மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.021.திருக்கருக்குடி
3.021.திருக்கருக்குடி
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சற்குணலிங்கேசுவரர்.
தேவியார் - சர்வாலங்கிரதமின்னம்மை.
3020 | நனவிலும் கனவிலும் நாளும் தன்னொளி நினைவிலும் எனக்குவந் தெய்து நின்மலன் கனைகடல் வையகம் தொழுக ருக்குடி அனலெரி யாடுமெம் அடிகள் காண்மினே |
3.021.1 |
நான் விழித்திருக்கும் பொழுதும், கனவு காணும்பொழுதும், உள்ளொளியாக நெஞ்சில் நின்று நினைவிலும் எனக்குக் காட்சி தரும், இயல்பாகவே பாசங்களின் நீங்கியவனாகிய இறைவனாய், ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த இப்பூவுலகத்தோர் போற்றும் திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற, நெருப்பைக் கையிலேந்தி ஆடுகின்ற எம் தலைவரான சிவபெருமானைத் தரிசித்துப் பயனடைவீர்களாக.
3021 | வேதியன் விடையுடை விமலன் ஒன்னலர் மூதெயில் எரியெழ முனிந்த முக்கணன் காதியல் குழையினன் கருக்கு டியமர் ஆதியை அடிதொழ அல்ல லில்லையே |
3.021.2 |
வேதத்தை அருளிச் செய்தவனும், வேதப் பொருளாக விளங்குபவனும், இயல்பாகவே பாசங்களின் நீங்கிய வனும், பகையசுரர்களின் மூன்று மதில்களும் எரிந்து சாம்பலாகுமாறு கோபித்த முக்கண்ணனுமான சிவபெருமான் காதில் குழை அணிந்தவனாய்த் திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான். எப்பொருட்கும் முதல்வனான அப்பெருமானின் திருவடிகளைத் தொழத் துன்பம் இல்லை.
3022 | மஞ்சுறு பொழில்வள மலிக ருக்குடி நஞ்சுறு திருமிட றுடைய நாதனார் அஞ்சுரும் பார்குழல் அரிவை அஞ்சவே வெஞ்சுரந் தனில்விளை யாடல் என்கொலோ |
3.021.3 |
மேகம் சூழும் சோலைகளையுடைய வளம் மிக்க திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற நஞ்சுண்ட திருக்கழுத்தையுடைய தலைவரான சிவபெருமான், அழகிய வண்டுகள் மொய்க்கும் கூந்தலையுடைய உமாதேவி அஞ்சம்படி கொடிய சுடுகாட்டில் ஆடல் செய்வது என்கொல்?
3023 | ஊனுடைப் பிறவியை அறுக்க உன்னுவீர் கானிடை யாடலான் பயில்க ருக்குடிக் கோனுயர் கோயிலை வணங்கி வைகலும் வானவர் தொழுகழல் வாழ்த்தி வாழ்மினே |
3.021.4 |
வினைப்பயனை அனுபவிக்க உடம்பெடுத்த இப்பிறவியை ஒழிக்க நினைக்கும் மாந்தரீர்! சுடுகாட்டில் திருநடனம் செய்யும் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கருக்குடி என்னும் திருத்தலத்திலுள்ள உயர்ந்த கோயிலை வணங்கியும், நாள்தோறும் வானவர்கள் தொழுகின்ற அப்பெருமானின் திருவடிகளை வாழ்த்தியும் வாழ்வீர்களாக!
3024 | சூடுவர் சடையிடைக் கங்கை நங்கையைக் கூடுவர் உலகிடை ஐயங் கொண்டொலி பாடுவர் இசைபறை கொட்ட நட்டிருள் ஆடுவர் கருக்குடி அண்ணல் வண்ணமே |
3.021.5 |
இறைவர் சடைமுடியில் கங்கையைச் சூடி உள்ளார். தம் திருமேனியில் ஒரு பாகமாக உமாதேவியை வைத்துள்ளார். இவ்வுலகில் பிச்சை ஏற்கும் பொழுது இசையோடு பாடுவார். பறைகொட்ட நள்ளிருளில் நடனம் ஆடுவார். இது திருக்கருக்குடியில் வீற்றிருந்தருளும் தலைவரான சிவபெருமானின் அருள் தன்மையாகும்.
3025 | இன்புடை யாரிசை வீணை பூணரா என்புடை யாரெழின் மேனி மேலெரி முன்புடை யார்முதல் ஏத்தும் அன்பருக் கன்புடை யார்கருக் குடியெம் அண்ணலே |
3.021.6 |
திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் தலைவரான சிவபெருமான் வீணையை இசைத்துப் பாடுவதில் மகிழ்பவர். தம்முடைய அழகிய திருமேனியில் பாம்பையும்,எலும்பையும் ஆபரணமாக அணிந்துள்ளவர். எரிகின்ற நெருப்பைத் திருக்கரத்தில் ஏந்தியுள்ளவர். யாவற்றுக்கும் மூலப் பொருளாகிய, முதற்பொருளாக விளங்குபவர். அன்பர்களிடத்து அன்புடையவர்.
