மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.023.திருவிற்கோலம்
3.023.திருவிற்கோலம்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. இந்தத்தலம் கூவமென வழங்கப்படுகின்றது.
சுவாமிபெயர் - புராந்தகேசுவரர்.
தேவியார் - புராந்தரியம்மை.
3042 | உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர் திருவினான் வளர்சடைத் திங்கள் கங்கையான் வெருவிவா னவர்தொழ வெகுண்டு நோக்கிய செருவினான் உறைவிடம் திருவிற் கோலமே |
3.023.1 |
அழகே உருவான உமாதேவியோடு ஒன்றிநின்ற, செல்வரான சிவபெருமான் தம் சடைமுடியில் திங்களும், கங்கையும் சூடியவர். வானவர்கள் அஞ்சித் தொழுது போற்றுமாறு, வெகுண்டெழுந்து போர்க்கோலம் பூண்டு வில்லேந்தி, அப்பெருமான் வீற்றிருந்தருளுகிற இடம் திருவிற்கோலம் ஆகும்.
3043 | சிற்றிடை யுமையொரு பங்க னங்கையில் உற்றதோர் எரியினன் ஒரு சரத்தினால் வெற்றிகொள் அவுணர்கள் புரங்கள் வெந்தறச் செற்றவன் உறைவிடம் திருவிற் கோலமே |
3.023.2 |
சிறிய இடையையுடைய உமாதேவியைத் தம் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு, அழகிய கையில் நெருப்பு ஏந்தி விளங்கும் சிவபெருமான், ஓர் அம்பால் அசுரர்களின் மூன்று புரங்களும் வெந்தழியுமாறு போர்செய்து வெற்றி கொண்டவர். அப்பெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம் திருவிற்கோலம் என்னும் கோயிலாகும்.
3044 | ஐயன்நல் லதிசயன் அயன்விண் ணோர்தொழும் மையணி கண்டனார் வண்ண வண்ணம்வான் பையர வல்குலாள் பாகம் ஆகவும் செய்யவன் உறைவிடம் திருவிற் கோலமே |
3.023.3 |
இறைவர் யாவற்றுக்கும் தலைவர். பல பல வேடம் கொள்ளும் அதிசயர். பிரமமும், மற்றுமுள்ள விண்ணோர்களும் தொழுகின்ற மை போன்ற இருண்ட கண்டத்தர். நல்ல வண்ணமுடைய, பாம்பின் படம் போன்ற அல்குலையுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு செம்மேனியராய் அவர் வீற்றிருந்தருளும் இடம் திருவிற்கோலம் ஆகும்.
3045 | விதைத்தவன் முனிவருக் கறமுன் காலனை உதைத்தவன் உயிரிழந் துருண்டு வீழ்தரப் புதைத்தவன் நெடுநகர்ப் புரங்கள் மூன்றையும் சிதைத்தவன் உறைவிடம் திருவிற் கோலமே |
3.023.4 |
இறைவன் சனகாதி முனிவர்கட்கு அறக்கருத்துக்களை நன்கு பதியும்படி உபதேசித்தவன். மார்க்கண்டேயனின் உயிரைக் கவரவந்த காலனைக் காலால் உதைத்து உருண்டு விழும்படி செய்தவன். திரிபுரங்கள் மூன்றையும் எரித்துச் சாம்பலாகுமாறு சிதைத்தவன். அப்பெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம் திருவிற்கோலம் என்பதாம்.
3046 | முந்தினான் மூவருள் முதல்வன் ஆயினான் கொந்துலா மலர்ப்பொழிற் கூக மேவினான் அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை சிந்துவான் உறைவிடம் திருவிற் கோலமே |
3.023.5 |
இறைவன் எல்லாப் பொருள்கட்கும் முற்பட்டவன். மும்மூர்த்திகளுக்குள் தலைவனானவன். கொத்தாகப் பூக்கும் மலர்கள் நிறைந்த சோலைகளையுடைய கூகம் என்னும் ஊரில் வீற்றிருப்பவன். மாலையில் வானில் தோன்றும் பிறைச் சந்திரனைச் சூடியவன். அடியவர்களைப் பற்றியுள்ள வினைகள் நீங்கும்படி செய்பவன். அப்பெருமான் வீற்றிருந்தருளுமிடம் திருவிற்கோலம் ஆகும்.
