மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.022.திருப்பஞ்சாக்கரப்பதிகம்
3.022.திருப்பஞ்சாக்கரப்பதிகம்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
3031 | துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும் வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற் றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே |
3.022.1 |
தூங்கும்பொழுதும், விழித்திருக்கும் பொழுதும், மனம் கசிந்து உருக நாள்தோறும் திருஐந்தெழுத்தை நினைத்துப் போற்றுங்கள். பல வழிகளில் திரிந்து செல்லும் தன்மையுடைய மனத்தை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து ஒருமுகப்படுத்தி இறைவனையே நினைத்து அவன் திருவடிகளை வாழ்த்திப் போற்றிய மார்க்கண்டேயரின் உயிரை அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் இறுதியில் கவர வந்த கூற்றுவனை உதைத்து அழித்தன திருவைந்தெழுத்தே.
3032 | மந்திர நான்மறை யாகி வானவர் சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க் கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே |
3.022.2 |
மந்திரங்களாகவும், நான்கு வேதங்களாகவும் ஆகித் தேவர்களுடைய சிந்தையினுள்ளும் நின்று அவர்களை ஆட்கொண்டு நன்னெறி பயப்பது திருவைந்தெழுத்தே ஆகும். செந்நிற அழலோம்பிச் செம்மை நெறியில் நிற்கும் வேதியர்க்கும் காலை, நண்பகல், மாலை என்ற மூன்று சந்தியா காலங்களிலும் செபிக்க வேண்டிய மந்திரம் திருஐந்தெழுத்தேயாகும்.
3033 | ஊனில்
உயிர்ப்பை யொடுக்கி யொண்சுடர் ஞான விளக்கினை யேற்றி நன்புலத் தேனை வழிதிறந் தேத்து வார்க்கிடர் ஆன கெடுப்பன அஞ்செ ழுத்துமே |
3.022.3 |
உடம்பில் பிராணாயாமத்தால் உயிர்ப்புச் சக்தியை ஒடுக்கி, ஞானவிளக்கம் பெறச் செய்து, அறிவைப் பெறும் வாயில்களால் நல்ல மெய்யறிவை நாடி இறைவனைப் போற்றுவார்கட்கு அறியாமையால் வரும் துன்பங்களைக் கெடுப்பன திருவைந்தெழுத்தேயாகும்.
3034 | நல்லவர்
தீயர் எனாது நச்சினர் செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ கொல்ல நமன்றமர் கொண்டு போமிடத் தல்லல் கெடுப்பன அஞ்செ ழுத்துமே |
3.022.4 |
புண்ணியர், பாவிகள் என்ற பாகுபாடு இன்றி விரும்பிச் செபிப்பவர்கள் யாவரேயாயினும் அவர்களுடைய மலங்களை நீக்கிச் சிவமுத்தி காட்டும் ஆற்றலுடையன திருவைந்தெழுத்தாகும். எமதூதர்கள் வந்து உயிரைக் கொண்டு செல்லும் காலத்தும், மரணத்தறுவாயில் ஏற்படக் கூடிய துன்பத்தைப் போக்குவனவும் திருவைந்தெழுத்தேயாகும்.
3035 | கொங்கலர் வன்மதன் வாளி யைந்தகத் தங்குள பூதமும் அஞ்ச ஐம்பொழில் தங்கர வின்படம் அஞ்சுந் தம்முடை அங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே |
3.022.5 |
வலிய மன்மதனின் அம்பானது தேன்துளிர்க்கும் தாமரை, அசோகு, மா, முல்லை, கருங்குவளை என்ற ஐந்து மலர்கள் ஆகும். இவ்வுலகிலுள்ள பூதங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்தாகும். சோலைகள் அரிசந்தனம், கற்பகம், சந்தானம், பாரிசாதம், மந்தாரம் என ஐந்தாகும். பாம்பின் படம் ஐந்து ஆகும். செபிப்போருடைய கைவிரல்கள் ஐந்தாகும். இவ்வாறு ஐவகையாகக் காணப்படும் யாவற்றுக்கும் ஒப்ப, மந்திரமும் திருவைந்தெழுத்தேயாகும்.
3036 | தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும் வெம்மை நரகம் விளைந்த போழ்தினும் இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும் அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே |
3.022.6 |
தும்மல், இருமல் தொடர்ந்து வந்த பொழுதும், கொடிய நரகத் துன்பத்தை அனுபவிக்க நேரும் பொழுதும், முற்பிறப்புக்களில் செய்த வினை இப்பிறவியில் வந்து வருத்தும் பொழுதும், இப்பிறவியில் நாள்தோறும் ஓதிவந்ததன் பயனால் மறுபிறவியிலும் வந்து துணையாவது திருவைந்தெழுத்தேயாகும்.
