
திருமாலின் திருமருகரை, கனக சபையில் திருநடனம் புரியும் சிவபெருமானின் திருப்புதல்வரை, தேவர்களுக்கும் உயர்வான தேவ தேவரை உண்மை அறிவின் வடிவாகிய முழுமுதற்கடவுளை, இவ்வுலகில் கெண்டை மீன்கள் நிறைந்த வயல்களும் சோலைகளும் சூழ்ந்த திருச்செங்கோட்டில் எழுந்தருளியிருக்கும் திருமுருகப் பெருமானை அவருடைய திருக்கோயிலுக்குச் சென்று கண்குளிரக் கண்டு வணங்கும் பொருட்டு அந்தப் பிரம்ம தேவன் அடியேனுக்கு நாலாயிரம் கண்களைப் படைக்கவில்லையே!.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அலங்காரம் - Kandhar Alangaram, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பிரம்ம, வேலாயுதத்தை, தேவன், சென்று, நிர்மலனே, இனிமேல், தேவரீரின், சரணம், பொருந்திய, ஒப்பற்ற, தமராகி