பொரும்பாணாற்றுப்படை - பத்துப்பாட்டு
திமிலர் முதலியோர் உறையும் பட்டினம்
வாலுளைப் புரவியொடு வடவளந் தரூஉம் | 320 |
நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பை மாட மோங்கிய மணன்மலி மறுகிற் பரதர் மலிந்த பல்வேறு தெருவிற் சிலதர் காக்குஞ் சேணுயர் வரைப்பி னெல்லுழு பகட்டொடு கறவை துன்னா |
325 |
ஏழகத் தகரோ டெகினங் கொட்குங் |
நீர்ப்பெயற்று என்னும் துறைமுகத்தில் நாவாய்க் கப்பல்கள் சூழ்ந்திருந்தன. வெள்ளைக் குதிரைகள் அதில் வந்து இறங்கின. அத்துடன் வடநாட்டுச் செல்வ வளங்களும் வந்திறங்கின. அது நீர் வளம் மிக்க ஊர். அங்கே மாட மாளிகைகள் ஓங்கிய மணல் பரந்த குறுந்தெருக்கள். (பரதர் எனப்படுவோர் கப்பல் வாணிகர்) அவர்கள் வாழ்ந்த பெருந்தெருக்களில் வானளாவிய பெரும்பெரும் மாளிகைகள். அப்பகுதியில் சிலதர் என்னும் வில்லேந்திய அரசுக் காவலர்கள் காவல்பணியை மேற்கொண்டிருந்தனர். அங்கே வயலை உழுத கறவை காடுகளோ பால்மாடுகளோ இல்லை. மாறாக, சண்டையிடும் செம்மறியாட்டுக் கடாக்களும், சேவல்களும் ஏவிவிடப்பட்டுச் சுழன்று விளையாடிக் கொண்டிருந்தன. அவற்றைப் பரதர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்
கூழுடை நல்லிற் கொடும்பூண் மகளிர் கொன்றை மென்சினைப் பனிதவழ்பவை போற் பைங்கா ழல்கு னுண்டுகி னுடங்க மால்வரைச் சிலம்பின் மகிழ்சிறந் தாலும் |
330 |
பீலி மஞ்ஞையி னியலிக் கால தமனியப் பொற்சிலம் பொலிப்ப வுயர்நிலை வான்றோய் மாடத்து வரிப்பந் தசைஇக் கைபுனை குறுந்தொடி தத்தப் பைபய முத்த வார்மணற் பொற்கழங் காடும் |
335 |
பட்டின மருங்கி னசையின் முட்டில் |
செல்வ வளம் கொழிக்கும் அங்குள்ள வானளாவிய, ஓங்கி உயர்ந்த மாடங்களில் மகளிர் வரிப்பந்து விளையாடுவர். அந்த மகளிர் இடுப்பில் மென்மையான ஆடைகளின் மேல் முத்தாரங்களைக் கோத்து அணிந்திருப்பர். கையிலே பூண் வளையலும், காலிலே தங்கச் சிலம்பும் கொண்ட அவர்கள் பொன்னணிகள் ஒலிப்ப அவர்கள் பந்தாடும்போது மலைக்காடுகளில் மகிழ்ச்சி பொங்க மயில்கள் ஆடுவது போல இருக்கும். கொன்றைப் பூக்கள் பனியில் தவழ்ந்து ஆடுவது போலவும் இருக்கும். மாடங்களில் ஓடியாடிக் கையால் தட்டி விளையாடுவது வரிப்பந்து. மணல் வெளியில் விளையாடுவது பொற்கழங்கு. முத்துக்கள் கிடக்கும் மணலில் பொன்னால் செய்த கழங்குகளைத் தூக்கிப் போட்டு விளையாடும்போது அவர்களது கைகளில் உள்ள வளையல்கள் தத்தித் தத்தி ஆடும். பந்து விளையாட்டில் சலிப்பு தோன்றும் போது கழங்கு விளையாடினர் போலும். பட்டினப் பகுதியில் ஆண்கள் கண்டு மகிழும் ஆட்டுச் சண்டை, கோழிச் சண்டை ஆகியவற்றையும், மகளிர் விளையாடும் பந்து, கழங்கு ஆட்டங்களையும் ஆசையோடு பார்த்து மகிழலாம். பசிக்கும்போது உணவை நாடிச் செல்லலாம்.
