திருமுருகாற்றுப்படை - பத்துப்பாட்டு
4. திரு ஏரகம்
இரு பிறப்பாளரின் இயல்பு
இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை . |
180 |
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல, |
அந்தணர் வழிபடும் முறை
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண் புலராக் காழகம் புலர உடீஇ, உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து |
185 |
ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி நாஇயல் மருங்கில் நவிலப் பாடி விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிந்துஉவந்து ஏரகத்து உறைதலும் உரியன்: அதான்று, |
இருபிறப்பாளர் வழிபாடு இங்குச் சிறப்பு மிக்கது. இவர்கள் அறுவகைப்பட்ட சமய நெறிகளிலிருந்து வழுவாதவர்கள். சிவன் பெருமாள் என்று இருவரை வழிபடும் பல்வேறு தொல்குடியைச் சேர்ந்தவர்கள். 48 ஆண்டு இளமையை இல்லறத்தில் கழித்த பின்னர் அவர்கள் அறம் சொல்லி முத்தீ வளர்க்கும் கொள்கையில் மூன்று வகைக் குறிக்கோள் உண்டு. இறந்தோருக்கும் இறைவனுக்கும் உணவு சமைப்பதே முத்தீ. பூணூலுக்குமுன் பூணூலுக்குப்பின் என்று அவர்களுக்கு இரண்டு பிறப்புக்கள் உண்டு. முப்புரிநூல் ஒன்பது கொண்டது அவர்களின் பூணூல். இவர்கள் நல்லநேரம் பார்ப்பவர்கள். ஈர ஆடையை உடுத்திக்கொண்டு புலரவிடுபவர்கள். உச்சியில் கைகளைக் கூப்பித் தாம் வழிவழியாகச் சொல்லக் கேட்ட ஆறெழுத்து மந்திரத்தைத் தாமும் சொல்லி முருகனைப் புகழ்ந்து வாய்விட்டுப் பாடுவர். மணம் மிக்க மலர்களைத் தூவிப் பூசை செய்வர். இதனை விரும்பி முருகன் ஏரகத்தில் வாழ்தலும் உண்டு. அதுவன்றி…
5. குன்றுதோறு ஆடல்
குரவைக் கூத்து
பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன் . | 190 |
அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு வெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன் நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின் கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர் நீடமை விளைந்த தேக்கள் தேறல் |
195 |
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து தொண்டகச் சிறுபறைக் குரவை அயர |
வேலன் (அடி 190) என்பவன் சாமியாடி அவன் பூக்கண்ணியைத் தலையில் அணிந்திருந்தான். பூக்கூடையில் கொண்டுவந்த குளவி வெண்கூதாளம் ஆகிய பூக்களுக்கிடையே நறைக்காயை இடையிலே வைத்துத் தொடுத்த கண்ணி அது. மார்பில் சந்தனம் அணிந்திருந்தான். இனிப்புக் கள்ளாகிய தேறலைத் தன் குன்றகச் சிறுகுடியிலுள்ள சுற்றத்தாருடன் சேர்ந்து உண்ட களிப்போடு தொண்டகச் சிறுபறை முழக்கத்துடன் குரவை ஆடினான். தேறல் கானவரின் மூங்கில் குழாயில் விளைந்தது. விலங்குகளை வேட்டையாடும்போது செய்யும் கொடுந்தொழிலை மறக்கக் கானவர் குடிக்கப் பயன்படுத்தும் தேறல் அது
குன்றுதோறும் ஆடல்புரியும் தன்மை
விரலுளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கால் குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி இணைத்த கோதை அணைத்த கூந்தல். |
200 |
முடித்த குல்லை இலையுடை நறும்பூச் செங்கால் மராஅத்த வாலிணர் இடையிடுபு சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு |
205 |
வேலனுடன் சேர்ந்து மகளிரும் குரவை ஆடினர். அவர்கள் தம் கூந்தலை விரல்களால் கோதி உலர்த்திக் கொண்டனர். காட்டிலும் சுனையிலும் பூத்த பூமாலைக் கண்ணியைத் தலையில் சூடிக் கொண்டிருந்தனர். அணைத்துப் பின்னிய அவர்களின் கூந்தலானது பூங்கோதை இணைத்துப் பின்னப்பட்டிருந்தது. குல்லாத்தழை பூத்திருக்கும் வெண்கடம்பு, மரத்தளிர், மாந்தழை ஆகியவற்றைச் சேர்த்துக் கட்டிய தழையாடையை அவர்கள் தம் அல்குல் மறைய உடுத்தியிருந்தனர். வண்டு மொய்க்கும் நிலையில் அந்தத் தழையாடை புத்தம் புதிதாக இருந்தது. மயில் போன்ற அவர்களின் மடநடையோடு சேர்ந்து வேலன் குரவை ஆடினான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமுருகாற்றுப்படை - பத்துப்பாட்டு, குரவை, இலக்கியங்கள், திருமுருகாற்றுப்படை, வேலன், தேறல், உண்டு, சேர்ந்து, அவர்களின், பத்துப்பாட்டு, தலையில், சங்க, குன்றகச், அணிந்திருந்தான், கண்ணி, பூத்த, ஆடினான், பல்வேறு, அல்குல், கானவர், முத்தீ, சொல்லி, இவர்கள், உடீஇ, ஒன்பது, தொடுத்த, வழிபடும், இடையிடுபு, ஆறெழுத்து