மதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டு
கோயில்களில் அந்தி விழா
நீரு நிலனுந் தீயும் வளியும் மாக விசும்போ டைந்துட னியற்றிய மழுவா ணெடியோன் றலைவ னாக |
455 |
மாசற விளங்கிய யாக்கையர் சூழ்சூடர் வாடாப் பூவின் இமையா நாட்டத்து நாற்ற உணவின் உருகெழு பெரியோர்க்கு மாற்றரு மரபி னுயர்பலி கொடுமார் அந்தி விழவிற் றூரியங் கறங்கத் |
460 |
பௌத்தப் பள்ளி
திண்கதிர் மதாணி யொண்குறு மாக்களை ஓம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித் தாதணி தாமரைப் போதுபிடித் தாங்குத் தாமு மவரும் ஓராங்கு விளங்கக் காமர் கவினிய பேரிளம் பெண்டிர் |
465 |
பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச் சிறந்து புறங்காக்குங் கடவுட் பள்ளியுஞ் |
பூவும் புகையும் ஏந்திக் கொட்டு முழக்குடன் சென்று பேரிளம் பெண்டிர் மதுரைச் சிவபெருமானை வழிபடுவர் - மழுவை வாளாக ஏந்திக்கொண்டிருப்பவன் சிவச்செல்வன் நெடியோன். அவன் நீர், நிலம், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தையும் படைத்தவன். அவனைத் தலைவனாகக் கொண்டவர்கள் இமையா நாட்டத்துப் பலர். (தேவர்) அவர்கள் உயிர்பலி பெறும் நாற்ற உணவினை விரும்புவர். அவர்களுக்குப் பலி கொடுப்பதற்காக ஒருபுறம் மக்கள் அந்திவிழா கொண்டாடிக் கொண்டிருப்பர். அங்கே தூரியப் பறை கறங்கும். தாமரை மொட்டைத் தோளில் தழுவுவது போல மகளிர் தம் குழந்தைகளைத் தழுவிக்கொண்டு அவ் விழாவுக்குச் செல்வர். பேரிளம் பெண்டிர் பூப் போட்டும், புகை காட்டியும் இமையா நாட்டத்துத் தேவர்களை வழிபட்டுப் போற்றுவர். இது சிவன் கடவுள் பள்ளி.
அந்தணர் பள்ளி
சிறந்த வேதம் விளங்கப் பாடி விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து நிலமமர் வையத் தொருதா மாகி. |
470 |
உயர்நிலை யுலக மிவணின் றெய்தும் அறநெறி பிழையா அன்புடை நெஞ்சிற் பெரியோர் மேஎ யினிதி னுறையுங் குன்றுகுயின் றன்ன அந்தணர் பள்ளியும் |
அந்தணர் பள்ளியில் வாழ்வோர் பெரியோர். அந்தப் பெரியோர் சிறந்த வேதம் விளங்கும்படிப் பாடுவர். மேலான சீருடன் வாழ்பவர்கள். ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவர்கள். நிலத்தை விரும்பி வையத்தில் வாழ்பவர்கள். இந்த உலகத்தில் இருந்துகொண்டே உயர்நிலை உலகத்தை அடைபவர்கள். அறநெறி பிழையாதவர்கள். அன்புடை நெஞ்சம் கொண்டவர்கள். (ஒப்பு நோக்குக; ‘அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்- குறள்) மலைக்குன்றைக் குடைந்து வைத்தது போன்ற வீடுகளில் அவர்கள் வாழ்ந்தனர். (வேதம் சிறப்புற்று விளங்கப் பாடினார்களா? மக்களுக்கு விளங்கப் பாடினார்கள் என்றால் அது தமிழ்வேதம்)
அமணப் பள்ளி
வண்டுபடப் பழுநிய தேனார் தோற்றத்துப் | 475 |
பூவும் புகையுஞ் சாவகர் பழிச்சச் சென்ற காலமும் வரூஉ மமயமும் இன்றிவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து வானமு நிலனுந் தாமுழு துணருஞ் சான்ற கொள்கைச் சாயா யாக்க |
480 |
ஆன்றடங் கறிஞர் செறிந்தனர் நோன்மார் |
அகன்ற அறிவும், அதனைக் காட்டிக்கொள்ளாத அடக்கமும் கொண்டு வாழ்பவர் ஆன்றடங்கு அறிஞர். அவர்கள் செறிவும் உடையவர்கள். (அடக்கம் என்பது பகட்டு இல்லாமை. செறிவு அறிவில் செறிவு. ஆன்ற அறிவு என்பது பல்துறையிலும் பரந்திருக்கும் அறிவு.) அவர்களின் கொள்கை சால்பினை உடையது. உடல் சாயாமல் ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் உலகுக்கு உதவுபவர்கள். தேன் நாவில் இனிப்பது போல் அவர்களின் தோற்றம் பார்வைக்கே இனிக்கும். சாவகர் என்போர் அந்த நோன்பிகளின் மாணாக்கர்கள். நோன்பிக்குத் தொண்டு செய்வோரும் சாவகர்களே. (சாவகர் என்பதால் இவர்களைச் சமணத் துறவியர் என்றும் கருதலாம்.) இந்தக் காலத்தை எல்லாரும் அவரவர்களுக்குத் தெரிந்த அளவில் பார்க்கின்றனர். இவர்களோ கடந்த காலத்தை எண்ணிப் பார்த்து, அதனால் எதிர் காலத்தில் நிகழப்போவதையும் தெளிவாக உணர வல்லவர்கள். தம்மைச் சூழ்ந்துள்ள ஒக்கல், தம்மை நாடிவரும் ஒக்கல் ஆகியோரின் எதிர்காலம் பற்றியும் அறிந்துரைக்க வல்லவர்கள் இவர்கள்
