மதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டு
முல்லை நிலக் காட்சிகள்
சிறுதினை கொய்யக் கவ்வை கறுப்பக் கருங்கால் வரகின் இருங்குரல் புலர ஆழ்ந்த குழும்பில் திருமணி கிளர எழுந்த கடற்றி னன்பொன் கொழிப்பப் பெருங்கவின் பெற்ற சிறுதலை நெளவி |
275 |
மடக்கட் பிணையொடு மறுகுவன உகளச் சுடர்ப்பூங் கொன்றை தாஅய நீழற் பாஅ யன்ன பாறை யணிந்து நீலத் தன்ன பைம்பயிர் மிசைதொறும் வெள்ளி யன்ன வொள்வி யுதிர்ந்து |
280 |
சுரிமுகிழ் முசுண்டையொடு முல்லை தாஅய் மணிமரு ணெய்தல் உறழக் காமர் துணிநீர் மெல்லவற் றொய்யிலொடு மலர வல்லொன் தைஇய வெறிக்களங் கடுப்ப முல்லை சான்ற புறவணிந் தொருசார் |
285 |
தினைக்கதிர்கள் கொய்யும் நிலையைப் பெற்றிருந்தன. ‘கௌவை’ என்னும் கேழ்வரகு அறுவடை நிலையில் கருத்திருந்தது. வரகு அறுவடை நிலையில் விளைந்து காய்ந்திருந்தது. தோண்டிய குழிகளில் மணிகள் ஒளி கிளர்ந்தன. காட்டு வழியெல்லாம் பொன் கொழித்தது. சிறிய தலையுடன் பேரழகு கொண்டிருக்கும் ‘நௌவி’ மான்கள் தம் பெண்மான்களுடன் சுழன்று விளையாடின. பாறையின் நிழல் பகுதியில் கொன்றைப் பூக்கள் கொட்டிப் பாய் விரித்திருந்தது. நீலவானம் போல் காட்சிதரும் பயிர்வெளியில் பயிரில் பூக்கும் ‘ஒள்வீ’ வெள்ளி விரித்தது போல் காணப்பட்டது. கருமை நிற முசுண்டைப் பூக்களும், வெண்மை நிற முல்லைப் பூக்களும், நீல நிற நெய்தல் பூக்களும், மேட்டு நிலங்களில் பூக்கும் தொய்யில் பூக்களும் ஆங்காங்கே மலர்ந்திருந்தன. இப்படி முல்லைநிலம் கெட்டிக்காரன் வரைந்த ஓவியம் போலக் காட்சியளித்தது. இந்த முல்லை நிலப் பகுதி ஒருபக்கம்.
குறிஞ்சி நிலத்தின் இயற்கை வளம்
நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய குறுங்கதிர்த் தோரை நெடுங்கால் ஐயவி ஐவன வெண்ணெலொ டரில்கொள்பு நீடி இஞ்சி மஞ்சட் பைங்கறி பிறவும் பல்வேறு தாரமொடு கல்லகத் தீண்டித் |
290 |
தினைவிளை சாரற் கிளிகடி பூசல் மணிப்பூ அவரைக் குரூஉத்தளிர் மேயும் ஆமா கடியுங் கானவர் பூசல் சேணோன் அகழ்ந்த மடிவாய்ப் பயம்பின் வீழ்முகக் கேழல் அட்ட பூசல் |
295 |
கருங்கால் வேங்கை இருஞ்சினைப் பொங்கர் நறும்பூக் கொய்யும் பூசல் இருங்கேழ் ஏறடு வயப்புலிப் பூசலொ டனைத்தும் இலங்குவெள் ளருவியொடு சிலம்பகத் திரட்டக் கருங்காற் குறிஞ்சி சான்ற வெற்பணிந்து. |
300 |
அருங்கடி மாமலை தழீஇ ஒருசார் |
குறிஞ்சி நிலத்துப் பயிர் - நல்ல வயிரம் பாய்ந்த மரங்களை வெட்டி வீழ்த்தி அவற்றைச் சுட்டெரித்த நிலத்தில் பயிர் செய்தனர். குச்சியால் குழி போட்டு அதில் ஊன்றிய தோரையின் (துவரை) குறுங்கதிர் விளைந்திருந்தது. ஐயவி என்னும் வெண்சிறுகடுகுப் பயிர் நீண்டு விளைந்திருந்தது. ஐவன வெண்ணெல் முற்றி விளைந்திருந்தது. இஞ்சி, மஞ்சள், கீரைவகைகள் முதலான பிறவும் பயன்படு தாரமாக (விளைச்சல் வருவாயாக) விளைந்த தானியங்கள் மலைப்பாறையில் கொட்டிக் காயவைக்கப்பட்டிருந்தன. தினை விளைந்திருக்கும் மலைச்சாரலில் கிளிகளை ஓட்டும் மகளிர் பூசல் அவரையை மேயும் ஆமாக்களை ஓட்டும் கானவர் பூசல், பருகும் நீருக்காக பரண்மீதேறிக் காவல் புரிவோர் பூசல், தோண்டி வைத்த குழியில் காட்டுப் பன்றிகள் இறங்கி அட்டகாசம் செய்வதை ஓட்டும்பூசல், மகளிர் வேங்கைப்பூ பறிக்கும்போது பாடும் பூசல், காட்டெருமைகளைப் புலி தாக்கும்பூசல், போன்றவை அனைத்தும் அருவி ஒலியோடு மலையில் மோதி எதிரொலித்தன. இவை, செழியன் தேயத்தின் ஒருசார் பகுதியாக விளங்கின. இந்தக் குறிஞ்சி நிலப்பகுதி ஒருபக்கம்.