பட்டினத்து மக்களின் உபசரிப்பு
பைங்கொடி நுடங்கும் பலர்புகு வாயிற் செம்பூத் தூய செதுக்குடை முன்றில் கள்ளடு மகளிர் வள்ள நுடக்கிய வார்ந்துகு சின்னீர் வழிந்த குழம்ப |
340 |
னீர்ஞ்சே றாடிய விரும்பல் குட்டிப் பன்மயிர்ப் பிணவொடு பாயம் போகாது நென்மா வல்சி தீற்றிப் பன்னாட் குழிநிறுத் தோம்பிய குறுந்தா ளேற்றைக் கொழுநிணத் தடியொடு கூர்நறாப் பெறுகுவிர் |
345 |
பரதர் அன்னக்கொடி கட்டி உணவு படைப்பார்கள். உணவு படைக்கும் இடம் பலர் புகு வாயிலைக் கொண்டது. அது செம்மண்ணால் மெழுகப் பட்டிருக்கும். (இக்காலத்தில் சிவப்புக் கம்பள வரவேற்பு தரப்படுவது போல) அன்று அங்கே சிவப்புப் பூக்களை முற்றத்தில் விரித்துப் பரப்பி விருந்தினரை வரவேற்பர். மகளிர் கள் காய்ச்சுவர் அதனை வள்ளத்தில் தருவார்கள். வழிய வழிய ஊற்றி அவர்கள் கள்ளைத் தருவர். அப்போது வழிந்து உகும் கள் நிலத்தைக் குழம்பாக்கிச் சேறாக்கும். அந்தச் சேற்றில் பன்றிக் குட்டிகள் தம் தாயோடு புரளும். பாயம் என்பது பன்றிகளுக்கு அதனை வளர்ப்போர் வார்க்கும் கஞ்சி. இங்குக் கள்ளுச் சேற்றில் புரளும் பன்றிகள் தமக்கு வார்க்கும் கஞ்சியை நாடிச் செல்வதில்லை அன்னக்கொடி கட்டி உணவளிக்கும் இடத்தில் பாயும் கஞ்சியைப் பருகிவிட்டுப் பல நாள் அந்தக் குழிகளிலேயே ஆண்-பன்றியையும் பெண்-பன்றியும் சேர்த்துகொண்டு தங்கி விடும். அங்குச் சென்றால் பன்றிக் கறியுடன் நறாக் கள்ளும் பெறலாம்.
ஓடும் கலங்களை அழைக்கும் கடற்கரைத் துறை
வான மூன்றிய மதலை போல வேணி சாத்திய வேற்றருஞ் சென்னி விண்பொர நிவந்த வேயா மாடத் திரவின் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி யுரவுநீ ரழுவத் தோடுகலங் கரையுந் |
350 |
துறைபிறக் கொழியப் போகிக் கறையடிக் |
விண்ணைத் தொடுவது போல உயர்ந்தோங்கிய மாடத்தின் மேலுள்ள திறந்த வெளியில், வானளாவ ஊன்றிய தூண் போல, ஏணி சாத்தி ஏறமுடியாத உயரத்தில், நடப்பட்டிருக்கும் கம்பத்தில் சுடர் விட்டு எரியும் ஞெகிழியைக் (பந்தத்தைக்) கட்டியிருப்பர். அது கடலில் செல்லும் பெரிய கப்பல்களை (கலம்) இட அடையாளம் காட்டி அழைக்கும்.
