மதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டு
நெய்தல் நில இயல்பு
முழங்குகடல் தந்த விளங்குகதிர் முத்தம் | 315 |
அரம்போழ்ந் தறுத்த கண்ணேர் இலங்குவளை பரதர் தந்த பல்வேறு கூலம் இருங்கழிச் செறுவிற் றீம்புளி வெள்ளுப்புப் பரந்தோங்கு வரைப்பின் வன்கைத் திமிலர் கொழுமீன் குறைஇய துடிக்கண் துணியல |
320 |
விழுமிய நாவாய் பெருநீ ரோச்சுநர் நனந்தலை தேஎத்து நன்கலன் உய்ம்மார் புணர்ந்துடன் கொணர்ந்த புரவியொ டனைத்தும் வைகல் தோறும் வழிவழிச் சிறப்ப நெய்தல் சான்ற வளம்பல பயின்றாங்கு |
325 |
முழங்கும் கடலலை தரைக்குக் கொண்டுவந்து சேர்த்ததால் ஒளிரும் முத்துக்கள், சங்குகளை அரத்தால் அறுத்துச் செய்த வளையல்கள், பரதர் மக்கள் கடலில் குளித்துக் கொண்டுவந்த முத்து, பவளம் போன்ற பல்வேறு பொருள்கள், உப்பங்கழி வயலில் விளைந்த வெள்ளுப்பு. பரந்து விரிந்த கடலில் திமிலில் சென்று கொண்டுவந்த பெரிய மீன்கள், அவை அடிக்கும் துடிப்பறையின் கண்முகம் போல நறுக்கி வைத்திருக்கும் மீன் துண்டுகள். நாவாய்க் கப்பலை ஓட்டிச் சென்ற வணிகர் கொண்டுவந்த குதிரைகள், (இந்தக் குதிரைகள் பண்டங்களை ஏற்றிச் செல்ல நில வணிகரால் பயன்படுத்தப்பட்டன) இவை போன்ற அனைத்தும் நாள்தோறும் வழிவழியாகச் சிறப்படைந்து கொண்டிருந்த நெய்தல் நிலப் பெருவெளியின் சான்ற வளம். இந்த நெய்தல் நிலப் பகுதி ஒருபக்கம்.
ஐம்பால் திணையுங் கவினி யமைவர |
மதுரை மாநகரின் அமைப்பும் காட்சிகளும்
பாண்டி நாட்டிற்கு நடுவண் அமைந்து விளங்குதல்
பாண்டி நாட்டிற்கு நடுவண் அமைந்து விளங்குதல்
முழ வீமிழும் அக லாங்கண் விழவு நின்ற வியன் மறுகில் துணங்கையந் தழூஉவின் மணங்கமழ் சேரி இன்கலி யாணர்க் குழூஉப்பல பயின்றாங்குப |
330 |
பாடல் சான்ற நன்னாட்டு நடுவண் |
பாண்டிய நாடு இவ்வாறு ஐந்து நிலப் பகுதிகளின் அமைதியும் ஒருங்கிணைந்த நாடாக அழகுடன் விளங்கியது. பெருந்தெருக்களில் முழவின் ஓசை. குறுந்தெருக்களில் விழாக்கோலம் ஆங்காங்கே பலப்பல குழூஉக்கள் குரவையும் துணங்கையும் என்று தழூஉப் பிணைந்து விளையாடித் திளைக்கும் காட்சி. அந்த ஆட்டங்களில் நாட்டைப் புகழ்ந்து பாடும் நல்லிசை. இப்படிப்பட்ட நாட்டுக்கு நடுவில் ….
பெரும்பாணர் வாழும் இருக்கை
கலை தாய உயர் சிமையத்து மயி லகவு மலி பொங்கர் மந்தி யாட மாவிசும் புகந்து முழங்குகால் பொருத மரம்பயில் காவின் |
335 |
இயங்குபுனல் கொழித்த வெண்டலைக் குவவுமணற் கான்பொழில் தழீஇய அடைகரை தோறுந் தாதுசூழ் கோங்கின் பூமலர் தாஅய்க் கோதையி னொழுகும் விரிநீர் நல்வரல் அவிரறல் வையைத் துறைதுறை தோறும |
340 |
பல்வேறு பூத்திரள் தண்டலை சுற்றி அழுந்துபட் டிருந்த பெரும்பாண் இருக்கையும் |
உயர்ந்த மலையுச்சிகளிலும் மரவுச்சிகளிலும் கலை என்னும் ஆண்குரங்கு தாவும். அதனால் பூக்கள் உதிரும். அதைப் பார்த்து அங்கே இருக்கும் மயில் அகவும். மயிலோசையின் தாளத்திற்கேற்ப மந்தி என்னும் பெண்குரங்கு ஆடும். இந்த நிகழ்வுகளை அங்கிருக்கும் மற்ற விலங்கினம் விரும்பும். மரக்காடுகளில் காற்று மோதி ஆட்டத்துக்கு ஒத்திசை கூட்டித் தரும். வையை ஆற்று வெள்ளம் மணலைக் கொழிக்கும். அங்கே கோங்க மரம் பூத்துக் குலுங்கும். ஆங்காங்கே வையையாற்றுத் துறைகளில் பல்வேறு வகையான பூக்கள் பூத்திருக்கும். அவை தண்டலை என்னும் சோலைகள். அந்தச் சோலைகளில் குடிபெயரும் விருப்பமே இல்லாமல் பெரும்பாணர் வாழும் ஊர்கள். வெண்டலை என்பது ஆற்றிலிருக்கும் வெண்மணல் வெளி. தண்டலை என்பது குளிர்ந்த மலர்ச்சோலை.
