கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர் நூல்கள்
தேங்கிய அண்டத் திமையோர் சிறைவிடச் சிற்றடிக்கே பூங்கழல் கட்டும் பெருமாள் கலாபப் புரவிமிசை தாங்கி நடப்ப முறிந்தது சூரன் தளந்தனிவேல் வாங்கி யினுப்பிடக் குன்றங்க ளெட்டும் வழிவிட்டவே. |
83 |
தேவர்களைச் சிறையிலிருந்து விடுவிக்கும் பொருட்டு, தனது சிறிய திருவடிகளுக்கே அழகான வீரக் கழலை அணிந்து கொண்ட திருமுருகப்பெருமான், குதிரையையொத்த தோகையையுடைய மயிலின் மீது ஏறி நடந்ததும் சூரபன்மனின் சேனை முறிபட்டது; ஒப்பற்ற வேலாயுதத்தை எடுத்து ஏவிய உடனே குலமலைகள் எட்டும் விலகி வழி விட்டன.
மைவருங் கண்டத்தர் மைந்தகந்தாவென்று வாழ்த்துமிந்தக் கைவருந் தொண்டன்றி மற்றறியேன் கற்ற கல்வியும்போய் பைவரும் கேளும் பதியுங் கதறப் பழகிநிற்கும் ஐவருங் கைவிட்டு மெய்விடும் போதுன்னடைக்கலமே. |
84 |
ஆலகால விடத்தை உண்டதனால் கரிய நீல நிறமாகிய கழுத்தை உடைய சிவபெருமானது திருமைந்தராகிய "கந்தப்பெருமானே" என்று துதித்து வாழ்த்துகின்ற இந்தப் பழக்கத்திற்கு வந்த தொண்டினை அல்லாமல் வேறு ஒன்றையும் அறிந்தேனில்லை. அடியேன் கற்ற கல்வியும் நீங்கி, துன்பமுறும் சுற்றத்தினரும் ஊராரும் ஓலமிட்டு அழ, அடியேன் நன்றாகப் பழகியுள்ள ஐம்பொறிகளும் என்னைக் கைவிட்டுச் செல்ல, அடியேன் உயிரும் உடலை விட்டுப் போகும் காலத்து தேவரீரின் அடைக்கலமே ஆவேன்.
காட்டிற் குறத்தி பிரான்பதத் தேகருத்தைப்புகட்டின் வீட்டிற் புகுதன் மிகவௌi தேவிழி நாசிவைத்து மூட்டிக் கபாலமூ லாதார நேரண்ட மூச்சையுள்ளே ஓட்டிப் பிடித்தெங்கு மோடாமற் சாதிக்கும் யோகிகளே. |
85 |
காட்டில் வாழும் குறவர் மடந்தையாகிய வள்ளியம்மையாரின் தலைவராகிய திருமுருகப்பெருமானின் திருவடிகளின் மீது உள்ளத்தைச் செலுத்தினால் முக்தி உலகிற்கு செல்லுதல் மிகவும் எளிதான செயலாகும், அவ்வாறு செய்யாமல் கண் பார்வையை மூக்கின் நுனியில் வைத்து, கபாலத்திற்கும் மூலாதாரத்திற்கும் நேரே பொருந்துமாறு சுவாசத்தை இழுத்து அப்பிராணவாயு வேறு எங்கும் போய் விடாமல் பிடித்து வைக்கும் சாதனையைப் புரியும் யோகிகளே!.
வேலாயுதன் சங்கு சக்ராயுதன் விரிஞ் சன்னறியாச் சூலா யுதன் தந்த கந்தச் சுவாமி சுடர்க்குடுமிக் காலா யுதக்கொடி யோனரு ளாய கவசமுண்டென் பாலா யுதம் வருமோய னோடு பகைக்கினுமே. |
86 |
வேலாயுதத்தை உடைய கந்தப்பெருமான், சங்கையும் சக்கராயுத்தையும் ஆயுதமாகக் கொண்டுள்ள திருமாலும் பிரம்மதேவனும் அறிந்து கொள்ள முடியாத திரிசூலத்தை உடைய சிவபெருமான் பெற்றருளிய திருமைந்தர் ஆவார். ஒளி வீசும் உச்சிக் கொண்டையையும் ஆயுதமாகப் பயன்படுகின்ற காலையும் உடைய சேவலைக் கொடியாகக் கொண்ட கந்தப்பெருமானது திருவருளாகிய கவசம் அடியேனின் உடலில் இருக்கின்றது. ஆதலால் இயமனோடு பகைத்தாலும் என்னிடத்தில் அவனுடைய ஆயுதம் வருமோ?.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அலங்காரம் - Kandhar Alangaram, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உடைய, அடியேன், வேறு, யோகிகளே, கற்ற, மீது, வேலாயுதத்தை, கொண்ட