முதுமொழிக் காஞ்சி - பதினெண் கீழ்க்கணக்கு
3. பழியாப் பத்து
21. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் யாப்பி லோரை இயல்குணம் பழியார் |
கடல் சூழ்ந்த உலகத்து மக்களெல்லாருள்ளும் ஒரு செய்கையின் கண்ணும் நிலையில்லாத ரியற்கையாகிய குணத்தை யாவரும்பழியார்.
22. மீப்பி லோரை மீக்குணம் பழியார் |
மேன்மைக்குணம் இல்லாரை மேன்மை செய்யாமையை யாவரும்பழியார்.
23. பெருமை உடையதன் அருமை பழியார் |
பெருமையுடைய தொன்றனைமுடித்துக்கொள்கை அரிதென்று அதனைப் பழித்து முயற்சிதவிரார்.
24. அருமை யுடையதன் பெருமை பழியார் |
அருமையுடைய தொன்றினை முடித்துக்கொள்ளும்பொழுது அரிதென்று பழித்து அதன்கண் டள்ள முயற்சிப் பெருமையைத்தவிரார்.
25. நிறையச் செய்யாக் குறைவினை பழியார் |
ஒருவினையை நிரம்பச் செய்யாதவர்க்கு முன் போய் அக்குறைவினையை யாவரும்பழியார்.
26. முறையில் அரசர்நாட் டிருந்து பழியார் |
நடுவுசெய்யாத அரசர்நாட்டின்கண் இருந்து அவ்வரசர் நடுவுசெய்யாமையை யாவரும்பழியார்.
27. செய்தக்க நற்கேளிர் செய்யாமை பழியார் |
தமக்கு உதவி செய்தற்குத் தக்க நல்ல கேளிர் உதவி செய்திலரென்று பிறர்க்குச் சொல்லிப்பழியார்.
28. அறியாத் தேசத்து ஆசாரம் பழியார் |
தான் அறியாத தேசத்தின்கண் சென்று அங்குள்ளார் ஒழுகும் ஒழுக்கத்தைப் பழியார்.
29. வறியோன் வள்ளியன் அன்மை பழியார் |
வறுமை யுடையானை வண்மையுடையானல்லனென்று பழியார்.
30. சிறியோர் ஒழுக்கம் சிறந்தோரும் பழியார். |
சிறுமைக்குணம் உடையாருடைய கீழ்மைக் குணத்தை ஒழுக்கத்தான் மிக்காரும்கண்டால் பழியார்.
4. துவ்வாப் பத்து
31. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் பழியோர் செல்வம் வறுமையில் துவ்வாது |
ஆர்கலியாற் சூழப்பட்டஉலகத்து எல்லாமக்களுள்ளும் பழியுடையோர் செல்வம்வறுமையின் நீங்கியொழியாது.
32. கழிதறு கண்மை பேடியின் துவ்வாது |
இடமும் காலமும் அறியாது மிக்கதறுகண்மை பேடித்தன்மையின் நீங்கி யொழியாது
33. நாணில் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது |
நாணழிந் துண்டுவாழும் வாழ்க்கை பசித்தலின் நீங்கி யொழியாது.
34. பேணில் ஈகை மாற்றலின் துவ்வாது |
விருப்பமில்லாதகொடை கொடையை நீக்குதலின் ஒழியாது.
35. செய்யாமை மேற்கோள் சிதடியின் துவ்வாது |
செய்யத்தகாதனவற்றை மேற்கொண்டு செய்யத் தொடங்குவது மையற்றன்மையின் நீங்கி யொழியாது.
36. பொய்வே ளாண்மை புலைமையின் துவ்வாது |
பொய்பட்ட உபகாரம் புலைமையின் நீங்கி யொழியாது.
37. கொண்டுகண் மாறல் கொடுமையின் துவ்வாது |
ஒருவனை ஒருவன் நட்பாகக்கொண்டு வைத்துக் கண்ணோட்டத்தை மாறுதல் கொடுமையின் நீங்கி யொழியாது.
38. அறிவிலி துணைப்பாடு தனிமையின் துவ்வாது |
அறிவில்லாதா னொருவனோடு துணைப்பாடு தனிமையின் நீங்கி யொழியாது.
39. இழிவுடை மூப்புக் கதத்தின் துவ்வாது |
இழிவினையுடைய மூப்புப் பிறர் வெறுத்து வெகுளும் வெகுட்சியின் நீங்கி யொழியாது.
40. தானோர் இன்புறல் தனிமையின் துவ்வாது. |
தானே யொருவன் இன்புறுதல் வறுமையின் நீங்கி யொழியாது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதுமொழிக் காஞ்சி - பதினெண் கீழ்க்கணக்கு, பழியார், துவ்வாது, நீங்கி, யொழியாது, இலக்கியங்கள், யாவரும்பழியார், பதினெண், கீழ்க்கணக்கு, காஞ்சி, தனிமையின், முதுமொழிக், உதவி, பசித்தலின், துணைப்பாடு, கொடுமையின், புலைமையின், செய்யாமை, வாழ்க்கை, அரிதென்று, கெல்லாம், மக்கட், யுலகத்து, ஆர்கலி, லோரை, சங்க, பத்து, அருமை, பெருமை, குணத்தை, பழித்து