நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.016.திருப்புகலூர்

4.016.திருப்புகலூர்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அக்கினீசுவரர்.
தேவியார் - கருந்தார்குழலியம்மை.
156 | செய்யர் வெண்ணுலர் கருமான் மறிதுள்ளும் கையர் கனைகழல் கட்டிய காலினர் மெயயர் மெய்ந்நின் றவர்க்கல்லா தவர்க்கென்றும் பொய்யர் புகலூர்ப் புரிசடை யாரே. |
4.016.1 |
புகலூரிலுள்ள முறுக்கேறிய சடையினராகிய பெருமானார் நிறத்தில் செய்யராய், வெண்ணீறு அணிந்தவராய், கரியமான் குட்டி துள்ளும் கையினராய், ஒலிக்கும் வீரக்கழல் கட்டிய காலினராய், உண்மையான நெறியில் ஒழுகும் அடியவர்களுக்கு மெய்யராய், அத்தகுதியில்லாதவர்க்குப் பொய்யராய் உள்ளார்.
157 | மேகந லூர்தியர் மின்போன் மிளிர்சடைப் பாக மதிநுத லாளையொர் பாகத்தர் நாக வளையினர் நாக வுடையினர் போகர் புகலூர்ப் புரிசடை யாரே. |
4.016.2 |
புகலூர்ப் புரிசடையார் மேக நிறத்தினனான திருமாலாகிய காளையைப் பெரிய வாகனமாக உடையவர். மின்னலைப் போல ஒளிவீசும் சடையோடு, பாம்பினைக் கங்கணமாக அணிந்து, யானைத்தோலை மேலுடையாகப் போர்த்திப் பிறை நுதலாளாகிய பார்வதி பாகராய்ப் போகியாயிருந்து உயிர்களுக்குப் போகத்தை அருளுபவராவார்.
158 | பெருந்தாழ் சடைமுடி மேற்பிறை சூடிக் கருந்தாழ் குழலியுந் தாமுங் கலந்து திருந்தா மனமுடை யார்திறத் தென்றும் பொருந்தார் புகலூர்ப் புரிசடை யாரே. |
4.016.3 |
புகலூர்ப் புரி சடையார் பெரிய தாழ்ந்த சடைமுடி மேலே பிறையைச் சூடிக் கரியதாய் நீண்ட கூந்தலை உடைய பார்வதியோடு தாமும் கலந்து, திருந்தாத மனமுடையவர் பக்கல்தாம் என்றும் பொருந்தாராக உள்ளார்.
159 | அக்கா ரணிவட மாகத்தர் நாகத்தர் நக்கா ரிளமதிக் கண்ணியர் நாடொறும் உக்கார் தலைபிடித் துண்பலிக் கூர்தொறும் புக்கார் புகலூர்ப் புரிசடை யாரே. |
4.016.4 |
புகலூர்ப் புரி சடையார் உருத்திராக்கம் நிறைந்த மாலையைப் பூண்ட மார்பினராய், பாம்பினை உடையவராய், ஒளி வீசும் பிறையை முடிமாலையாகச் சூடியவராய், நாள்தோறும் இறந்தவர் மண்டையோட்டினை ஏந்திப் பிச்சை உணவு வாங்க ஊர் தோறும் செல்பவர் ஆவர்.
160 | ஆர்த்தா ருயிரடு மந்தகன் றன்னுடல் பேர்த்தார் பிறைநுதற் பெண்ணினல் லாளுட்கக் கூர்த்தார் மருப்பிற் கொலைக்களிற் றீருரி போர்த்தார் புகலூர்ப் புரிசடை யாரே. |
4.016.5 |
புகலூர்ப் புரிசடையார் ஆரவாரித்துக் கொண்டு உயிர்களைக் கொல்லும் கூற்றுவனுடைய உடலை அழித்தார். பிறைபோன்ற நெற்றியை உடைய பார்வதி அஞ்சுமாறு கூரிய தந்தங்களை உடைய கொலைத் தொழில் புரியும் யானையைக்கொன்று அதனுடைய உதிரப் பசுமை கெடாத தோலினை உடம்பில் போர்த்தி உள்ளார்.
