கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர் நூல்கள்
மலையாறு கூறெழ வேல்வாங்கி னானை வணங்கியபின் நிலையான மாதவஞ் செய்குமி னோநும்மை நேடிவருந் தொலையா வழிக்குப் பொதிசோறு முற்ற துணையுங்கண்டீர் இலையா யினும் வெந்த தேதா யினும்பகிர்ந் தேற்றவர்க்கே. |
51 |
கிரௌஞ்ச மலையின் நடுப்பாகம் பிளவு பட்டு அங்கு வழிதோன்றுமாறு வேலாயுதத்தை ஏவியருளிய திருமுருகப்பெருமானை அன்புடன் வணங்கி, யாசிப்பவர்களுக்குத் தானம் செய்வதாகிய நிலையான பெருந்தவத்தைச் செய்வீர்களாக. இத்தகைய தவத்தின் பயனானது, உங்களைத் தேடிவரும் தொலையாத இறுதி யாத்திரை வழிக்கு கட்டமுது போன்ற பொருத்தமான துணையாக அமையும் என்பதை உணர்வீர்களாக; உம்மிடம் வந்து யாசித்தவர்களுக்கு இலைக் கறியாயினும், வெந்தது எதுவாயினும், பகிர்ந்து கொள்ளுங்கள்.
சிகாராத்ரி கூறிட்ட வேலுஞ்செஞ் சேவலுஞ் செந்தமிழாற் பகரார்வமீ, பணி பாசசங் க்ராம பணாமகுட நிகராட் சமபட்ச பட்சி துரங்க ந்ருபகுமார குமராட் சசபட்ச விட்சோப தீர குணதுங்கனே. |
52 |
சிகரங்களையுடைய கிரௌஞ்ச மலையைப் பிளந்த வேலாயுதத்தையும் செம்மையான சேவற்கொடியையும் செந்தமிழ்ப் பாடல்களால் பாடித் துதிக்கின்ற விருப்பத்தை அடியேனுக்குக் தந்தருள்வீராக. பாசக் கயிறு போன்றதும் போர் செய்வதற்குரியதுமாகிய பாம்பின் படத்தின் மகுடங்களைப் பொடியாக்குவதற்குரிய சிறகுகளுடன் கூடிய குதிரை போன்ற மயிலை வாகனமாக உடையவரே, தலைவரே, குமாரக் கடவுளே, குகையில் வசிப்பவரே, அரக்கர்கள் மீது வெறுப்புடையவரே, தைரியமானவரே, தூய அருட்குணத்தை உடையவரே.
வேடிச்சி கொங்கை விரும்புங் குமரனை மெய்யன்பினாற் பாடிக் கசிந்துள்ள போதே கொடாதவர் பாதகத்தாற் றேடிப் புதைத்துத் திருட்டிற் கொடுத்துத் திகைத்திளைத்து வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே. |
53 |
வேடவர் மகளாகிய வள்ளியம்மையை விரும்பும் திருமுருகப்பெருமானை உண்மையான அன்போடு உருகிப் பாடி, பொருள் உள்ளபோதே பொருளற்ற ஏழைகளுக்குக் கொடாதவர்கள், தாம் நேர்மையற்ற வழியில் தேடிய செல்வத்தை மண்ணில் புதைத்து ஒளித்து வைத்திருந்த போது அப்பொருளைத் திருடர்களிடம் பறி கொடுத்துவிட்டு, திகைத்து உடல் மெலிந்து மனம் வாட்டமுற்று துக்கப்பட்டு தம் வாழ்நாளை வீணாக அழிப்பவர்களே ஆவர்.
சாகைக்கு மீண்டு பிறக்கைக்கு மன்றித் தளர்ந்தவர்கொன் றீகைக் கெனை விதித் தாயிலை யே யிலங் காபுரிக்குப் போகைக்கு நீவழி காட்டென்று போய்க்கடல் தீக்கொளுந்த வாகைச் சிலைவளைத் தோன்மரு காமயில் வாகனனே. |
54 |
இறப்பதற்கும் மீண்டும் திரும்பத் திரும்பப் பிறப்பதற்கும் அல்லாமல் வறுமையால் தளர்வுற்றவர்களுக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவி செய்வதற்கு அடியேனை விதிக்கவில்லையே! "இலங்கை மாநகரத்திற்குச் செல்வதற்கு நீ வழிகாட்டக் கடவாய்" என்று சொன்னதும் அந்தக் கடலானது நெருப்புப் பற்றிக்கொள்ளுமாறு வெற்றியுடைய கோதண்ட வில்லினை வளைத்தவராகிய இராமபிரானாக அவதரித்த திருமாலின் திருமருகரே, மயிலை வாகனமாக உடையவரே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அலங்காரம் - Kandhar Alangaram, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உடையவரே, வாழ்நாளை, வாகனமாக, மயிலை, கிரௌஞ்ச, திருமுருகப்பெருமானை, நிலையான