மலைபடுகடாம் - பத்துப்பாட்டு
முள்ளரித் தியற்றிய வெள்ளரி வெண்சோறு | 465 |
வண்டுபடக் கமழுந் தேம்பாய் கண்ணித் திண்டேர் நன்னற்கும் அயினி சான்மெனக் கண்டோர் மருளக் கடும்புடன் அருந்தி எருதெறி களமர் ஓதையொடு நல்யாழ் மருதம் பண்ணி அசையினிர் கழிமின் |
470 |
வெள்ளரி வெண்சோறு – முள் என்பது கத்தி. (ஈழத்தமிழர் இதனைச் சூரி என்பதும் இப் பழந்தமிழின் வழிவந்த சொல்லே) வெள்ளரிக் காயைக் கத்தியால் அரிந்து சேர்த்துச் சமைத்த வெண்பொங்கல். நன்னன் – நன்னன் வண்டு மொய்க்கும் புத்தம் புது பூ மாலை அணிந்திருப்பான். அவன் தன் அரசியல் சுற்றத்தோடு உண்ணுவதற்கும் போதுமானது என்று கண்டோர் மருளும்படி உழவர் சமைத்த அந்தச் சோறு மிகுதியாகச் சமைக்கப்பட்டிருந்தது. களமர் ஓதை – அருகிலுள்ள களத்தில் உழவர் போரடிக்கும்போது பிணையல் எருதுகளை ஓட்டும் ஓசை கேட்கும். அதனை வாழ்த்தி நீங்கள் உங்கள் யாழில் மருதப் பண் பாடுங்கள். பின் செல்லுங்கள்.
சேயாற்றின் கரைவழியே செல்லுதல்
வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇச் செங்கண் எருமை இனம்பிரி ஒருத்தல் கனைசெலல் முன்பொடு கதழ்ந்துவரல் போற்றி வனைகலத் திகிரியிற் குமிழி சுழலும் துனைசெலற் றலைவாய் ஓவிறந் தொலிக்கும் |
475 |
காணுநர் வயாஅங் கட்கின் சேயாற்றின் யாணர் ஒருகரைக் கொண்டனிர் கழிமின் |
நெல் அறுக்கும் உழவர்கள் தண்ணுமை முரசை முழக்கிவர். அந்த ஒலியைக் கேட்டு எருமைக் கடா தன் இனத்தை விட்டுவிட்டுப் பிரிந்து ஓடும். கனைத்துக் கொண்டு, தன் வலிமையைக் காட்டும் சினத்தோடு சேயாற்றுக்குள் இறங்கும். அங்கே அந்த எருமைக்கடா நீர்ச் சுழலில் அகப்பட்டுக் கொண்டு சுழலும். குயவன் பானை வனையும்போது சக்கரத்தில் பானை சுழல்வது போலச் சுழலும். வெள்ளம் வேகமாகப் பாயும். அப்போது அது மதகை அடைத்து வைக்கும் ஓப்பலகை இடுக்குகளில் பீரிட்டுக் கொண்டு பீச்சும். இதனைக் கண்டவர்கள் மீண்டும் காண ஆசைப்படும்படி கண்ணுக்கு இனிமையாக இருக்கும். பார்த்துக் கொண்டே சேயாறு ஆற்றங்கரையில் செல்லுங்கள்.
