மலைபடுகடாம் - பத்துப்பாட்டு
என்றிவ் வனைத்தும் இயைந்தொருங் கீண்டி | 345 |
அவலவு மிசையவுந் துவன்றிப் பலவுடன் அலகைத் தவிர்த்த எண்ணருந் திறத்த மலைபடு கடாஅ மாதிரத் தியம்பக் |
நன்னனது மலை வழியில் செல்லும் வகை
குரூஉக்கட் பிணையல் கோதை மகளிர் முழவுத்துயில் அறியா வியலு ளாங்கண் |
350 |
விழவின் அற்றவன் வியன்கண் வெற்பே |
இப்படி இந்த மலையோசைகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து மலையின் மேல் பகுதியிலிருந்தும், கீழ்ப் பகுதியிலிருந்தும் கேட்டுக்கொண்டிருக்கும். இப்படி அளக்க முடியாத பல ஒலிகளும் கேட்கும். நாலாத் திசைகளிலும் கேட்கும். எந்த ஒலியின் மீது கவனம் செலுத்துகிறார்களோ அந்த ஒலியைப் பல்வேறு ஒலிகளுக்கிடையே கேட்க முடியும். திருவிழாக் காலத்தில் தெருவெல்லாம் முழவோசை கேட்டுக் கொண்டேயிருப்பது போல நன்னன் மலைமீது மலைபடு கடாம் கேட்டுக்கொண்டேயிருக்கும். சிவந்த கண்களோடு பூத் தொடுக்கும் மகளிர் தூங்காமல் இருப்பது போல முழவோசை தெருக்களில் கேட்டுக் கேட்டுக்கொண்டேயிருக்கும். அதுபோல மலைபடு கடாமும் கேட்டுக்கொண்டேயிருக்கும். இந்த ஓசைகள்தாம் மலைபடுகடாம்.
கண்ண் டண்ண்னெனக் கண்டுங் கேட்டுங் உண்டற் கினிய பலபா ராட்டியும் இன்னும் வருவ தாக நமக்கெனத் தொன்முறை மரபினி ராகிப் பன்மாண் |
355 |
செருமிக்குப் புகலுந் திருவார் மார்பன் |
மலையின் காட்சிகளைக் கண் குளிரக் காணலாம். மலை ஒலிகளைக் காது குளிரக் கேட்கலாம். வாய் இனிக்கப் பழம் போன்றவற்றை உண்ணலாம். மற்றவற்றையும் இன்னும் கிடைக்க வேண்டு மென்று மரபு நெறி பிறழாமல் கேட்டுப் பெற்றுப் பாராட்டி மகிழலாம். நன்னன் திரு அமர் மார்பன். போர் என்றால் அவனுக்குக் கொள்ளை ஆசை. அவனைப் பலமுறைப் பாராட்டலாம்.
உருமுரறு கருவிய பெருமலை பிற்பட இறும்பூது கஞலிய இன்குரல் விறலியர் நறுங்கார் அடுக்கத்துக் குறிஞ்சி பாடிக் கைதொழூஉப் பரவிப் பழிச்சினிர் கழிமின் |
360 |
வியப்பூட்டும் இனிய குரலமைந்த விறலியர் மகிழ்ச்சிப் பெருக்கில் இனிய குரலோடு குறிஞ்சிப் பண்பாடுவதைக் கேட்டுக் கொண்டே செல்லுங்கள். இடி முழக்கத்துடன் மேகம் மேயும் மலையின் புதுமைப் பொலிவைப் பாராட்டிக் கொண்டும் மலைத்தெய்வத்தைக் (முருகனைக்) கைகூப்பித் தொழுதுகொண்டும் செல்லுங்கள்.
குன்றும் குகைகளும் நெருங்கிய மலை வழி
மைபடு மாமலை பனுவலிற் பொங்கிக் கைதோய் வன்ன கார்மழைத் தொழுதி தூஉ யன்ன துவலை தூற்றலின் தேஎந் தேறாக் கடும்பரிக் கடும்பொடு காஅய்க் கொண்டநும் இயந்தொய் படாமற் |
365 |
கூவல் அன்ன விடரகம் புகுமின் |
பூரித்திருக்கும் பஞ்சைப் போல மேகங்கள் மலைமேல் மேயும். துவலைத் தூறல்கள் கை ஈரம் படத் தூறிக்கொண்டேயிருக்கும். செல்லவேண்டிய இடங்கூடத் தெரியாது. அப்போது நீங்கள் இசைக் கருவிகளில் பண் பாட முடியாது. எனவே கைகளும், கருவிகளும் காய்வதற்காகவும் இசைக்கருவிகள் ஈரம் படாமல் இருப்பதற்காகவும் கூவல் குடிசை போன்ற பாறை வெடிப்புக் குகைக்குச் சென்று தங்குங்கள்.