3047 | தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம் வகுத்தவன் வளர்பொழிற் கூக மேவினான் மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்தறச் செகுத்தவன் உறைவிடம் திருவிற் கோலமே |
3.023.6 |
இறைவன் அரிய நான்கு வேதங்களையும் அவற்றின் ஆறங்கங்களையும் தொகுத்தவன். சிவாகமங்களை அருளிச் செய்தவன். வளமையான சோலைகளையுடைய கூகம் என்னும் ஊரில் வீற்றிருக்கும் அவன், தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன். செருக்குற்று மிகுந்த கொடுமைகளைச் செய்த அசுரர்களின் முப்புரங்களை வெந்தழியும்படி செய்தவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவிற்கோலம் ஆகும்.
3048 | விரித்தவன் அருமறை விரிச டைவெள்ளம் தரித்தவன் தரியலர் புரங்கள் ஆசற எரித்தவன் இலங்கையர் கோன்இ டர்படச் சிரித்தவன் உறைவிடம் திருவிற் கோலமே |
3.023.7 |
அரும்பொருளுரைக்கும் வேதங்களை இறைவன் விரித்து அருளியவன். விரிந்து சென்ற கங்கையைச் சடைமுடியில் தாங்கியவன். பகையசுரர்களின் முப்புரங்கள் அற்றொழியும்படி எரித்தவன். இலங்கை மன்னனான இராவணன் கயிலையின் கீழ்த்துன்புறும்படி செய்து, பின் அருள் புரிந்த விளையாடல் செய்தவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவிற்கோலம் ஆகும்.
3049 | திரிதரு புரம்எரி செய்த சேவகன் வரியர வொடுமதி சடையில் வைத்தவன் அரியொடு பிரமனதாற்ற லால் உருத் தெரியலன் உறைவிடம் திருவிற் கோலமே |
3.023.9 |
இறைவன் வானத்திலே பறந்து திரிந்து தேவர்கட்குத் தீங்குகள் செய்த அசுரர்களின் முப்புரங்களை எரித்தவன். வரிகளையுடைய பாம்பையும், சந்திரனையும் சடையிலே அணிந்தவன். திருமாலும், பிரமனும் தமது ஆற்றலைப் பெரிதாகக் கொண்டு முனைந்ததால் காண்பதற்கு அரியவனானவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருவிற்கோலம் ஆகும்.
3050 | சீர்மையில் சமணொடு சீவ ரக்கையர் நீர்மைஇல் உரைகள்கொள் ளாத நேசர்க்குப் பார்மலி பெருஞ்செல்வம் பரிந்து நல்கிடும் சீர்மையி னான்இடம் திருவிற் கோலமே |
3.023.10 |
இறையுண்மையை உணரும் தன்மையில்லாத சமணர்களும், புத்தர்களும் கூறும் உரைகளைக் கொள்ளாது, இறை நம்பிக்கையுடன் அவன்மீது பக்தி செலுத்துபவர்கட்கு உலகில் பெருஞ்செல்வத்தைப் பரிவுடன் இறைவன் தருவான். அத்தகைய மேன்மையுடைய பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவிற்கோலம் ஆகும்.
3051 | கோடல்வெண் பிறையனைக் கூக மேவிய சேடன செழுமதில் திருவிற் கோலத்தை நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன பாடல்வல் லார்களுக் கில்லை பாவமே |
3.023.11 |
வளைந்த வெண்ணிறப் பிறைச்சந்திரனைச் சடையில் சூடி, கூகம் என்னும் ஊரில், அழகிய, வளமையான மதில்களையுடைய திருவிற்கோலம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளும் சிவபெருமானை நினைத்துத் தமிழ் ஞானசம்பந்தன் பாடல்களைப் பாட வல்லவர்கட்குப் பாவம் இல்லை.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.023.திருவிற்கோலம் , திருவிற்கோலம், திருவிற், கோலமே, உறைவிடம், அப்பெருமான், ஆகும், இடம், இறைவன், வீற்றிருந்தருளும், என்னும், புரங்கள், செய்தவன், கொண்டு, அசுரர்களின், கூகம், திருமுறை, ஊரில், செய்த, எரித்தவன், மேவினான், முப்புரங்களை, வளமையான, சோலைகளையுடைய, தொகுத்தவன், சடையில், அருமறை, அழகிய, திருச்சிற்றம்பலம், சிவபெருமான், பதிகங்கள், தேவாரப், மூன்றாம், சடைமுடியில், வெந்தறச், மூன்றையும், வீற்றிருந்தருளுகின்ற, பாகமாகக், உமாதேவியைத், சிதைத்தவன்