3037 | வீடு பிறப்பை அறுத்து மெச்சினர் பீடை கெடுப்பன பின்னை நாள்தொறும் மாடு கொடுப்பன மன்னு மாநடம் ஆடிஉ கப்பன அஞ்செ ழுத்துமே |
3.022.7 |
இறப்பு, பிறப்பு இவற்றை அறுத்து இத்திருமந்திரத்தைப் பாராட்டிச் செபிப்பவர்களின் துன்பங்களை நீக்குவன. தினந்தோறும் செல்வங்கள் யாவும் கொடுப்பன. நிலை பெற்ற நடனத்தையாடும் சிவபெருமான் மகிழ்வன திருவைந்தெழுத்தேயாகும்.
3038 | வண்டம ரோதி மடந்தை பேணின பண்டை யிராவணன் பாடி உய்ந்தன தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க் கண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே |
3.022.8 |
வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலையுடைய உமா தேவியால் செபிக்கப்படும் சிறப்புடையன திருவைந்தெழுத்தாகும். முற்காலத்தில் இராவணன் திருவைந்தெழுத்து ஓதி உய்ந்தான். அடியார்கள் தங்கள் கடமையாகக் கொண்டு, செபித்த அளவில் அவர்களுக்கு அண்டங்களையெல்லாம் அரசாளக் கொடுப்பன இவ்வைந்தெழுத்தாகும்.
3039 | கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச் சீர்வணச் சேவடி செவ்வி நாள்தொறும் பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட் கார்வணம் ஆவன அஞ்செ ழுத்துமே |
3.022.9 |
திருமாலும், பிரமனும் காணவொண்ணாத சிறப்புடைய திருவடிகளின் பெருமையை நாள்தோறும் பலமுறை பேசிப் போற்றும் பக்தர்கட்கு ஆர்வமாக விளங்குவன திருவைந்தெழுத்தாகும்.
3040 | புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச் சித்தத் தவர்கள் தௌந்து தேறின வித்தக நீறணி வார்வி னைப்பகைக் கத்திரம் ஆவன அஞ்செ ழுத்துமே |
3.022.10 |
புத்தர்களும், சமணர்களும் கூறும் பொய் வார்த்தைகளை மனத்திற் கொள்ளாத தௌந்த சித்தத்தவர்களால் உறுதியுடன் ஓதப்படுவன திருவைந்தெழுத்தாகும். சகல சக்திகளுமுடைய திருநீற்றை அணிபவர்களுடன் போர்புரிய வரும் பகைவர்களை எதிர்த்து அம்புபோல் பாய்ந்து அழிக்கவல்லன திருவைந்தெழுத்தேயாகும்.
3041 | நற்றமிழ்
ஞானசம் பந்தன் நான்மறை கற்றவன் காழியர் மன்னன் உன்னிய அற்றமில் மாலையீ ரைந்தும் அஞ்செழுத் துற்றன வல்லவர் உம்ப ராவரே |
3.022.11 |
நன்னெறி கூட்டுவிக்கும் தமிழ் பரப்பும், ஞானசம்பந்தன், நான்கு வேதங்களையும் கற்று வல்லவனாய்ச் சீகாழி மக்கள் தலைவனாய் மனத்தால் தியானித்துப் பாடிய, கேடுகள் வாராமல் தடுக்கும் திருவைந்தெழுத்தின் பெருமைகளை எடுத்துரைக்கும் இம்மாலையின் பத்துப் பாடல்களையும் ஓதவல்லவர்கள் தேவர்களாவார்கள்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.022.திருப்பஞ்சாக்கரப்பதிகம் , அஞ்செ, ழுத்துமே, திருவைந்தெழுத்தேயாகும், கொண்டு, கெடுப்பன, திருவைந்தெழுத்தாகும், பொழுதும், போழ்தினும், வந்து, திருமுறை, ஆகும், நாள்தொறும், கொடுப்பன, ஐந்தாகும், திருப்பஞ்சாக்கரப்பதிகம், நாள்தோறும், இப்பிறவியில், பேசிப், ஐந்து, அறுத்து, தும்மல், இருமல், மந்திரம், திருச்சிற்றம்பலம், செல்லும், பதிகங்கள், தேவாரப், மூன்றாம், வந்த, திருவைந்தெழுத்தே, நன்னெறி, நான்கு, செம்மை, நான்மறை, வரும்