திருமுருகாற்றுப்படை - பத்துப்பாட்டு
முருகனை வழிபடுதல்
ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன் |
245 |
கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி வேண்டுநர் வேண்டியாங்கு எய்தனர் வழிபட ஆண்டாண்டு உறைதலும் அறிந்த வாறே |
எதிரொலி கேட்கும் மலைப்பகுதியில் அமைக்கப்பட்ட அந்த முருகன் வீட்டை(குன்றுதோறாடல் என்னும் படைவீட்டை)வாழ்த்திப் பாடுவார்கள். மணப்புகை காட்டிக் குறிஞ்சிப்பண் பாடுவார்கள். அங்கே அருவி ஒலியுடன் இசைக்கருவி முழக்கமும் கேட்கும். அச்சம் தரும் பூக்களைத் தூவுவார்கள். செந்தினையில் குருதி கலந்து நடுக்கம் தரும் வகையில் பரப்புவார்கள். குறமகளின்மேல் முருகன் ஏறியிருப்பதாகக் கூறுவார்கள். இது மாறுபட்ட எண்ணத்தால் தோன்றிய அச்சம். இதனை ஆற்றுப்படுத்துவார்கள்.இது ஒருவகை முருகாற்றுப் படை. அச்சம் தரும்படி அமைக்கப்பட்ட களவீட்டில் இது நிகழும். இந்த வெறிக்களத்தில் சிலம்பை ஆட்டிக்கொண்டு பாடுவர். கொம்பு ஊதுவர். மணி அடிப்பர். போரில் புறமுதுகிடாத யானையை வாழ்த்திப் பாடுவர். அவரவர் விருப்பம் நிறைவேற வழிபாடு செய்வர். இத்தகைய வழிபாடு எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கங் கெல்லாம் முருகன் வாழ்வது எல்லாரும் அறிந்த நெறியாகும்.
முருகனைக் கண்டு துதித்தல்
ஆண்டாண்டு ஆயினும் ஆக; காண்தக. | 250 |
முந்துநீ கண்டுழி முகனமர்ந்து ஏத்திக் கைதொழூஉப் பரவிக் காலுற வணங்கி, 'நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப அறுவர் பயந்த ஆறமர் செல்வ! |
255 |
ஆல்கெழு கடவுட் புதல்வ! மால்வரை மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே! வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ! இழையணி சிறப்பின் பழையோள் குழவி! வானோர் வணங்குவில் தானைத் தலைவ! |
260 |
மாலை மார்ப! நூலறி புலவி! செருவில் ஒருவ! பொருவிறல் மள்ள! அந்தணர் வெறுக்கை! அறிந்தோர் சொல்மலை! மங்கையர் கணவ! மைந்தர் ஏறே! வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ! |
265 |
குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ! பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே! அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக! நசையுநர்க்கு ஆர்த்தும் இசைபே ராள! |
270 |
அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய்! மண்டமர் கடந்தநின் வென்றாடு அகலத்துப் பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள்! பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்! சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி! |
275 |
போர்மிகு பொருந! குரிசில்!' எனப்பல யானறி அளவையின் ஏத்தி ஆனாது, |