நன்னனது மூதூரின் இயல்பு
நிதியந் துஞ்சு நிவந்தோங்கு வரைப்பிற் பதியெழ லறியாப் பழங்குடி கெழீஇ வியலிடம் பெறாஅ விழுப்பெரு நியமத்து |
480 |
யாறெனக் கிடந்த செருவிற் சாறென இகழுநர் வெரூஉங் கவலை மறுகிற் கடலெனக் காரென ஒலிக்குஞ் சும்மையொடு மலையென மழையென மாட மோங்கித் துனிதீர் காதலின் இனிதமர்ந் துறையும் |
485 |
பனிவார் காவிற் பல்வண் டிமிரும் நனிசேய்த் தன்றவன் பழவிறன் மூதூர் |
வரைப்பு என்னும் ஊர் - செங்கண்மா என்பது சேயாற்றின் கரையில் உள்ளதோர் ஊர். அங்குப் பயன்படுத்திய செல்வம் போக மிஞ்சியிருக்கும் செல்வம் கேட்பாரற்றுத் தூங்கிக் கிடக்கும். குடிமக்கள் - குடிமக்கள் அந்த ஊரை விட்டு வெளியூர் செல்லாமல் பழமையான குடிமக்களாகவே வாழ்வர். நியமம் - காலியிடம் இல்லாமல் நெருக்கமாகக் கட்டப்பட்ட வீடுகளுடன் அதன் கடைவீதி அமைந்திருக்கும். தெரு - நீரோடும் ஆறுபோல் மக்கள் நடமாடும் தெருக்கள் அமைந்திருக்கும். அந்த ஊரைக் காண்பதற்கு முன்னர், அதனை இகழ்ந்து பேசியவர்கள் மக்கள் வெள்ளத்தைப் பார்த்து வியப்படைவர். கவலை மறுகு - சந்திகள் உள்ள குறுந்தெருக்களில் மக்களின் ஆரவாரம், கடலொலி போலவும், இடிமுழக்கம் போலவும் கேட்டுக்கொண்டேயிருக்கும். மாடம் - மலைபோல் மழைமேகத்தைத் தொடும் அளவு ஓங்கியிருக்கும். பனிவார்கா - ஊரைச் சுற்றியுள்ள காட்டில் பனி பொழிந்துகொண்டேயிருக்கும். பனித்துளி நீர்மூட்டம் அக் காட்டின்மீது ஊடல் கொண்டு ஒட்டுறவாடுவது போல் இருக்கும். வண்டினங்கள் - பனி பொழியும் அந்தக் காட்டில் பல்வேறு வண்டினங்களின் ஒலி கேட்டுக் கொண்டிருக்கும். நன்னன் அரண்மனை - அந்த இடத்துக்குச் சென்று விட்டால், நன்னன் அரண்மனை அங்கிருந்து அதிக தொலைவில் இல்லை என்று உணர்ந்து கொள்ளுங்கள். அண்மையில் தான் உள்ளது.
மூதூர் மக்கள் விருந்து எதிர்கொள்ளுதல்
பொருந்தாத் தெவ்வர் இருந்தலை துமியப் பருந்துபடக் கடக்கும் ஒள்வாண் மறவர் கருங்கடை எஃகஞ் சாத்திய புதவின் |
490 |
அருங்கடி வாயில் அயிராது புகுமின் |
படைக் கொட்டிலில் வாளும் வேலும் தாறுமாறாகச் சாத்தப் பட்டிருக்கும். அவை நன்னனின் மறவர்கள் பருந்துகள் பின்தொடரப் பகைவர் தலைகளைத் துண்டாக்கியவை. அவற்றைக் கண்டு சோர்ந்து விடாமல் கோட்டை வாயிலைக் கடந்து உள்ளே செல்லுங்கள்.
மன்றில் வதியுநர் சேட்புலப் பரிசிலர் வெல்போர்ச் சேஎய்ப் பெருவிற லுள்ளி வந்தோர் மன்ற அளியர் தாமெனக் கண்டோ ரெல்லாம் அமர்ந்தினிது நோக்கி |
495 |
விருந்திறை அவரவர் எதிர்கொளக் குறுகிப் |
உங்களைப் பார்ப்பவர்கள் எல்லாம் அரசனுக்கு வரி செலுத்துவது போலக் கடமையாகக் கருதி விருந்துணவைச் சுமந்துகொண்டு வந்து உங்களுக்குத் தருவார்கள். உங்களை விருப்பத்தோடு பார்ப்பார்கள். இவர்கள் பொதுமன்றத்தில் வாழ்பவர்கள். வெற்றிவேல் முருகன் நன்னனின் பெருமையை எண்ணி நெடுந் தொலைவிலிருந்து வருபவர்கள். இரக்கம் காட்டி அளிக்கத் தக்கவர்கள். – என்றெல்லாம் உங்களைப் பற்றிப் பேசிக்கொள்வார்கள். விருந்து தருவார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மலைபடுகடாம் - பத்துப்பாட்டு, அந்த, நன்னன், இலக்கியங்கள், கொண்டு, சுழலும், மலைபடுகடாம், பத்துப்பாட்டு, மக்கள், சேயாற்றின், செல்லுங்கள், உங்களைப், தருவார்கள், அமைந்திருக்கும், குடிமக்கள், நன்னனின், விருந்து, செல்வம், அரண்மனை, போலவும், காட்டில், பானை, சமைத்த, என்பது, கழிமின், களமர், சங்க, உழவர், கவலை, இருக்கும், வெள்ளரி, தண்ணுமை, மூதூர்