3026 | காலமும் ஞாயிறுந் தீயும் ஆயவர் கோலமும் முடியர வணிந்த கொள்கையர் சீலமும் உடையவர் திருக்க ருக்குடிச் சாலவும் இனிதவ ருடைய தன்மையே |
3.021.7 |
சிவபெருமான் கால தத்துவமாகவும், அதனைக் கடந்தும் விளங்குபவர். ஞாயிறு முதலிய சுடராக ஒளிர்பவர். நெருப்பு முதலிய பஞ்சபூதங்களானவர். தம் சடைமுடியில் பாம்பணிந்தவர். சிறந்த புகழை உடையவர். திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அப்பெருமானின் தன்மை சாலவும் இனிதாகும்.
3027 | எறிகடல் புடைதழு விலங்கை மன்னனை முறிபட வரையிடை யடர்த்த மூர்த்தியார் கறைபடு பொழின்மதி தவழ்க ருக்குடி அறிவொடு தொழுமவர் ஆள்வர் நன்மையே |
3.021.8 |
அலைவீசுகின்ற கடலையுடைய இலங்கை மன்னனான இராவணனை நிலை கெடும்படி மலையிடையில் வைத்து அடர்த்த சிவமூர்த்தியாகிய இறைவர், மரங்களின் அடர்த்தியால் இருண்ட சோலைகளில் சந்திரன் தவழும் திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவராய், தம்மை ஞானத்தால் தொழும் அடியவர்கட்கு நன்மையைத் தந்தருளி ஆட்சி செய்கின்றார்.
3028 | பூமனுந் திசைமுகன் றானும் பொற்பமர் வாமனன் அறிகிலா வண்ண மோங்கெரி ஆமென வுயர்ந்தவன் அணிக ருக்குடி நாமன னினில்வர நினைதல் நன்மையே |
3.021.9 |
தாமரைப் பூவில் வாழ்கின்ற பிரமனும், அழகிய வாமனாவதாரம் எடுத்த திருமாலும் அறிய முடியா வண்ணம், ஓங்கிய நெருப்பு மலையாய் உயர்ந்து நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தை நாம் மனத்தால் நினைந்து வழிபட நன்மையாகும்.
3029 | சாக்கியர் சமண்படு கையர் பொய்ம்மொழி ஆக்கிய வுரைகொளேல் அருந்தி ருந்நமக் காக்கிய அரனுறை அணிக ருக்குடிப் பூக்கமழ் கோயிலே புடைபட் டுய்ம்மினே |
3.021.10 |
புத்தரும், சமணர்களுமான வஞ்சகர் கூறும் பொய்ம்மொழிகளை உரையாகக் கொள்ள வேண்டா. பெறுதற்கரிய சைவசமயத்தில் நம்மைப் பிறக்குமாறு செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற அழகிய திருக்கருக்குடி என்னும் திருத்தலத்திலுள்ள பூமணம் கமழும் திருக்கோயிலைச் சார்ந்து உய்தி அடையுங்கள்.
3030 | கானலில்
விரைமலர் விம்மு காழியான் வானவன் கருக்குடி மைந்தன் றன்னொளி ஆனமெய்ஞ் ஞானசம் பந்தன் சொல்லிய ஊனமில் மொழிவலார்க் குயரு மின்பமே |
3.021.11 |
கடற்கரைச் சோலைகளில் நறுமணம் கமழும் மலர்கள் நிறைந்த சீகாழியில் அவதரித்த, வானவர் தொழுதெழு திருக்கருக்குடி என்னும் திருத்தலத்திலுள்ள சிவனொளியே தானான மெய்ஞ்ஞான சம்பந்தன் அருளிய குற்றமில்லாத இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்குப் பேரின்பம் மிகும்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.021.திருக்கருக்குடி , திருக்கருக்குடி, என்னும், சிவபெருமான், வீற்றிருந்தருளுகின்ற, திருத்தலத்தில், அழகிய, ருக்குடி, தலைவரான, திருத்தலத்திலுள்ள, திருமுறை, அப்பெருமானின், விளங்குபவர், உடையவர், சாலவும், வீற்றிருந்தருளும், திருமேனியில், சோலைகளில், நெருப்பு, அணிக, நன்மையே, கமழும், முதலிய, சடைமுடியில், சுடுகாட்டில், திருச்சிற்றம்பலம், பதிகங்கள், தேவாரப், மூன்றாம், நினைவிலும், இயல்பாகவே, கருக்குடி, வானவர், கோயிலை, பாசங்களின், இறைவர்