தோப்புக் குடிகளில் நிகழும் உபசாரம்
குன்றுறழ் யானை மருங்கு லேய்க்கும் வண்டோட்டுத் தெங்கின் வாடுமடல் வேய்ந்த மஞ்சண் முன்றின் மணநாறு படப்பைத் தண்டலை யுழவர் தனிமனைச் சேப்பிற் |
355 |
கலங்கரை விளக்குப் பகுதியைத் தாண்டிச் சென்றால் மஞ்சள் விளையும் படப்பைப் பகுதியில் தண்டலை உழவர்களின் தனி மனைகளை அடையலாம். அந்தத் தனிமனை குன்றுபோல் உயர்ந்திருக்கும். யானைக்கால் போல் நான்கு கால் நட்டு அதன் பரண்மீது கட்டப்பட்டிருக்கும். அது தென்னங் கீற்றுகளால் வேயப்பட்டிருக்கும். அங்கு சென்றால் விருந்துணவு பெறலாம்.
றாழ்கோட் பலவின் சூழ்சுளைப் பெரும்பழம் வீழி றாழைக் குழவித் தீம்நீர்க் கவைமுலை யிரும்பிடிக் கவுண்மருப் பேய்க்குங் குலைமுதிர் வாழைக் கூனி வெண்பழந் திரளரைப் பெண்ணை நுங்கொடு பிறவுந் |
360 |
தீம்பஃ றார முனையிற் சேம்பின் முளைப்புற முதிர்கிழங் கார்குவிர் பகற்பெயன் |
தண்டலை உழவர் விருந்தில் பலாச்சுளை, பதநீர், இளநீர், மரத்திலேயே பழுத்த வாழைப்பழம், பனை நுங்கு, முதிர்ந்த சேப்பங் கிழங்கு அவியல் முதலானவை படைக்கப் படும். பலாப்பழம் தாழ்ந்த வேரில் பழுத்தது. விழுதில்லாத தாழை என்பது தென்னை மரத்தையும், பனை மரத்தையும் குறிக்கும். இந்தத் தாழையின் இளங் குருத்துகளைச் சீவிப் பெற்ற வடிநீர் பருகலாம். குலையிலேயே முதிர்ந்து கனிந்து தொங்கும் வாழைப்பழம் தரப்படும். உரித்தால் வெள்ளையாக இருப்பதால் வாழைப்பழத்தை வெண்பழம் என்று பாடல் குறிப்பிடுகிறது. இது இரண்டு முலைக்காம்புகள் கொண்ட பெண்யானையின் தந்தம் போல் இருக்கும். அடி பருத்து ஓங்கியுள்ள பனைமரத்தின் நுங்கும் வெண்பழம் போன்றது. இவற்றை உண்டு சலிக்கும் போது நல்லுணவு (நெல்லஞ்சோறு) பெறலாம். அந்தச் சோற்றுக்குச் சேப்பங் கிழங்குக் குழம்பு. இப்படி வயிறார உண்பீர்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொரும்பாணாற்றுப்படை - பத்துப்பாட்டு, மகளிர், பரதர், இலக்கியங்கள், அங்கே, பெறலாம், பொரும்பாணாற்றுப்படை, இருக்கும், தண்டலை, சென்றால், பத்துப்பாட்டு, அந்தச், சேற்றில், வெண்பழம், வழிய, பன்றிக், கட்டி, உணவு, அன்னக்கொடி, புரளும், சேப்பங், அழைக்கும், வாழைப்பழம், பாயம், மரத்தையும், என்பது, வார்க்கும், போல், போது, வளம், மாளிகைகள், மணல், வானளாவிய, செல்வ, என்னும், சங்க, சிலதர், கறவை, மாடங்களில், வரிப்பந்து, கழங்கு, பகுதியில், சண்டை, பந்து, வெளியில், கொண்ட, ஆடுவது, விளையாடுவது, நாடிச்