கல்பொளிந் தன்ன விட்டுவாய்க் கரண்டைப் பல்புரிச் சிமிலி நாற்றி நல்குவரக் கயங்கண் டன்ன வயங்குடை நகரத்துச் செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து |
485 |
நோக்குவிசை தவிர்ப்ப மேக்குயர்ந் தோங்கி இறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கையுங் |
அரண்மணையில் அரியணை இருக்கும் நாளவையின் பக்கச் சுவர்களில் கமண்டலம் போன்ற உருவ அமைப்புகள் இருந்தன. அவை கல்லை உளியால் பொளித்துச் செதுக்கிச் செய்யப்பட்டிருந்தன. சிமிலி என்னும் புரிசங்குச் சிப்பிகளில் கோவைகள் செய்யப்பட்டு நாலாப் பக்கமும் மறைக்கும் திரைகளாகத் தொங்கவிடப்பட்டிருந்தன. பூத்துக் கிடக்கும் குளம் போல் மாளிகையின் அமைப்பு விளங்கிற்று. சுவர் செம்பால் செய்யப்பட்டது போல் இளஞ்சிவப்பு வண்ணம் தீட்டப்பட்டிருந்தது அருகிலிருந்து அண்ணாந்து பார்க்க முடியாத அளவுக்கு மேலே மேலே உயர்ந்திருந்த மாளிகை அது. அதில் பார்க்கப் பார்க்க வியப்பு உண்டாக்கும் பூங்கட்டில் (அரியணை) இடப்பட்டிருந்தது.
குன்றுபல குழீஇப் பொலிவன தோன்ற |
அறம் கூறு அவையம்
அச்சமும் அவலமும் ஆர்வமு நீக்கிச் செற்றமும் உவகையுஞ் செய்யாது காத்து |
490 |
ஞெமன்கோ லன்ன செம்மைத் தாகிச் சிறந்த கொள்கை அறங்கூ றவையமும் |
அரியணைகள் குன்றுகள் போல் அறங்கூறவையத்தில் ஆங்காங்கே பலருக்கும் இடப்பட்டிருந்தன. அந்தச் சேக்கைகளில் அமர்ந்திருந்தவர்கள் அச்சமோ, அவலமோ, ஆர்வமோ கொள்ளாதவர்களாகவும் சினமோ, உவகையோ சேராதவர்களாகவும், தராசுக் கோல்போல் செம்மை திறம்பாத சிறந்த கொள்கையாளராகவும் விளங்கினர்.
நறுஞ்சாந்து நீவிய கேழ்கிளர் அகலத்து |
காவிதி மாக்கள்
ஆவுதி மண்ணி அவிர்துகில் முடித்து மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல |
495 |
நன்றுந் தீதுங் கண்டாய்ந் தடக்கி அன்பும் அறனும் ஒழியாது காத்துப் பழியொரீஇ யுயர்ந்து பாய்புகழ் நிறைந்த செம்மை சான்ற காவிதி மாக்களும் |
‘காவிதி’ என்னும் விருது சிறந்த உழவருக்கு வழங்கப்பட்டது என்பது ஆன்றோர் முடிபு. அரசனின் நாளவையில் இவர்களுக்குச் சிறப்பிடம் தரப்பட்டிருந்ததை இப் பாடற்பகுதி உணர்த்துகின்றது. அறங்கூறுவதில் காவிதிகளின் கருத்தும் கேட்டறியப்பட்டது. மாவிசும்பு வழங்கும் பெரியோர் வேள்வி செய்து தம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்வர். தூய ஆடை உடுத்தியிருப்பர். மார்பிலே சந்தனம் பூசியிருப்பர். காவிதிகளும் அப் பெரியோர் போன்ற கோலம் கொண்டிருந்தனர். நன்றும் தீதும் கண்டறிந்து அடக்கத்துடன் இவர்கள் வாழ்ந்தனர். பிறரிடம் அன்பைப் பொழிவதோடு நன்னிலையில் அறநெறியையும் பூண்டு மற்றவர்களையும் அறநெறியில் ஒழுகப் பண்ணிக் காத்துவாழ்ந்தனர். பழி வராவண்ணம் தம்மைப் பாதுகாத்துக் கொண்டனர். மேலான புகழோடு சிறப்பாகவும் செம்மையாகவும் வாழ்ந்துவந்தனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டு, சிறந்த, போல், பள்ளி, பெரியோர், இலக்கியங்கள், மதுரைக்காஞ்சி, வேதம், என்பது, பத்துப்பாட்டு, சான்ற, சாவகர், அந்தணர், விளங்கப், பேரிளம், இமையா, பெண்டிர், என்னும், மாவிசும்பு, காலத்தை, அவர்களின், அறிவு, செறிவு, வழங்கும், ஒக்கல், பார்க்க, காவிதி, மேலே, அரியணை, சிமிலி, செம்மை, இவர்கள், வல்லவர்கள், வாழ்பவர்கள், சங்க, ஒழுக்கமொடு, உயர்நிலை, கொண்டவர்கள், பூவும், நிலனுந், நாற்ற, அறநெறி, அன்புடை, என்போர், பூண்டு, அந்தி, மேலான, பெரியோர், றன்ன, வாழ்ந்தனர்