கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர் நூல்கள்
ஆங்கா ரமுமடங் காரொடுங் கார்பர மாநந்தத்தே தேங்கார் நினைப்பு மறப்பு மறார் தினைப் போதளவும் ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே முருக னுருவங்கண்டு தூங்கார் தொழும்புசெய்யா ரென்செய்வார் யம தூதருக்கே. |
55 |
"நான்" என்னும் அகங்காரம், "எனது" என்னும் மமகாரம் ஆகிய இரண்டையும் ஒழித்து அருள் அனுபவத்தில் அடங்கப் பெறமாட்டார்; பொறிபுலன்கள் ஒடுங்கப்பெறமாட்டார்; பேரின்ப வெள்ளத்தில் மூழ்கி நிறைவு பெறமாட்டார்; நினைப்பும் மறப்பும் அற்றச் சமாதி நிலையில் பொருந்தமாட்டார்; ஒரு தினையளவு காலமாயினும் ஓங்காரமாகிய நாதத்துக்குள்ளே ஒளிரும் ஜோதியினுள்ளே திருமுருகப்பெருமானின் திருவுருவத்தின் தரிசனம் கண்டு அப்பரவச நிலையில் தூங்கமாட்டார்; மற்றவர்களுக்குத் தொண்டு செய்யமாட்டார். இயமனுடைய தூதர் வரும் போது என்ன செய்வார்?.
கிழியும் படியடற் குன்றெறிந் தோன்கவி கேட்டுருகி இழியுங் கவிகற் றிடாதிருப் பீரெரி வாய் நரகக் குழியுந் துயரும் விடாப்படக் கூற்றுவனூர்க் குச்செல்லும் வழியுந் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே. |
56 |
வலிமையுடைய கிரௌஞ்ச மலையைப் பிளந்து ஒழியுமாறு வலிமையுடைய வேலாயுதத்தை விடுத்து அருளிய திருமுருகப்பெருமானைப் புகழும் அருட்பாடல்களைக் கேட்டு உள்ளம் உருகி ஏனைய இழிந்த பாடல்களைக் கற்காமல் இருப்பீராக. நெருப்புடன் கூடிய நரகக் குழியையும் அதனால் அனுபவிக்கக் கூடிய துன்பத்தையும் நீரில்லாத வழியே சென்று தவித்து இயமனுடைய ஊருக்குப் போகின்ற கொடிய வழியையும் அதனால் உண்டாகும் துன்பத்தையும் மறந்தவர்களுக்குச் சொல்லுங்கள், மீண்டும் சொல்லுங்கள்.
பொருபிடி யுங்களி றும் விளையாடும் புனச்சிறுமான் தருபிடி காவல சண்முக வாவென் சாற்றிநித்தம் இருபிடி சோகொண் டிட்டுண்டிருவினை யோமிறந்தால் ஒருபிடி சாம்பருங் காணாது மாயவுடம்பிதுவே. |
57 |
"ஓ" மனமே, போர் செய்தற்குரிய பெண் யானையும் ஆண் யானையும் கலந்து விளையாடுகின்ற தினைப் புனத்தில் உள்ள சிறிய மானானது பெற்ற பெண் யானையைப் போன்ற "வள்ளியம்மையாருக்கு நாயகரே ஆறு திருமுகங்களைக்கொண்டவரே" என்று துதித்த பின்னர் யாசிக்கும். வறியவர்களுக்கு ஒரு பிடியளவு சோறாவது கொடுத்து உதவிய பிறகு நீயும் சாப்பிட்டு இருப்பாயாக; நல்வினை, தீவினை ஆகிய வினைகளுடைய நாம் இறந்து விட்டால் மாய உடம்பாகிய இவ்வுடல் ஒருபிடியளவு சாம்பலும் ஆகாது ஒழியும் தன்மையுடையது.
நெற்றாப் பசுங்கதிர்ச் செவ்வேனல் காக்கின்ற நீலவள்ளி முற்றாத் தனத்திற் கினிய பிரானிக்கு முல்லையுடன் பற்றாக்கை யும்வெந்து சங்க்ராம வேளும் படவிழியாற் செற்றார்க் கினியவன் தேவேந்த்ர லோக சிகாமணியே. |
58 |
முதிராத பசுமையான கதிர்களையுடைய சிவந்த தினைப் புனத்தைக் காவல் புரிகின்ற நீல நிறமான வள்ளியம்மையாரின் எப்பொழுதும் முற்றாத கொங்கைக்கு இனிமையான தலைவராக விளங்குபவர் திருமுருகப்பெருமான். கரும்பாலாகிய வில், முல்லை மலராகிய அம்பு, அம்புக்கூடு ஆகியவற்றோடு மன்மதன் வெந்து சாம்பலாகும் படி தம் நெற்றிக் கண்ணால் அழித்தவராகிய சிவபெருமானின் இனிமையான திருமைந்தரான திருமுருகப்பெருமான் தேவேந்திரலோகத்திற்கு முடிபோன்றவராவார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அலங்காரம் - Kandhar Alangaram, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தினைப், துன்பத்தையும், அதனால், சொல்லுங்கள், பெண், திருமுருகப்பெருமான், இனிமையான, யானையும், கூடிய, பகரீர், பெறமாட்டார், ஆகிய, என்னும், நிலையில், இயமனுடைய, துயரும், நரகக், வலிமையுடைய