கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர் நூல்கள்
பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த் தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப் புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித் தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே. |
47 |
திருமுருகப்பெருமானின் வரிசையான அழகிய திருமுகங்கள் ஆறோடு பன்னிரண்டு தோள்களுமான இனிய அமுதத்தை அடியேன் கண்டேன். ஜீவனுடைய செயல்கள் கெட்டு ஒடுங்கிய போது அறிவாகிய தாமரை மலரில் கரைந்து பெருக்கெடுத்து எல்லா உலகங்களையும் கடந்து அவற்றின் கரை மீது புரளுகின்ற மேலான இன்பக் கடலில் திருமுருகப்பெருமானின் வரிசையான அழகிய திருமுகங்கள் ஆறோடு பன்னிரண்டு தோள்களுமான இனிய அமுதத்தைக் கண்டேன்.
பத்தியை வாங்கிநின் பாதாம் புயத்திற் புகட்டியன்பாய் முத்திரை வாங்க அறிகின்றி லேன் முது சூர்நடுங்கச் சத்தியை வாங்கத் தரமோ குவடு தவிடுபடக் குத்திர காங்கேய னேவினை யேற்கென் குறித்தனையே. |
48 |
தீய வழிகளில் சென்று அல்லற்படும் அடியேனின் புத்தியை அவ்வாறு செல்லா வண்ணம் தடுத்து தேவரீரின் திருவடித் தாமரை மலர்களில் அன்புடன் செலுத்தி வீடுபேற்றைப் பெற்று உய்வதற்கு அடியேன் அறியவில்லை. நீண்ட காலம் கொடூரமான செயல்கள் புரிந்த வயதான சூரபன்மன் நடுங்கும் படி சக்தி வேலினை விடுவதற்கு அடியேனால் முடியுமா? கிரௌஞ்ச மலை பொடி படும்படி வேலாயுதத்தால் குத்திய கங்கையின் மைந்தரே, வினையின் விளைவை உடையவனாகிய அடியேன் யாது செய்யவேண்டும் என எண்ணியுள்ளீர்?.
சூரிற் கிரியிற் கதிர்வே லெறிந்தவன் தொண்டர்சூழாஞ் சாரிற் கதியின்றி வேறிலை காண்தண்டு தாவடிபோய்த் தேரிற் கரியிற் பரியிற் றிரிபவர் செல்வமெல்லாம் நீரிற் பொறியென் றறியாத பாவி நெடுநெஞ்சமே. |
49 |
'ஓ' மனமே, சூரபன்மன் மீதும் கிரௌஞ்ச மலை மீதும் ஒளி வீசும் வேலை விடுத்து அருளிய திருமுருகப்பெருமானின் அடியார்களது திருக்கூட்டத்தை அடைவதை விட சிறந்த கதி வேறு ஒன்றும் எங்கும் இல்லை என்பதைக் காண்பாயாக. படைகளுடன் பிரயாணம் செய்து, தேரின் மீதும் யானையின் மீதும் குதிரையின் மீதும் ஏறி உலாவுகின்ற அரசர்களுடைய செல்வம் முழுவதும் நீரின் மீது எழுதிய எழுத்துக்கு ஒப்பாகும் என்று நீ உணரவில்லையே, நீண்ட காலப் பாவியாகிய மனமே!.
படிக்கும் திருப்புகழ் போற்றுவன் கூற்றவன் பாசத்தினாற் பிடிக்கும் பொழுதுவந் தஞ்சலென் பாய்பெரும் பாம்பினின்று நடிக்கும் பிரான்மரு காகொடுஞ் சூர னடுங்கவெற்பை இடிக்குங் கலாபத் தனிமயி லேறு மிராவுத்தனே. |
50 |
தேவரீரின் திருப்புகழை எப்பொழுதும் போற்றி ஓதுபவன் அடியேன். எனவே இயமன் வந்து பாசக் கயிற்றை வீசி அடியேனின் உயிரைப் பிடிக்கும் வேளையில் எழுந்தருளி வந்து, "அஞ்சாதே" என்று கூறி அடியேனை ஆட்கொள்வாயாக. காளிங்கன் என்னும் பெரிய பாம்பின் படத்தின் மீது நின்று கூத்தாடும் திருமாலின் திருமருகரே! கொடிய சூரபன்மன் நடுங்குமாறு கிரௌஞ்ச மலையைத் தன் பெரிய தோகையால் இடித்த தனியொரு மயிலின் மீது ஏறிவரும் சேவகரே!.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அலங்காரம் - Kandhar Alangaram, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மீதும், மீது, அடியேன், திருமுருகப்பெருமானின், சூரபன்மன், கிரௌஞ்ச, வந்து, பெரிய, தேவரீரின், நீண்ட, மனமே, பிடிக்கும், அடியேனின், தாமரை, திருமுகங்கள், அழகிய, வரிசையான, ஆறோடு, பன்னிரண்டு, கண்டேன், இனிய, தோள்களுமான, செயல்கள்