முல்லைப்பாட்டு - பத்துப்பாட்டு
அரசனுக்கு அமைத்த பாசறை
வேறு பல் பெரும் படை நாப்பண், வேறு ஓர், நெடுங் காழ்க் கண்டம் கோலி, அகம் நேர்பு, |
தலைவனுக்கன்று தனிப் பாடிவீடு இதுந்தது. அது உயர்ந்த தூண் நிறுத்திய அகம். பல்வேறு படைவீரர்கள் அதனைக் காவல் புரிந்தனர்.
மங்கையர் விளக்குகளை ஏந்துதல்
குறுந்தொடி முன்கை, கூந்தல் அம் சிறு புறத்து, | 45 |
இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள் விரிவு வரிக் கச்சின் பூண்ட, மங்கையர் நெய் உமிழ் சுரையர் நெடுந் திரிக் கொளீஇ, கை அமை விளக்கம் நந்துதொறும் மாட்ட, |
கச்சுடை அணிந்து, முதுகுப்புறம் கூந்தல் புரள, கையில் வளையலுடன் வாளேந்திய மங்கையர் சுரைக்குடுக்கையில் கொண்டுவந்த எண்ணெய்யை இரவினைப் பகலாக்கும் வகையில் எரியும் விளக்குகளில் ஊற்றி சுடர் மங்கும்போதெல்லாம் அதன் திரியைத் தூண்டிவிட்டுக்கொண்டிருந்தனர்.
மெய்காப்பாளர் காவல்புரிதல்
நெடு நா ஒள் மணி நிழத்திய நடு நாள், | 50 |
அதிரல் பூத்த ஆடு கொடிப் படாஅர் சிதர் வரல் அசைவளிக்கு அசைவந்தாங்கு, துகில் முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்கு நடைப் பெரு மூதாளர் ஏமம் சூழ |
நீண்ட நாக்கினை உடைய மணி இது நள்ளிரவு என ஒலித்துக் காட்டியது. பூத்திருக்கும் அதிரல் கொடி சிதைக்கும் காற்றில் ஆடுவது போல, முடி போட்டுப் போர்த்தியிருக்கும் துணி அக்காற்றில் ஆடும்படி பெருமூதாளர் (மெய்க்காப்பாளர்) தலைவனுக்குப் பாதுகாவலாக நடந்துகொண்டிருந்தனர்.
நாழிகைக் கணக்கர் பொழுது அறிவித்தல்
பொழுது அளந்து அறியும், பொய்யா மாக்கள், | 55 |
தொழுது காண் கையர், தோன்ற வாழ்த்தி, எறி நீர் வையகம் வெலீஇய செல்வோய்! நின் குறு நீர்க் கன்னல் இனைத்து என்று இசைப்ப |
பிழையின்றிக் காலத்தைக் கணித்தறியும் நாழிகைக் கணக்கர் கைகளால் தலைவனை வாழ்த்தித் தொழுதுகொண்டு “உலகம் வெல்ல வந்துள்ளவரே! குறுநீர்க் கன்னல் இத்தனை நாழிகை காட்டுகிறது” என்று இசைப்பாட்டு ஒலியோடு தெரிவித்தனர்.
அரசன் படுக்கையில் கண்பொருந்தாது சிந்தனையில் ஆழ்தல்
மத்திகை வளைஇய, மறிந்து வீங்கு செறிவு உடை, மெய்ப்பை புக்க வெரு வரும் தோற்றத்து, |
60 |
வலி புணர் யாக்கை, வன்கண் யவனர் புலித் தொடர் விட்ட புனை மாண் நல் இல், |
இடையில் கச்சமாகக் கட்டிய உடை, உடலில் மெய்ப்பைச் சட்டை, அச்சம் தரும் தோற்றம், வலிமை மிக்க உடம்பு, உறுதி கொண்ட நெஞ்சுரம் ஆகியவற்றைக் கொண்ட யவனர் பழகிய புலியை சங்கிலித் தொடரிலிருந்து விடுவித்து அரசன் படுக்கைக்குக் காவல் புரிந்தனர்.
திரு மணி விளக்கம் காட்டி, திண் ஞாண் எழினி வாங்கிய ஈர் அறைப் பள்ளியுள் உடம்பின் உரைக்கும், உரையா நாவின், |
65 |
படம் புகு மிலேச்சர் உழையர் ஆக, |
அரசனின் பள்ளியறை திரையால் இரண்டு அறைகளாகப் பகுக்கப்பட்டிருந்தது. ஒருபக்க அறையில் அரசன் படுத்திருந்தான். மறுபக்க அறையில் ஊமை மிலேச்சர் மணிவிளக்கம் வைத்துக்கொண்டு மெய்க்காப்பாளராக விளங்கினர்.
மண்டு அமர் நசையொடு கண்படை பெறாஅது, |
அரசனது சிந்தனை
எடுத்து எறி எஃகம் பாய்தலின், புண் கூர்ந்து, பிடிக் கணம் மறந்த வேழம் வேழத்துப் பாம்பு பதைப்பன்ன பரூஉக் கை துமிய, |
70 |
தேம் பாய் கண்ணி நல் வலம் திருத்தி, சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்; தோல் துமிபு வைந் நுனைப் பகழி மூழ்கலின், செவி சாய்த்து, உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்; ஒரு கை பள்ளி ஒற்றி, ஒரு கை |
75 |
முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து |
பாசறையில் வெற்றி முழக்கம்
பகைவர்ச் சுட்டிய படை கொள் நோன் விரல், நகை தாழ் கண்ணி நல் வலம் திருத்தி, அரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை |
பள்ளிகொண்டிருக்கும் அரசனின் நினைவோட்டமும் காட்சியும் போரைப் பற்றிய நினைவு. அரசனுக்குத் தூக்கம் வரவில்லை. வேல் பாய்ந்த புண் வலியால் தன் பெண்யானை பற்றிய நினைவு இல்லாமல் கிடக்கும் ஆண்யானை, வெட்டுப்பட்ட சில யானைக் கைகள் பாம்பு பதைப்பது போல் துடித்த காட்சி, அரசனின் வெற்றியை வாழ்த்திக்கொண்டே செஞ்சோற்றுக்கடன் கழித்து மாண்டவர்கள், தோலிலே அம்பு பாய்ந்த வலியால் உணவு கொள்ளாமல் தள்ளாடிச் செவிகளைச் சாய்த்துக்கொண்டு கிடக்கும் குதிரை ஆகியவற்றைச் சிந்தித்துக்கொண்டு, ஒரு கை தன் தலைக்கு முட்டுக் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் மற்றொரு கையின் விரல் நண்டுக் கொடுக்கு போல் பகைவரைச் சுட்டிய வண்ணம் காட்டிக்கொண்டு அரசன் பள்ளியில் கிடந்தான். அவன் சுட்டிக்காட்டிய அரசர்கள் அவனது வெற்றியைப் பாராட்டிக்கொண்டு நடுங்கியவண்ணம் நின்றனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
முல்லைப்பாட்டு - பத்துப்பாட்டு, இலக்கியங்கள், அரசன், மங்கையர், அரசனின், முல்லைப்பாட்டு, பத்துப்பாட்டு, கண்ணி, வலம், பாம்பு, திருத்தி, புண், அறையில், விரல், வலியால், கிடக்கும், போல், பாய்ந்த, நினைவு, மிலேச்சர், பற்றிய, சுட்டிய, யவனர், புரிந்தனர், கூந்தல், காவல், அகம், பாசறை, வேறு, திண், விளக்கம், கன்னல், சங்க, பொழுது, கணக்கர், அதிரல், நாழிகைக், கொண்ட