கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர் நூல்கள்
பெறுதற் கறிய பிறவியைப் பெற்றுநின் சிற்றடியைக் குறிகிப் பணிந்து பெறக்கற் றிலேன் மத கும்பகம்பத் தறுகட் சிறுகட் சங்க்ராம சயில சரசவல்லி இறுகத் தழுவுங் கடகா சலபன் னிருபுயனே. |
67 |
பெறுவதற்கு மிகவும் அருமையான இந்த மானிடப் பிறவியைப் பெற்றும் தேவரீரது சிறிய திருவடிகளை அடைந்து தொழுது முக்தியைப் பெறுவதற்கு கற்றேன் இல்லை. மதநீர் ஒழுகுவதும் கும்பஸ் தலத்தை உடையதும் அசைந்து கொண்டே இருக்கும் தன்மையுடையதும் அஞ்சாமையையும் சிறிய கண்களையும் உடையதுமான யானையை வாகனமாகக் கொண்டு விளங்கும் போர் வீரரே, மலையில் பிறந்து வளர்ந்தவரும் விளையாடல் புரிபவரும் கொடிபோன்றவருமாகிய வள்ளியம்மையாரின் மார்பினை இறுகத் தழுவும், வீரக் கடகங்களை அணிந்துள்ளனவும் மலைபோல் விளங்குவதுமாகிய பன்னிரண்டு புயங்களை உடையவரே!
சாடுஞ் சமரத் தனிவேல் முருகன் சரணத்திலே ஓடுங் கருத்தை யிருத்தவல் லார்க்குகம் போய்ச்சகம்போய்ப் பாடுங் கவுரி பவுரிகொண்டா டப்பசுபதின் றாடும் பொழுது பரமா யிருக்கு மதீதத்திலே. |
68 |
அறநெறிக்கு மாறுபட்டவர்களையும் தீய வினைகளையும் போர் செய்து அழிக்கவல்லதாகிய ஒப்பற்ற வேலாயுதத்தை உடைய திருமுருகப்பெருமானின் திருவடிகளில், பல்வேறு வழிகளில் ஓடித்திரியும் மனத்தை நிலைபெறச் செய்யும் ஆற்றல் உள்ளவரின் மனமானது, அனைத்து யுகங்களும் எல்லா உலகமும் முடிவுக்கு வரும் தறுவாயிலும், பாடல் வல்ல உமாதேவியார் மெச்சிப் புகழ, பசுபதியாகிய சிவபெருமான் ஆடல்வல்லான் நடராஜராக ஆனந்தத் தாண்டவத்தை நிகழ்த்தும் இறுதிக் காலத்திலும் கூட அழியாமல் மேன்மை பெற்று விளங்கும்.
தந்தைக்கு முன்னந் தனிஞான வாளொன்று சாதித்தருள் கந்தச் சுவாமி யெனைத் தேற் றிய பின்னர்க் காலன்வெம்பி வந்திப் பொழுதென்னை யென் செய்ய லாஞ்சத்தி வாளொன்றினாற் சிந்தத் துணிப்பன் தணிப்பருங் கோபத்ரி சூலத்தையே. |
69 |
முன்னாளில் தந்தையாகிய சிவபெருமானுக்கு ஒப்பற்ற மெய்ஞ்ஞானமாகிய வாளாயுதம் ஒன்றைக் கொடுத்து உபதேசித்து அருள் புரிந்த கந்தச்சுவாமிக் கடவுள் அந்த உபதேசத்தால் அடியேனையும் தெளிவித்த பிறகு, இயமன் சினங்கொண்டு இவ்வேளையில் என்னை என்ன செய்ய முடியும் என்று எண்ணி வருவானாயின் திருமுருகப்பெருமான் கொடுத்தருளிய சக்திவேல் ஒன்றைக் கொண்டே எளிதில் தணிக்க முடியாத கோபத்தையுடைய இயமனது முத்தலைச் சூலம் சிதறும் படி அதனை வெட்டி எறிவேன்.
விழிக்கு துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்பு செய்த பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி வழிக்குத் துணைவடி வேலுஞ் செங்கோடன் மயூரமுமே. |
70 |
நமது கண்களுக்குத் துணையாவது திருமுருகப்பெருமானது புனிதமானவையும் மென்மையானவையுமான செந்தாமரை மலர் போன்ற திருவடிகளேயாகும். உண்மையில் ஒரு சிறிதும் குறையாத சொல்லுக்குத் துணையாவது "முருகா" என்று கூறும் அப்பரமபதியின் திருநாமங்களேயாகும். முன்பு செய்த பழியைத் தருகின்ற பாவத்தை அகற்றுவதற்குத் துணையாவது திருமுருகப்பெருமானின் பன்னிரண்டு புயங்களுமேயாகும். அஞ்சுந்தன்மையுடைய தனிமையான வழிக்குத் துணையாவது திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள கந்தப்பெருமானுடைய கூர்மையான வேலாயுதமும் மயிலுமேயாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அலங்காரம் - Kandhar Alangaram, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - துணையாவது, செய்ய, திருமுருகப்பெருமானின், ஒன்றைக், செய்த, வழிக்குத், ஒப்பற்ற, முன்பு, பன்னிரண்டு, பெறுவதற்கு, இறுகத், சிறிய, கொண்டே, போர், விளங்கும், பிறவியைப்