மலைபடுகடாம் - பத்துப்பாட்டு
களிறுமலைந் தன்ன கண்கூடு துறுகல் தளிபொழி கானந் தலைதவப் பலவே |
385 |
ஒன்னாத் தெவ்வர் உலைவிடத் தார்த்தென நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர் செல்லா நல்லிசைப் பெயரொடு நட்ட கல்லேசு கவலை எண்ணுமிகப் பலவே |
யானைகள் போரிடுவது போலக் காட்சி தரும் பெரிய பாறைக்கற்கள் இருக்கும். தூவான மழை பொழியும்போது வழுக்கிவிடும் பகுதிகள் பலவற்றை அவை கொண்டிருக்கும். பார்த்துக் கவனமாகச் செல்ல வேண்டும். மறவன் ஒருவன் பகைவர்களைச் சாய்த்தான். மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தான். எனினும் போரில் மாண்டான். அவனுடைய வீரத்தோடு தன் வீரத்தை ஒப்பிட்டுப் பார்த்த பிற மறவர்கள் தம் செயலுக்காக நாணினர். அவனது புகழைப் போற்றினர். பலரும் நடந்து செல்லும் வழி பிரியுமிடங்களில் அவனுக்குக் கல் நட்டனர். அவனத்து பெயரையும் புகழையும் அதில் பொறித்து வைத்தனர். அப்படிப்பட்ட கல்லேசு கவலைகள் பலவற்றைக் கடந்து செல்வீர்கள் அவற்றைத் தொழுது போற்றுங்கள்.
இன்புறு முரற்கைநும் பாட்டுவிருப் பாகத் | 390 |
தொன்றொழுகு மரபினும் மருப்பிகுத்துத் துனைமின் |
புதியவர்களுக்கு வழி தெரிய, புல்லை முடிந்து இட்டுச் செல்லுதல்
பண்டுநற் கறியாப் புலம்பெயர் புதுவிர் சந்து நீவிப் புன்முடிந் திடுமின் |
உங்களுக்கு விருப்பமான யாழை மீட்டிப் பாடிக்கொண்டும், மகிழ்ச்சிப் பெருக்கில் வழக்கம் போல் கொம்புகளை ஊதிக்கொண்டும் செல்லுங்கள். முன்பு நீங்கள் அறியாத புதிய வழியில் செல்லும்போது வழியிலுள்ள முட்புதர்களை வெட்டித் தூய்மைப் படுத்திக்கொண்டு செல்லுங்கள். அடுத்து வருபவர்களுக்கு வழி காட்டுவதற்காகக் கல்லிலே புல்லை முடிந்து ஆங்காங்கே வைத்து அடையாளம் செய்துகொண்டு செல்லுங்கள்.
நன்னனுடைய பகைவர் இருக்கும் அரு நிலங்கள்
செல்லுந் தேஎத்துப் பெயர்மருங் கறிமார் கல்லெறிந் தெழுதிய நல்லரை மராஅத்து |
395 |
கடவு ளோங்கிய காடேசு கவலை ஒட்டா தகன்ற ஒன்னாத் தெவ்வர் சுட்டினும் பனிக்குஞ் சுரந்தவப் பலவே |
இப்பாதை எந்த ஊருக்குச் செல்கிறது என்பதை மரத்தில் கல்லால் கொட்டி எழுதி வைத்திருந்தனர். பாதைகள் பிரியும் சந்தியின் நடுவில் கைகாட்டி மரங்கள் மட்டும் அல்லாமல் பலரும் போற்றிப் புகழும் கடவுளைச் செதுக்கிய காட்டு மரங்களும் இருந்தன. அவற்றின் பெயரைச் சொன்ன மாத்திரத்திலேயே பகைவர்கள் நடுங்குவர். இப்படிப்பட்ட காட்டுப் பாதைகள் பல இருந்தன.
தேம்பாய் கண்ணித் தேர்வீசு கவிகை ஓம்பா வள்ளற் படர்ந்திகும் எனினே |
400 |
மேம்பட வெறுத்தவன் தொஃறிணை மூதூர் ஆங்கன மற்றே நம்ம னோர்க்கே அசைவுழி யசைஇ அஞ்சாது கழிமின் |
நன்னன் தேனொழுகும் பூ மாலையைத் தலையில் அணிந்திருந்தான். நம்மைப் போன்றவர்களுக்கு அவன் தேர்களை வழங்குவான். கவிந்து வழங்கும் அவன் கைகள் தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் வீசும் கொடைத்தன்மை கொண்டவை. அவனது முன்னோர்களும் அத்தகைய கொடையாளிகள். அவன் ஊரும் அப்படிப்பட்டது. விரும்பிய இடத்தில் தங்கி அச்சமின்றிச் செல்லுங்கள்.
