கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர் நூல்கள்
பாதித் திருவுருப் பச்சென் றவர்க்குத்தன் பாவனையைப் போதித்த நாதனைப் போர் வேலனைச்சென்று போற்றியுய்யச் சோதித்த மெய்யன்பு பொய்யோ அழுது தொழுதுருகிச் சாதிதfத புத்திவந் தெங்கே யெனக் கிங்ஙன் சந்தித்ததே. |
63 |
தமது திருமேனியின் இடப் பாகத்தில் உமாதேவியார் உள்ளதால் அந்தப் பகுதி பச்சை நிறமாகக் காட்சியளிக்கும் சிவபெருமானுக்குப் பிரணவ மந்திரத்தை உபதேசித்தவரும் வேலாயுதத்தை உடையவருமான திருமுருகப்பெருமானை அவர் சந்நிதியை அடைந்து போற்றி வணங்கி உய்வு பெறவேண்டி சோதிக்கப் பெற்ற அடியேனின் உண்மையான அன்பு பொய்யாகுமோ? அழுது, தொழுது, உள்ளம் உருகி உறுதி செய்த அறிவானது இவ்விடத்தில் அடியேனுக்கு எவ்வாறு வந்தது?.
பட்டிக் கடாவில் வருமந்த காவுனைப் பாரறிய வெட்டிப் புறங்கண் டலாதுவிடேன் வெய்ய சூரனைப் போய் முட்டிப் பொருதசெவ் வேற்பொரு மாள் திரு முன்புநின்றேன் கட்டிப் புறப்பட டாசத்தி வாளென்றன் கையதுவே. |
64 |
திருட்டுத்தனமுடைய எருமைக் கடாவின் மீது வருகின்ற இயமனே! உலகம் முழுதும் அறியும் படி உன்னைத் துண்டம் செய்து புறம்கொடுத்து ஓடுமாறு செய்வதல்லாமல் விடமாட்டேன். வெப்பத்தையொத்த கொடியவனான சூரபன்மனைத் தாக்கிப் போர் செய்த சிவந்த வேலாயுதத்தையுடைய திருமுருகப்பெருமானது சந்நிதியில் நின்றேன். உன்னுடைய ஆயுதங்கள் எல்லாவற்றையும் கட்டிக் கொண்டு நீ வெளிப்படடா. சக்தியாகிய வாள் எனது கையில் உள்ளது!
வெட்டுங் கடாமிசைத் தோன்றும் வெங்கூற்றன் விடுங் கயிற்றாற் கட்டும் பொழுது விடுவிக்க வேண்டும் கராசலங்கள் எட்டுங் குலகிரி யெட்டும் விட் டோ ட வெட் டாதவெளி மட்டும் புதைய விரிக்குங் கலாப மயூரத்தனே. |
65 |
வெட்டுகின்ற எருமைக் கடாவின் மீது வருகின்ற வெம்மையாகிய இயமன் வீசுகின்ற பாசக் கயிற்றினால் அடியேனைக் கட்டிப் பிடிக்கும்போது தேவரீர் தோன்றி விடுவித்து காப்பாற்றியருளவேண்டும். கைகளையுடைய மலைபோன்ற திக்கு யானைகள் எட்டும் குலமலைகள் எட்டும் தத்தம் இடம் விட்டு விலகும் படி கண்களுக்கு எட்டாத ஆகாய வெளி வரைக்கும் மறையும் படி விரிக்கின்ற தோகையையுடைய மயிலை வாகனமாக உடையவரே!
நீர்க்குமிழக்கு நிகரென்பர் யாக்கைநில்லாது செல்வம் பார்க்கு மிடத் தந்த மின் போலுமென்பர் பசித்துவந்தே ஏற்கு மவர்க்கிட வென்னினெங் கேனு மெழுந்திருப்பார் வேற்குமரற் கன்பிலாதவர் ஞான மிகவுநன்றெ. |
66 |
"இந்த உடலானது நீரின் மீது தோன்றி மறையும் குமிழிக்கு ஒப்பாகும்" என்றும், பொருட்செல்வம் என்றென்றும் நிலைபெற்றிராது; ஆராய்ந்து பார்க்கும் போது அப்பொருட்செல்வம் மின்னலைப் போன்றது என்றும் கூறுவார்கள் அறிஞர்கள். மிகவும் பசியால் வாடி வந்து, "அன்னமிடுங்கள்" என்று யாசிப்பவர்களுக்கு ஏதாவது கொடுங்கள் என்று சொன்னால் எங்காவது போய்விடலாம் என்று எழுந்து போய்விடுவார்கள் சிலர். வேலாயுதத்தையுடைய திருமுருகப்பெருமான்பால் பக்தி இல்லாத அத்தகைய மனிதர்களது போலி ஞானம் மிகவும் நன்றாக இருக்கின்றது!
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அலங்காரம் - Kandhar Alangaram, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மீது, எட்டும், தோன்றி, மறையும், என்றும், மிகவும், வேலாயுதத்தையுடைய, வருகின்ற, கட்டிப், செய்த, எருமைக், கடாவின், போர், அழுது