இருங்கல் இகுப்பத் திறுவரை சேராது குன்றிடம் பட்ட ஆரிடர் அழுவத்து நின்று நோக்கினும் கண்வாள் வெளவும் மண்கனை முழவின் தலைக்கோல் கொண்டு |
370 |
தண்டுகா லாகத் தளர்தல் ஓம்பி ஊன்றினிர் கழிமின் ஊறுதவப் பலவே |
பெரிய பாறைகள் உடைந்து உருளும் வழியில் [இகுப்பம்] செல்லாதீர்கள். ஆங்காங்கே குன்றுகளுக்கு இடையே துன்பம் தரும் காடுகள் உண்டு. அவற்றை உற்று நோக்கினால் கண் கலங்கும். அங்கெல்லாம் முழவு-முகம் கொண்ட தலைக்கோலை ஊன்றுகோலாகப் பயன்படுத்திக்கொண்டு ஏறிச் செல்லுங்கள். இன்றேல் நேரும் துன்பம் பலப் பல.
அயில்காய்ந் தன்ன கூர்ங்கற் பாறை வெயில்புறந் தரூஉம் இன்னல் இயக்கத்துக் கதிர்சினந் தணிந்த அமயத்துக் கழிமின் |
375 |
கூரிய கல்லாகிக் கிடக்கும் பாறைகள் வெயிலைப் பிரதிபலித்துப் புறத்தே தூவிக் கொண்டிருப்பதால் காய்ச்சி வைத்திருக்கும் வேலைப் போல் நடக்கும்போது துன்பம் தரும். எனவே வெயிலின் சினம் தணிந்த பின்னர் நடந்து செல்லுங்கள்.
அரண்களும் நடுகற்களும் உள்ள வழிகள்
உரைசெல வெறுத்தவவ னீங்காச் சுற்றமொடு புரைதவ உயரிய மழைமருள் பஃறோல் அரசுநிலை தளர்க்கும் அருப்பமும் உடைய பின்னி யன்ன பிணங்கரி னுழைதொறும் முன்னோன் வாங்கிய கடுவிசைக் கணைக்கோல். |
380 |
இன்னிசை நல்யாழ்ப் பத்தரும் விசிபிணி மண்ணார் முழவின் கண்ணு மோம்பிக் கைபிணி விடாஅது பைபயக் கழிமின் |
கொடிகள் பின்னிக் கிடக்கும் பிணங்கர் காட்டில் நுழையும்போது ஒருவரோடு ஒருவர் கைகளைப் பிடித்துக் கொண்டு மெல்ல மெல்லச் செல்லுங்கள். அந்த பிணங்கர்க் காடு அரசன் படையில் முன்னே செல்லும் தோல் படையையே நிலைகலங்கச் செய்ய வல்லவை. முன்னே செல்பவன் தன் அம்பால் தன்மேல் மோதும் முள்ளை ஒதுக்கிப் பிடித்துக்கொண்டு செல்வான். தான் கடந்ததும் அதை விட்டுவிடுவான். அது பின்னே வருபவர்மேல் மோதித் தாக்கும். உங்களின் யாழ், பத்தர், முழவு போன்ற இசைக் கருவிகள் மீதும் மோதித் தாக்கும். எனவே அவற்றையும் பாதுகாத்துக் கொண்டு கவனமாகச் செல்லுங்கள். அரசன் நன்னனின் சுற்றம் பலரும் புகழக் கேட்டுக் கேட்டு புகழையே வெறுத்திருந்தது. இங்குச் சுற்றம் என்பது படை. அது அவனை விட்டு அகலாமல் பாதுகாப்பாக இருந்துவந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மலைபடுகடாம் - பத்துப்பாட்டு, செல்லுங்கள், மலைபடுகடாம், கேட்டுக், கழிமின், இலக்கியங்கள், கேட்டுக்கொண்டேயிருக்கும், மலைபடு, துன்பம், மலையின், பத்துப்பாட்டு, வழியில், தரும், முழவு, பாறைகள், முழவின், இசைக், பாறை, தணிந்த, கிடக்கும், தாக்கும், சுற்றம், மோதித், முன்னே, கொண்டு, அரசன், ஈரம், கூவல், நன்னன், மகளிர், இன்னும், இப்படி, முழவோசை, கேட்கும், அந்த, மார்பன், குளிரக், மேயும், யன்ன, செல்லும், இனிய, விறலியர், சங்க, பகுதியிலிருந்தும்