கோவலரது குடியிருப்பில் பெறும் உபசாரம்
புலியுற வெறுத்ததன் வீழ்பிணை யுள்ளிக் கலைநின்று விளிக்குங் கானம் ஊழிறந்து |
405 |
சிலையொலி வெரீஇய செங்கண் மரைவிடை தலையிரும்பு கதழும் நாறுகொடிப் புறவின் வேறுபுலம் படர்ந்த ஏறுடை இனத்த வளையான் தீம்பால் மிளைசூழ் கோவலர் வளையோர் உவப்பத் தருவனர் சொரிதலின் |
410 |
பலம்பெறு நசையொடு பதிவயிற் றீர்ந்தநும் புலம்புசேண் அகலப் புதுவிர் ஆகுவிர் |
கானத்தில் கலை - பெண் மானைப் புலி தாக்கிக் கொன்று விட்டது. ஆண்மான் தன் பெண்மானை நினைத்துக் கொண்டே தவித்தது. இது ஒரு புறம். மரைவிடை - கானவன் தன் வில்லில் நாணைத் தெரித்துச் சரிபார்த்துக் கொண்டிருந்தான். அந்த ஒலியைக் கேட்ட காட்டாட்டுக் கடா தன் இனத்தைக் கூட்டிக்கொண்டு வேறு காட்டுக்கு ஓடியது. ஆவின் பால் - கோவலன் தான் வளைத்து வைத்திருக்கும் பசுக்களின் பாலைக் கறந்து கொண்டு வந்து தன் மனைவியின் கலத்தில் ஊற்றுவான். அதனை அவள் உங்களுக்கு விருந்தாக அளிப்பாள். அதனால் தெம்பு பெற்ற நீங்கள் வருத்தம் நீங்கி புத்துணர்வு பெறுவீர்கள்.
பகர்விரவு நெல்லின் பலவரி யன்ன தகர்விரவு துருவை வெள்ளையொடு விரைஇக் கல்லென் கடத்திடைக் கடலின் இரைக்கும் |
415 |
பல்யாட் டினநிரை எல்லினிர் புகினே பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர் |
வயலில் இருக்கும் நெல்லுக் கட்டுகளைப் போலக் குரும்பையாடு, செம்மறியாடு, வெள்ளாடு ஆகியவை ஆங்காங்கே கலந்து மேயும் வழியில் சென்றால் கடல் இரைச்சல் போல் அவற்றின் ஒலியைக் கேட்கலாம். பகல் வேளையில் அவ் வழியே சென்றால், அவற்றின் பாலை உலையாக வைத்து மலைமக்கள் பொங்கிய சோற்றை நீங்கள் சமைக்காமலேயே பெறலாம்.
துய்ம்மயிர் அடக்கிய சேக்கை யன்ன மெய்யுரித் தியற்றிய மிதியதட் பள்ளித் தீத்துணை யாகச் சேந்தனிர் கழிமின் |
420 |
அன்னத்தின் தூவி மயிரைத் திணித்துச் செய்த மெத்தை போல இருக்கும், மான் தோலை உரித்து மிதித்துச் செம்மைப்படுத்திய தோல் விரிப்புப் படுக்கையின்மேல், தீப் பந்த வெளிச்சச் சூடு சாயும் படுக்கையின் மீது உறங்கிவிட்டுச் செல்லலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மலைபடுகடாம் - பத்துப்பாட்டு, இருக்கும், இலக்கியங்கள், செல்லுங்கள், அவன், நீங்கள், மலைபடுகடாம், பலவே, அவற்றின், பத்துப்பாட்டு, வைத்து, ஆங்காங்கே, வழியில், பாதைகள், கழிமின், சென்றால், யன்ன, ஒலியைக், மரைவிடை, இருந்தன, புதுவிர், கல்லேசு, கவலை, தெவ்வர், ஒன்னாத், சங்க, போலக், அவனது, உங்களுக்கு, முடிந்து, புல்லை, பலரும், போல்