அகழியும் மதிலும் பெற்று, மாடங்கள் ஓங்கி நிற்றல்
நிலனும் வளனுங் கண்டமை கல்லா
விளங்குபெருந் திருவின் மான விறல்வேள் அழும்பில் அன்ன நாடிழந் தனருங் |
345 |
கொழும்பல் புதிய குடியிழந் தனரும் தொன்றுகறுத் துறையுந் துப்புத்தர வந்த அண்ணல் யானை அடுபோர் வேந்தர் இன்னிசை முரச மிடைப்புலத் தொழியப் பன்மா றோட்டிப் பெயர்புறம் பெற்று |
350 |
மண்ணுற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கின் விண்ணுற வோங்கிய பல்படைப் புரிசைத் தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின் மழையாடு மலையி னிவந்த மாடமொடு |
355 |
வையை யன்ன வழக்குடை வாயில் வகைபெற எழுந்து வான மூழ்கி சில்காற் றிசைக்கும் பல்புழை நல்லில் யாறுகிடந் தன்ன அகனெடுந் தெருவிற் |
அழும்பில் வேள் - அழும்பில் (வேள்) என்பவனுக்குப் பாண்டிய நாட்டின் வளத்தைக் கண்டு சும்மா இருக்க முடியவில்லை. அவன் முன்பே பெருஞ்செல்வம் படைத்தவன். என்றாலும் பாண்டிய நாட்டை அடையப் பாண்டியனைத் தாக்கினான். போரில் அழும்பில் (வேள்) தன் நாட்டை இழந்தான். பாண்டியன் அழும்பில் வேளின் மான உணர்வை மதித்துத் தன் மதுரையில் தங்க இனம் தந்தான். அவனும் மதுரையில் வாழ்ந்துவந்தான். தன் குடும்பத்தை இழந்த பற்பல ஊரைச் சேர்ந்தவர்களும் மதுரையில் வாழ்ந்தனர். பண்டைக் காலம் தொட்டுப் பாண்டியனோடு பகைமைச் சினம் கொண்டு வாழ்ந்தவரும் தலைமையான யானைப்படை கொண்டவரும் ஆகிய வேந்தர் தம் முரசைப் போர்க்களத்தில் போட்டுவிட்டுப் பெயர்ந்தோடும்படி பாண்டியன் போரிட்டான். அவர்களின் முரசைக் கொண்டுவந்து பாண்டியன் தன் அகழி நீரில் குளிப்பாட்டித் தனதாக்கிக் கொண்டான். ஆழத்தால் நீல நிறம் தோன்றும் அகழியும், வானளாவ ஓங்கியதும், பல படைக்கருவிகளைத் தன்னகத்தே கொண்டதுமான மதிலும், வலிமைத் திறம் காட்டும் அணங்கு உருவம் பொறிக்கப்பட்ட நிலைகளும், எண்ணெய் பூசப்பட்டுப் பளபளக்கும் கதவுகளும் கொண்டு மலைபோல் ஓங்கி மழைமேகங்கள் ஆடும் மாட மாளிகைகளில் அவர்கள் வாழ்ந்துவந்தனர். மாடங்களுக்கு வையை ஆறு போல் முற்றம். வானத்தில் மூழ்கிக் கிடந்த அந்த மாடிகளில் புழை என்னும் சன்னல். அதில் சில்லென்று காற்று நுழையும்போது புல்லாங்குழல் போன்ற இசை. ஆறு போல் அகன்ற தெருக்களில் அந்த மாளிகைகள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டு, அழும்பில், நெய்தல், பல்வேறு, இலக்கியங்கள், என்னும், பாண்டிய, நிலப், மதுரைக்காஞ்சி, தண்டலை, வையை, அந்த, வேள், கொண்டுவந்த, பத்துப்பாட்டு, மதுரையில், சான்ற, பாண்டியன், என்பது, மதிலும், அகழியும், போல், ஓங்கி, நாட்டை, வேந்தர், பெற்று, கொண்டு, மந்தி, கடலில், குதிரைகள், கொண்டுவந்து, பரதர், சங்க, தந்த, நடுவண், ஆங்காங்கே, அங்கே, ஆடும், பூக்கள், வாழும், பெரும்பாணர், காற்று