ஆங்காங்கே அவன் முந்துறக் கண்டால் அவன் புகழைச் சொல்லி ஏத்தவேண்டும். கையால் தொழுது பரவ்வேண்டும். அவன் காலில் விழுந்து வணங்கவேண்டும். இமயமலையில் நீலம் பூத்திருக்கும் சுனையாகிய சரவண பொய்கையில், ஐவருள் ஒருவராகிய வருணன் (இந்திரன் ?) தன் உள்ளங்கையில் ஏற்றுக்கொள்ள, முருகன் பிறந்தான். வானத்து விண்மீன்களில் கார்த்திகை மீனாக இணைந்து இடம் பெற்றிருக்கும் ஆறு மீன்களும் அவனைப் பெற்ற ஆறு தாய்மார் ஆயினர்.இப்படி ஆறாக அமர்ந்த செல்வனே ! ஆங்கு எழுந்தருளியுள்ள கடவுளாகிய சிவபெருமானின் புதல்வனே ! மலைமகளின் மைந்தனே ! பகைவர்களின் கூற்றுவனே ! வெற்றி தரும் கொற்றவையின் சிறுவனே ! அணிச் சிறப்பினைக் கொண்ட பழையோளின் குழவியே ! வானோர் வணங்கும் விற்படையின் தலைவனே ! மணமாலை பூண்ட மார்பினை உடையவனே ! எல்லா நூல்களையும் அறிந்த புலவனே ! போரில் ஒருவனாகவே போரிட்டு வெற்றி காணும் மள்ள ! அந்தணர்களின் செல்வமே ! அறிவறிந்தோர் சொல்லின் மாலையாகித் திகழ்பவனே ! காதல் மங்கையர்களுக் கெல்லாம் கணவன் ஆனவனே ! வீர மைந்தர்களுக்கு ஏறு ஆனவனே ! வேலேந்திய தடக்கையில் சால்பேந்திய செல்வனே ! விந்த மலையைக்கொன்ற வெற்றியோடு விண்ணைத் தொடும் மலைக்கெல்லாம் தலைமை யுரிமை பெற்ற குறிஞ்சிக் கிழவ ! பலரும் புகழும் நன்மொழிப் புலவர்க்கெல்லாம் ஏறே ! இப்படி அரிய பல பேறுகளைப் பெற்றதால் முருகன் என்னும் பெரும்பெயர் பெற்று விளங்கும் பெரும்பெயர் முருக ! விரும்பியவர்களுக்கு விரும்பியது தரும் புகழிசையின் பேராளனே ! துன்புறுவோருக்கு அளிசெய்து துன்பம் போக்குவதற்கென்றே கையில் கங்கணப் பொலம்பூண் பூண்டுள்ள சேயோனே ! மற்போரில் வென்று ஆடும்போது பரிசில் வேண்டுவோரை யெல்லாம் மார்பில் தாங்கும் உதவியுருவம் கொண்டு உயர்ந்து நிற்கும் வேளே ! பெரியோரெல்லாம் போற்றிப் புகழும் பெரும்பெயர் இயவுளே ! சூரபத்மா என்னும் அச்சக்காரனை அழித்த போர்வீரனே ! அறிவுத் தலைவனாகிய குரிசிலே ! என்றெல்லாம் எனக்குத் தெரிந்த அளவில் போற்றிப் புகழ்ந்து நிறைவடையாதவனாய் இருக்கிறேன். உன்னை அளந்தறிதல் உயிரினமாகிய எங்களுக்கு இயலாத ஒன்று. எனவே உனது அடியை நினைத்து நாடி வந்திருக்கிறேன். உனக்கு ஒப்பானவர் யாரும் இல்லை என்றெல்லாம் சொல்லி விட்டு என் மனத்தில் இருக்கும் விருப்பத்தை வெளிப்படுத்த முயன்ற போது…
கருதி வந்ததை மொழிதல்
'நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின் நின்னடி உள்ளி வந்தனென்; நின்னொடு புரையுநர் இல்லாப் புலமை யோய்!'எனக். |
280 |
குறித்தது மொழியா அளவையிற் குறித்துடன் |
முருகனுக்கு விழாவெடுக்கும் வெறிக்களத்தில் கூளியர் தமது தலைவனுக்கு விழா என்னும் பெருமிதத்தோடு தோன்றினர். அவர்கள் முருகனிடம் பரிந்துரை செய்தனர். முருகா ! உன்னிடம் வேண்டும் இவன் இரங்கத் தக்கவன். மழைபோல் அருள் பொழியத் தக்கவன். முதிர்ச்சி பெற்ற வாயால் ஏதோ சொல்லி இரக்கிறான். இரந்தாலும் இரக்காவிட்டாலும் உன் புகழைக் கேட்டு நயந்து உன்னை நாடி வந்திருப்பவன். என்றெல்லாம் இனியனவும் நல்லனவுமான சொற்களால் எடுத்துச் சொல்லி முருகனைப் புகழ்ந்தனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமுருகாற்றுப்படை - பத்துப்பாட்டு, பெரும்பெயர், முருகன், என்னும், தரும், இலக்கியங்கள், சொல்லி, அவன், திருமுருகாற்றுப்படை, அச்சம், என்றெல்லாம், பத்துப்பாட்டு, பெற்ற, அறிந்த, வெற்றி, முருக, தாங்கும், புகழும், நாடி, தக்கவன், உன்னை, போற்றிப், செல்வனே, ஆனவனே, இப்படி, ஐவருள், வாழ்த்திப், பாடுவார்கள், அமைக்கப்பட்ட, கேட்கும், சங்க, ஆண்டாண்டு, வெறிக்களத்தில், பாடுவர், மள்ள, குறிஞ்சிக், செல்வ, கெல்லாம், போரில், வழிபாடு, கிழவ