161 | தூமன் சுறவந் துதைந்த கொடியுடைக் காமன் கணைவலங் காய்ந்தமுக் கண்ணினர் சேம நெறியினர் சீரை யுடையவர் பூமன் புகலூர்ப் புரிசடை யாரே. |
4.016.6 |
வலிமை பொருந்திய சுறாக்கொடியை உடைய மன்மதன் விடுத்த அம்புகளின் வலிமையைக் கோபித்த மூன்றாம் கண்ணையுடையவர். அடியவர்களுக்குப் பாதுகாவலை உடைய வழியை அருளுபவர். மரவுரியை உடுப்பவர். அவர் முருகனார் தொடுத்தளித்த பூக்களை எப்போதும் அணிந்தவராகிய, புகலூரில் உகந்தருளியிருக்கும் முறுக்கேறிய சடையினை உடையவர்.
162 | உதைத்தார் மறலி யுருளவொர் காலால் சிதைத்தார் திகழ்தக்கன் செய்தநல் வேள்வி பதைத்தார் சிரங்கரங் கொண்டுவெய் யோன்கண் புதைத்தார் புகலூர்ப் புரிசடை யாரே. |
4.016.7 |
புகலூர்ப் புரிசடையார் கூற்றுவன் உருளுமாறு அவனை ஒரு திருவடியால் உதைத்தவர். சிறப்பாக விளங்கிய தக்கன் செய்த பெரிய வேள்வியைச் சிதைத்தவர். அவ்வேள்வியில் பங்கு கொண்ட தம் தவறு கருதி நடுங்கிய தேவர்களின் தலைகளையும் கைகளையும் போக்கிச் சூரியனுடைய கண்ணை அவித்தவர்.
163 | கரிந்தார் தலையர் கடிமதின் மூன்றும் தெரிந்தார் கணைகள் செழுந்தழ லுண்ண விரிந்தார் சடைமேல் விரிபுனற் கங்கை புரிந்தார் புகலூர்ப் புரிசடை யாரே. |
4.016.8 |
புகலூர்ப் புரிசடையார் இறந்தவருடைய தலை மாலையை அணிந்தவர். காவல் பொருந்திய மும்மதில்களையும் சிவந்த நெருப்பு உண்ணுமாறு அம்புகளைத் தேர்ந்து எடுத்தவர். விரிந்து பரந்த சடையின்மேல் நீர்மிக்க கங்கையை விரும்பி ஏற்றவர்.
164 | ஈண்டா ரழலி னிருவருங் கைதொழ நீண்டார் நெடுந்தடு மாற்ற நிலையஞ்ச மாண்டார்த மென்பு மலர்க்கொன்றை மாலையும் பூண்டார் புகலூர் புரிசடை யாரே. |
4.016.9 |
புகலூர்ப் புரிசடையார் செறிந்த தீப்பிழம்பாய்ப் பிரமனும் திருமாலும் கைகளால் தொழுமாறு நீண்டவர். தம்முடைய நீண்டகாலத் தடுமாற்ற வாழ்வை நினைந்து அஞ்சுமாறு வாழ்ந்து இறந்தவர்களின் எலும்பையும் கொன்றைமலர் மாலையையும் அணிந்தவர்.
165 | கறுத்தார் மணிகண்டங் கால்விர லூன்றி இறுத்தா ரிலங்கையர் கோன்முடி பத்தும் அறுத்தார் புலனைந்து மாயிழை பாகம் பொறுத்தார் புகலூர்ப் புரிசடை யாரே. |
4.016.10 |
புகலூர்ப் புரிசடையார் இரத்தினம் போன்ற செந்நிறமான கழுத்துக் கறுத்து நீலகண்டராயினார். கால் விரலை ஊன்றி இராவணனுடைய பத்துத் தலைகளையும் செயலற்றவை ஆக்கினார். ஐம்புல நுகர்ச்சியையும் துறந்தவர். பார்வதியைப் பாகமாகக் கொண்டவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.016.திருப்புகலூர் , புகலூர்ப், யாரே, புரிசடை, புரிசடையார், உடைய, பெரிய, திருமுறை, உள்ளார், திருப்புகலூர், நான்காம், சடையார், அஞ்சுமாறு, பொருந்திய, தலைகளையும், புரி, அணிந்தவர், பார்வதி, முறுக்கேறிய, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், தேவாரப், கட்டிய, உடையவர், சடைமுடி