மதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டு
கா லென்னக் கடிது ராஅய் | 125 |
நாடு கெட எரி பரப்பி ஆலங் கானத் தஞ்சுவர விறுத்து அரசு பட அமரு ழக்கி முரசு கொண்டு களம் வேட்ட அடு திறலுயர் புகழ் வேந்த |
130 |
நெடுஞ்செழியனின் படை ஒன்றோடொன்று உரசிக் கொண்டு காற்றைப்போல் விரைந்து சென்றது. ஆலங்கானப் போரில் வெற்றி பெற்ற பின் அந்நாட்டை எரித்தது. எதிர்த்த அரசர்கள் படுத்துப்போயினர். வென்ற அரசர்களின் முரசுகளைத் தன் நாட்டுக்குக் கொண்டுவந்து வெற்றி முரசமாக நெடுஞ்செழியன் முழக்கினான். இப்படி, ‘அடுதிறல் உயர்புகழ் வேந்தே’!
கொற்கைக்குத் தலைவன்
நட்டவர் குடி யுயர்க் குவை செற்றவர் அரசு பெயர்க் குவை பேரு லகத்து மேஎந் தோன்றிச் சீரு டைய விழுச் சிறப்பின் விளைந்து முதிர்ந்த விழு முத்தின் |
135 |
இலங்கு வளை இருஞ் சேரிக் கட் கொண்டிக் குடிப் பாக்கத்து நற் கொற்கை யோர்நசைப் பொருந |
வேந்தே! நீ உன்னோடு நட்பு கொண்ட அரசர்களின் குடியை உயர்வடையச் செய்வாய். உன்னோடு பகை கொண்ட அரசர்களைப் பெயர்த்தெரிவாய். கொற்கை பேருலகத்தில் பெயர்பெற்று மேலோங்கி நிற்கிறது. அதற்குக் காரணம் சீரும் சிறப்பும் மிக்க முத்து விளையும் சங்குகள் அங்கு விளைவதுதான். கொற்கைத் துறைமுகத்துச் சேரியில் வாழும் குடிமக்கள் செல்வ வளத்தில் கள்ளுண்டு களிப்பினும் உன்னை (நெடுஞ்செழியனை) அடையும் ஆசையோடு போராடுகின்றனர்.
செழியன் பரதவரை வென்றமை
செற்ற தெவ்வர் கலங்கத் தலைச்சென்று அஞ்சுவரத் தட்கும் அணங்குடைத் துப்பிற் |
140 |
கோழூ உன்குறைக் கொழு வல்சிப் புலவு விற் பொலி கூவை ஒன்று மொழி ஒலி யிருப்பில் தென் பரதவர் போ ரேறே |
தென்பரதவர் போர்த்திறம் மிக்கவர். பகைவர் அஞ்சும்படி அவர் நாட்டுக்கே சென்று போரிட்டு அவர்களைத் தடுத்து நிறுத்தும் வல்லமை பெற்றவர். அவர்கள் பகைவரின் கொழுப்பைக் குத்திய அம்போடு கூடிய வில்லைத் தம் கூவைக் குடிசையில் சார்த்தியிருப்பர். ஊரில் ஒன்று கூடித் தம் பெருமையைப் பேசி ஒலித்துக் கொண்டிருப்பர். இப்படிப்பட்ட தென்பரதவரைப் போரிட்டு வென்றவனே!
பகைவரது நாட்டைக் கைக்கொண்ட வெற்றி
அரிய வெல்லாம் எளிதினிற் கொண்டு | 145 |
உரிய வெல்லாம் ஓம்பாது வீசி நனிபுகன் றுறைது மென்னா தேற்றெழுந்து பனிவார் சிமையக் கானம் போகி அகநாடு புக்கவர் விருப்பம் வெளவி யாண்டுபல கழிய வேண்டுபுலத் திறுத்து |
150 |
மேம்பட மரீஇய வெல்போர்க் குருசில் |
நெடுஞ்செழியன் கிடைத்தற்கரிய பொருளையெல்லாம் எளிதாகப் பெற்றவன். அவற்றையும், தனக்கு உரியனவற்றையும் தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் பிறருக்கு அள்ளிக் கொடுத்தவன் இந்த மகிழ்வோடு வாழலாம் என்று எண்ணிக்கொண்டு இருக்காமல் போருக்கு எழுந்தவன். பனிவார் சிமையம் என்பது இமயமலை. இமயமலைக் காட்டுக்குச் சென்று வழியில் இருந்த அகநாட்டு அரசர்களின் கோட்டைகளைக் கைப்பற்றியவன். அப்போது, அங்கெல்லாம் தான் விரும்பிய இடத்தில் தங்கியவன். இப்படிப் போரில் வென்ற அரசுச் செம்மலே!
