கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர் நூல்கள்
பொங்கார வேலையில் வேலைவிட் டோ னருள் போலுதவ எங்கா யினும்வரு மேற்பவர்க் கிட்ட திடாமல்வைத்த வங்கா ரமுமுங்கள் சிங்கார வீடு மடந்தையருஞ் சங்காத மோகெடு வீருயிர் போமத் தனிவழிக்கே. |
59 |
நல்வழியிலன்றி தீய வழியில் சென்று கேடு அடையும் மனிதர்களே! மிகுதியாக ஒலிக்கும் கடலில் வேலாயுதத்தை விடுத்தருளிய திருமுருகப்பெருமானின் திருவருளைப் போல, யாசிக்கும் வறியவர்க்கு பொருள் வழங்கியதன் பலன் தப்பாமல் உங்களுக்கு உதவும் பொருட்டு எவ்விடத்தில் ஆயினும் உங்களை நாடி வரும் யாசிப்பவர்களுக்கு தருமம் செய்யாமல், பெட்டியில் பூட்டி வைத்திருந்த பொன்னும், அழகிய வீடும், பெண்களும் உயிர் போகின்ற தனிமையான வழிக்குத் துணையாகுமோ?.
சிந்திக் கிலேனின்று சேவிக்கு லேன்றண்டைச் சிற்றடியை வந்திக் கிலேனொன்றும் வாழ்த்துகி லேன் மயில் வாகனனைச் சந்திக் கிலேன் பொய்யை நிந்திக் கிலேனுண்மை சாதிக்கிலேன் புந்திக் கிலேசமுங் காயக் கிலேசமும் போக்குதற்கே. |
60 |
அடியேனின் உள்ளத்தின் துக்கங்களையும் உடலின் துயரங்களையும் அறவே அகற்றுவதன் பொருட்டு திருமுருகப்பெருமானை நினைக்கின்றேன் இல்லை; அவருடைய சந்நிதியில் நின்று தரிசிக்கின்றேன் இல்லை; தண்டையணிந்த சிறிய திருவடிகளை வணங்குகின்றேன் இல்லை; அவருடைய பெருமைகளில் ஒன்றையாவது சொல்லி வாழ்த்துகின்றேன் இல்லை; மயிலை வாகனமாகக் கொண்ட அப்பரமபதியைச் சந்திக்கின்றேன் இல்லை; பொய்யை இகழ்ந்து நீக்கினேன் இல்லை; மெய்யான செயல் எதுவும் செய்கின்றேன் இல்லை.
வரையற் றவுணர் சிரமற்று வாரிதி வற்றச்செற்ற புரையற்ற வேலவன் போதித் தவா, பஞ்ச பூதமுமற் றுரையற் றுவர்வற் றுடலற் றுயிரற் றுபாயமற்றுக் கரையற் றிருளற் றெனதற் றிருக்குமக் காட்சியதே. |
61 |
கிரௌஞ்ச மலை பிளந்து ஒழியவும், அவுணர்கள் தலையற்று உருளவும், கடல் வற்றவும் அழித்தருளிய குற்றமற்ற ஞானசக்தியை உடையவரான திருமுருகப்பெருமான் அடியேனுக்கு உபதேசித்து அருளிய காட்சியாவது, மண், நீர், தீ, காற்று, வெளி ஆகிய ஐந்து பூதங்களும் நீங்கி, சொல்லற்று, உணர்வும் நீங்கி, உடலும் அறவே இல்லாமல் அழிந்து, உயிரின் தன்மையும் நீங்கி, சாதனங்களும் நீங்கி, கரையற்று, ஆணவ இருளும் தேய்ந்து, "எனது" என்னும் புறப்பற்றும் அகன்று, சமாதி நிலையில் இருக்கும் அருட்காட்சியாகும்.
ஆலுக் கணிகலம் வெண்டலை மாலை யகிலமுண்ட மாலுக் கணிகலம் தண்ணந் துழாய்மயி லேறுமையன் காலுக் கணிகலம் வானோர் முடியுங் கடம்புங்கையில் வேலுக் கணிகலம் வேலையுஞ் சூரனு மேருவுமே. |
62 |
சிவபெருமானுக்கு அணிகலனாக விளங்குவது வெண்மையான கபால மாலையாகும்; திருமாலுக்கு அணிகலனாக விளங்குவது குளிர்ந்த அழகிய துளசி மாலையாகும்; மயில் வாகனத்தின் மீது ஏறி வருகின்ற திருமுருகப்பெருமானின் திருவடிகளுக்கு அணிகலன்களாக விளங்குவன தேவர்களின் மணிமுடிகளும் அவர்கள் சூட்டும் கடப்ப மலர் மாலைகளுமாகும்; திருமுருகப்பெருமானின் திருக்கரத்தில் உள்ள வேலாயுதத்திற்கு அணிகலன்களாக விளங்குவன கடலும், சூரபன்மனும் மகாமேரு மலையுமாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அலங்காரம் - Kandhar Alangaram, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - இல்லை, கணிகலம், நீங்கி, திருமுருகப்பெருமானின், அணிகலனாக, விளங்குவது, விளங்குவன, அணிகலன்களாக, மாலையாகும், அவருடைய, பொருட்டு, அழகிய, மயில், பொய்யை, அறவே