கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர் நூல்கள்
கவியாற் கடலடைத் தோன் மரு கொனைக் கணபணக்கட் செவியாற் பணியணி கோமான் மகனைத் திறலரக்கர் புவியார்ப் பெழத்தொட்ட போர்வேன் முருகனைப் போற்றி யன்பாற் குவியாக் கரங்கள் வந்தெங்கே யெனக்கிங்ஙன் கூடியவே. |
43 |
வானர வீரர்களைக் கொண்டு கடலில் அணைகட்டி அமைந்த இராமபிரானாக அவதரித்த திருமாலின் திருமருகராகிய திருமுருகப் பெருமானைக் கூட்டமான படங்களைத் தலைகளாகக் கொண்ட பாம்பை அணிகலனாக அணிந்துள்ள சிவபெருமானின் திருமைந்தரை, வலியுடைய அரக்கர்கள் வாழும் உலகங்கள் எல்லாம் அச்சத்தால் கதறுதலால் பெரிய ஒலியுண்டாக ஏவிய போர்த்தொழிலில் வல்ல வேலாயுதத்தையுடைய திருமுருகப்பெருமானை அன்போடு வணங்கிக் கும்பிடாத கைகள் அடியேனுக்கு எவ்விதம் இங்கு வந்து சேர்ந்தன?.
தோலாற் கவர்வைத்து நாலாறு காலிற் சுமத்தியிரு காலா லெழுப்பி வளைமுது கோட்டிக்கைந் நாற்றிநரம் பாலார்க்கை யிட்டுத் தசைகொண்டு மேய்ந்த அகம்பிரிந்தால் வேலாற் கிரிதொளைத் தோனிடி தாளன்றி வேறில்லையே. |
44 |
தோலினால் சுவரெழுப்பி பத்து வகை வாயுக்களால் தாங்க வைத்து இரண்டு கால்களாகிய தூண் மீது நிற்கச் செய்து வளைந்த முதுகெலும்பை அமைத்து இரு கரங்களாகிய கைகளைத் தொங்க விட்டு நரம்புகளால் கட்டித் தசையால் மூடிச் செய்த இந்த உடம்பாகிய வீட்டை விட்டு உயிர் பிரியும் போது வேலால் கிரௌஞ்ச மலையைத் தொளைத்தருளிய திருமுருகப்பெருமானின் இரு திருவடிகளைத்தவிர வேறு புகலிடம் இல்லை.
ஒருபூ தருமறி யாத்தனி வீட்டி லுரையுணர்வற் றிருபூத வீட்டி லிராமலென் றானிரு கோட்டொருகைப் பொருபூ தரமுரித் தேகாச மிட்ட புராந்தகற்குக் குருபூத வேலவ னிட்டூர சூர குலாந்தகனே. |
45 |
பஞ்ச பூதங்களாளாகிய உடல் என்னும் வீட்டில் வசிக்காமல் பூதவுடலையுடைய வேறு ஒருவரும் அறியாத ஒப்பற்ற மௌன வளாகமாகிய வீட்டில் சொல்லும் நினைவும் அற்று இருப்பாயாக என்று உபதேசித்து அருளிய திருமுருகப்பெருமான், இரண்டு கொம்புகளையும் ஒரு துதிக்கையையும் உடைய போர் செய்யும் மலையையொத்த யானையின் தோலை உரித்து உத்தரியமாக அணிந்து கொண்டவரும் திரிபுரத்தை எரித்தவருமான சிவபெருமானுக்கு குருவானவரும் வேலையுடையவரும் அநியாயம் செய்த சூரபன்மனின் குலத்தை அழித்தவருமாக விளங்குகின்றார்.
நீயான ஞான விநோதந் தனையென்று நீயருள்வாய் சேயான வேற்கந்த னேசெந்தி லாய் சித்ர மாதரல்குற் றோயா வுருகிப் பருகிப் பெருகித் துவளுமிந்த மாயா விநோத மநோதுக்க மானது மாய்வயதற்கே. |
46 |
தெய்வக் குழந்தை வடிவில் வேற்படையுடன் திருச்செந்தூரில் எழுந்தருளியிருக்கும் கந்தப்பெருமானே, அழகிய பெண்களின் உடலைப் பற்றிய எண்ணத்தில் மூழ்கி அவர்களை நினைந்து உள்ளம் உருகி அதனால் காமம் மேலிட்டு வாடுகின்ற இந்த மாயையாகிய விளையாட்டினால் உண்டாகிய மனத் துன்பமானது அழியும் பொருட்டு தேவரீருடன் அடியேன் இரண்டறக் கலந்து பதிஞானப் பேரானந்த நிலையை அடையும் நற்பேற்றினை அடியேனுக்கு எப்போது தந்தருள்வீர்?.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அலங்காரம் - Kandhar Alangaram, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வீட்டி, வீட்டில், வேறு, செய்த, இரண்டு, விட்டு, அடியேனுக்கு