பகைவர் தேசம் பாழ்பட்ட நிலை
உறு செறுநர் புலம் புக்கவர் கடி காவி னிலை தொலைச்சி இழி பறியாப் பெருந்தண் பணை குரூஉக் கொடிய எரி மேய |
155 |
நா டெனும் பேர் காடாக ஆ சேந்த வழி மாசேப்ப ஊரி ருந்த வழி பாழாக இலங்கு வளை மட மங்கையர் துணங்கை யஞ்சீர்த் தழூஉ மறப்ப |
160 |
அவை யிருந்த பெரும் பொதியிற் கவை யடிக் கடு நோக்கத்துப் பேய் மகளிர் பெயர் பாட அணங்கு வழங்கு மகலாங் கண் நிலத் தாற்றுங் குழூஉப் புதவின் |
165 |
அரந்தைப் பெண்டிர் இனைந்தனர் அகவக் கொழும் பதிய குடி தேம்பச் செழுங் கேளிர் நிழல் சேர நெடுநகர் வீழ்ந்த கரிகுதிர்ப் பள்ளிக் குடுமிக் கூகை குராலொடு முரலக |
170 |
கழுநீர் பொலிந்த கண்ணகன் பொய்கைக் களிறுமாய் செருந்தியொடு கண்பமன் றூர்தர நல்லேர் நடந்த நசைசால் விளைவயல் பன்மயிர்ப் பிணவொடு கேழல் உகள வாழா மையின் வழிதவக் கெட்டுப் |
175 |
பாழா யினநின் பகைவர் தேஎம் |
நெடுஞ்செழிய! உன் பகைவர் நாடு பாழாயிற்று. (எப்படியெல்லாம் பாழாயிற்று என்று இங்குக் கூறப்படுகிறது.) செழியன் வலிமை மிக்க பகைவர் நாட்டுக்குள் புகுந்தான். அவர்களது காவற் காடுகளையும், வயல்களையும் எரித்தான். அதனால் அவர்களின் நாட்டுக்கு ‘நாடு’ என்னும் பேர் இல்லாமல் போய்க் ‘காடு’ என்னும் பெயர் வழங்கலாயிற்று. கறவைப் பசுக்கள் மேய்ந்த வெளிகளில் காட்டு விலங்குகள் திரிந்தன. ஊர் இருந்த இடம் பாழ் நிலமாக மாறியது. அந்த ஊர்களில் வாழும் ஒரு சிலரும் விழாக் கொண்டாடித் துணங்கை ஆடுவதையே மறந்து விட்டனர். மக்கள் கூடி மகிழ்ந்த பொதுமன்றங்களில் பேய்கள் கூத்தாடின. ‘அணங்கு’ என்னும் அழகியர் உலாவிய தெருக்களில் கணவனை இழந்த ‘அரந்தைப் பெண்டிர்’ அழுது கொண்டிருந்தனர். கொழுங்குடி மக்கள் அவர்களின் மூதாதையர் நிழலைச் சென்றடைந்தனர். (மாண்டனர்) கரிக்குதிர்ப்பள்ளி (ஒப்பு நோக்குக ‘குராப்பள்ளி’) ஓங்கி உயர்ந்த மாளிகைகளைக் கொண்ட நகரங்கள் செழியனின் அடிக்கீழ் வீழ்ந்தன. மாடங்களில் மக்கள் நடமாட்டம் இல்லை. மாறாக கூகைகளும் கோட்டான்களும் இருந்து கூவிக்கொண்டிருந்தன. கழுநீர்ப் பூக்கள் பூத்திருந்த பொய்கை காட்டு யானைகள் மேயும் செருந்திப் பூவும், கண்புப் பூவும் பூத்து வறண்டு போயிற்று. நல்லேர் பூட்டி உழுத வயல்களைக் காட்டுப் பன்றிகள் உழுது கொண்டிருந்தன. பகைவர் நாடு இப்படிப் பாழாகி மக்கள் வாழாததால் அந்த இடங்களுக்குச் செல்லும் வழித்தடங்களும் கெட்டுப் போயின.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டு, பகைவர், மக்கள், இலக்கியங்கள், என்னும், மதுரைக்காஞ்சி, அரசர்களின், வெற்றி, கொண்ட, பத்துப்பாட்டு, நாடு, துணங்கை, பேர், புக்கவர், இருந்த, இப்படிப், அவர்களின், காட்டு, அந்த, பூவும், பனிவார், பாழாயிற்று, நல்லேர், கெட்டுப், பெயர், ஒன்று, வென்ற, நெடுஞ்செழியன், குடி, போரில், கொண்டு, சங்க, அரசு, குவை, இலங்கு, சென்று, போரிட்டு, செழியன், வாழும், உன்னோடு, மிக்க, வெல்லாம்