பாலை நில இயல்பு
இருவெதிர்ப் பைந்தூறு கூரெரி நைப்ப நிழத்த யானை மேய்புலம் படரக் கலித்த இயவர் இயந்தொட் டன்ன கண்விடு புடையூஉத் தட்டை கவினழிந்து |
305 |
அருவி யான்ற அணியில் மாமலை வைகண் டன்ன புன்முளி யங்காட்டுக் கமழ்சூழ் கோடை விடரக முகந்து காலுறு கடலின் ஒலிக்குஞ் சும்மை இலைவேய் குரம்பை உழையதட் பள்ள |
310 |
உவலைக் கண்ணி வன்சொல் இளைஞர் சிலையுடைக் கையர் கவலை காப்ப நிழலுரு விழந்த வேனிற்குன் றத்துப் பாலை சான்ற சுரஞ்சேர்ந் தொருசார் |
யானை பச்சை மூங்கிலை உண்டு வாழ்ந்துவந்தது. அந்தப் பெரிய பச்சை மூங்கில் தூறு தீப்பற்றி எரிந்துவிட்டது. அதனால் யானை மேய்ச்சலுக்காக வேறு நிலத்தைத் தேடிச் சென்று விட்டது. இசைவாணர்கள் இசைக்கருவிகளை முழக்குவது போல கானவர் மூங்கிலைப் பிளந்து செய்த தம் தட்டை என்னும் கருவியை தழைத்திருக்கும் தம் பயிரை மேய வரும் யானைகளை விரட்ட முழக்குவர். யானைக்கூட்டம் வேற்றுப் புலம் சென்றுவிட்டதால் தட்டை முழக்கப்படாமல் தன் அழகமைதி அழிந்து வெறுமனே கிடந்தது. அருவி ஒழுகும் அழகிய பெரிய மலை. அதன் சாரலில் வைக்கோலைப் போலப் புல் உலர்ந்து கிடக்கும் அழகிய காடு. அதில் கோடை மேகம் இடி இடித்து உண்டாக்கிய வெடிப்பு. அந்த நிலவெடிப்பில் காற்று நுழையும்போது, காற்று மோதி கடலலை ஒலிப்பது போல ஓசை. இந்த ஓசை கேட்கும் இடத்தில் இலைகளால் வேயப்பட்ட குடிசை. அதன் பக்கத்தில் (பொடி சுடாமல் இருக்கத்) தோலை விரித்து அதன்மேல் நின்றுகொண்டு இளைஞர் வில்லேந்திய கையராய்க் குடிசையைக் காத்துக்கொண்டு நின்றனர். மரங்களில் இலை இல்லை. எனவே நிழல்கூடத் தன் உருவத்தை இழந்து காணப்பட்ட பாலைநிலம் அது. (ஒப்பு நோக்குக – ‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை எனபதோர் படிமம் கொள்ளும் காலை’ – சிலப்பதிகாரம்) இந்தப் பாலை நிலப் பகுதி ஒருபக்கம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டு, பூசல், குறிஞ்சி, பூக்களும், முல்லை, பாலை, இலக்கியங்கள், ஒருபக்கம், அருவி, மதுரைக்காஞ்சி, விளைந்திருந்தது, பயிர், கானவர், யானை, சான்ற, பத்துப்பாட்டு, என்னும், தட்டை, காற்று, அழகிய, அதில், ஓட்டும், பச்சை, மோதி, இளைஞர், டன்ன, மகளிர், பெரிய, இஞ்சி, தொருசார், அறுவடை, நிலையில், வெள்ளி, யன்ன, சங்க, கருங்கால், போல், பூக்கும், மேயும், மாமலை, பிறவும், ஐயவி, நிலப், பகுதி, ஒருசார்