திருமுருகாற்றுப்படை - பத்துப்பாட்டு
செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச் செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன் கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன் குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன் தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங் . |
210 |
கொடியன் நெடியன் தொடியணி தோளன் நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடு குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல் மருங்கிற் கட்டிய நிலன்நேர்பு துகிலினன் முழவுறழ் தடக்கையின் இயல ஏந்தி |
215 |
மென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்து குன்றுதொ றாடலும் நின்றதன்பண்பே; அதான்று, |
சிவந்த மேனி சிவந்த ஆடை செயலையந்தளிர் ஆடும்காது இடுப்பில் கச்சு காலில் கழல் தலையிலே வெட்சிப்பூக் கண்ணி குழைந்திருக்கும் தலைமயிர் கொம்பு முதலான பல சிறு இசைக்கருவிகளைக் கொண்ட தோள் செம்மறியாட்டுக் கடாமீதும் மயில்மீதும் ஏறிய ஆட்டம் சேவல்கொடி உயர்ந்த உருவம் தொடி அணிந்த தோள் யாழ் போன்ற குரலால் பலரும் பாடும் பாட்டு உடம்பெல்லாம் புள்ளி போட்டுக் கொண்டிருக்கும் மேனி குதிபுரள இடுப்பில் கட்டிய ஆடை கை அடிக்கும் முழவோசைக் கேற்ப அடியெடுக்கும் நடை இப்படிப்பட்ட நிலையில் வேலனோடு சேர்ந்து கொண்டும் மகளிரின் தோளைத் தழுவிக் கொண்டும் தலைமையேற்று முன்னே நின்றுகொண்டும் குன்றிருக்கும் இடமெல்லாம் கூடியாடி நிற்றலும் அவன் பண்பாகும்.
6. பழமுதிர் சோலை
முருகன் இருப்பிடங்கள்
சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும், |
220 |
ஆர்வலர் ஏத்த மேவரும் நிலையினும், வேலன் தைஇய வெறியயர் களனும், காடும் காவும் கவின்பெறு துருத்தியும், யாறும் குளனும் வேறுபல் வைப்பும், சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும், |
225 |
மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும் |
பழமையான முதிர்ந்த மலைசார் சோலைகள் தினையையும் மலரையும் கலந்து தூவி கடா அறுத்து சேவல்கொடி கட்டி ஆங்காங்கே ஊருக்குஊர் கொண்டாடும் சிறப்புமிக்க விழா. ஆர்வம் கொண்டோர் புகழ்வதை விரும்பி அவர்களுக்குக் காட்சிதரும் நிலை வேலன் வெறியாட்டம் நிகழும் களங்கள் இயற்கையான காடுகள் நட்டு வளர்த்த காடுகள்(கா) ஆறு வளைவதால் துருத்தித் கொண்டிருக்கும் துருத்தி நிலம் ஆறு குளம் வளைநிலம் ஊர்மேடை தெரு முட்டுமிடம் பூத்திருக்கும் கடம்ப மரத்தடி பொதுமக்கள் விளையாடும் மன்றம் பொதுமக்கள் கூடிப்பேசும் பொதியில் நிழலுக்காக அமைத்த தூண் மண்டபங்கள் ஆண்டலை என்னும் போர்ச்சேவல் கொடிநட்ட இடம் முதலான இடங்களில் முருகன் ஆண்டாண்டு ஆங்காங்கு குடிகொண்டிருப்பான்.
குறமகளின் வெறியாட்டு
நகரில் முருகனை ஆற்றுப்படுத்தல்
நகரில் முருகனை ஆற்றுப்படுத்தல்
மாண்டலைக் கொடியொடு மண்ணி அமைவர நெய்யொடு ஐயவி அப்பி ஐதுரைத்துக் குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி முரண்கொள் உருவின் இரண்டுடன் உடீஇச். |
230 |
செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடைக் குருதியொடு விரைஇய தூவெள் ளரிசி சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇச் சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப் |
235 |
பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை துணையற அறுத்துத் தூங்க நாற்றி நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி இமிழிசை அருவியொடு இன்னியம் கறங்க. |
240 |
உருவப் பல்பூதத் தூஉய் வெருவரக் குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள் முருகியம் நிறுத்து முரணினர் உட்க முருகாற்றுப் படுத்த உருகெழு வியல்நகர் |
இந்த விழாவின்போது செய்யும் சடங்குகள் வெண்சிறு கடுகை நெய்யில் கலந்து முருகேறிய பெண்ணின்மேல் அப்பி மெனமையாகத் தேய்ப்பர்.(மசாஜ்) குடந்தம் என்னும் சொல் உடலை நன்றாக வளைத்துக் கூப்பிய கைகளால் வணங்குதலையும் மேருதண்ட முத்திரையையும் குறிக்கும். கைகளில் நான்கு விரல்களையும் மடக்கிப் பெருவிரலை உயர்த்திப் பிடித்துக் காட்டுவது தண்ட முத்திரை. இந்த முத்திரையில் கிடைப்பது ஆறு அங்குல உயரம். முருகனுக்கு ஆறுமுகம். முருகேறிய பெண்ணை இந்த இருவேறு நிலைகளில் மாறி இருக்கச் செய்தும் ஒப்பனையாடை உடுத்தச் செய்தும் முருகாற்றுப் படுத்துவர். முருகாற்றுப் படுத்தும் இடம் சிவப்பு நூலால் எல்லை கோலப் பட்டிருக்கும். வெண்பொறி சிதறப் பட்டிருக்கும். யானை இரத்தம் கலந்த அரிசி பலியாகத் தூவப்பட்டிருக்கும். முருகேறிய பெண்ணைப் பிரம்பால் தட்டுவார்கள். மஞ்சள் நீரையும் மணநீரையும் அவள்மீது தெளிப்பார்கள். எருக்கம் பூவை மாலையாகக் கட்டப் போடுவார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமுருகாற்றுப்படை - பத்துப்பாட்டு, இலக்கியங்கள், முருகேறிய, முருகாற்றுப், சிவந்த, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு, என்னும், பொதுமக்கள், காடுகள், இடம், கலந்து, சிதறி, பட்டிருக்கும், செய்தும், வேலன், குடந்தம், அப்பி, முருகன், கட்டிய, மேனி, நறுந்தண், கொண்ட, சங்க, இடுப்பில், முதலான, கொண்டும், கொடியொடு, கொண்டிருக்கும், சேவல்கொடி, தோள், நிலையினும்