வேல் விருத்தம் - 8 - வேல் விருத்தம்
மாண்ட் - கண்ட சாபு
மாமுதல் தடிந்து தண் மல்குகிரி யூடு போய் வலிய தானவர் மார்பிடம் வழிகண்டு கமல பவனத்தனை சிறையிட்டு மகவான் தனை சிறைவிடுத்து ஓமவிருடித் தலைவர் ஆசிபெற்ற் உயர்வானில் உம்பர் சொற்றுதி பெற்று நா உடைய கீரன் தனது பாடல் பெற்றுலகு தனில் ஒப்பில் புகழ் பெற்ற வைவேல் சோம கலச ப்ரபா லங்கார தர ஜடா சூடி காலாந்த காலர் துங்க ரக்ஷக த்ரோண கட்க குலிசஞ்சூல துரக கேசர மாம்பரச் சேம வடவாம்புயப் பரண சங்காபரண திகம்பர த்ரியம்பக மகா தேவ நந்தன கஜானன சகோதர குகன் செம்பொற்றிருக்கை வேல் (ஒப்பில் புகழ் பெற்ற வைவேல்) |
முதல்வனாய் நின்று மா மரமாய் மாறின சூரபத்மனை அழித்து, குளிர்ந்த ஏழு மலைகளையும் ஊடுருவிச் சென்று அந்த மலைகளில் வசித்த அசுரர்களின் வலிய மார்பினை, பிளந்து அப்புறமாகச் சென்றும், தாமரைப் பூவினில் வாசம் செய்யும் பிரமனை, பிரணவப் பொருளை தெரியாமல் இருந்த குற்றத்திற்காக சிறையில் அடைத்தும், நூறு அஸ்வமேத யாகம் செய்த இந்திரனை, சூர பத்மா அடைத்த சிறையினின்றும் விடுவித்தும், யாகங்கள் செய்யும் முனிவர்களின் வாழ்த்து பெற்று, மேலே சொர்க்கத்தில் தேவர்களால் செய்யப்பட்ட துதிகளைப் பெற்று, நா வன்னை உடைய கீரனின் துதி பாடல்களைப் பெற்று, இந்த உலகங்களில் யாருக்குமே இல்லாத வகையில் கீர்த்தியைப் பெற்ற கூரிய வேலாயுதம் (அது யாருடையது என வினவினால்) கிண்ணம் போன்ற பிறைச் சந்திரனின், ஒளிவீசும் அலங்காரத்தை, ஜடா முடியில் தரித்துள்ளவரும், எமனுக்கும் மரணத்தை விளைவிப்பவரும், பரிசுத்தம் வாய்ந்து உலகை பாதுகாக்கும் வில், வாள் வஜ்ராயுதம் சூலம் இவைகளைக் கொண்டுள்ளவரும் குதிரையின் உருவத்தைக் கொண்டு, சிங்கம் போன்ற கம்பீரத்துடன், சமுத்திரத்தை, பாதுகாத்து வரும், வடவாமுகாக்னியை, அபிஷேக நீராக, கொள்பவரும், வெண் சங்கை காதில் ஆபரணமாக கொண்டவரும், திக்குகளை ஆடையாகக் கொண்டவரும், முக்கண்ணரும் ஆகிய, சிவபெருமானின் குமாரனும், யானைமுகக் கடவுளான விநாயகப் பெருமானின் சகோதரனுமாகிய, முருக மூர்த்தியின், அழகிய பொன்போன்ற கரத்தில் தங்கும் வேலாயுதமே அது
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேல் விருத்தம் - 8 - வேல் விருத்தம், Vel Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெற்று, பெற்ற, வைவேல், கொண்டவரும், செய்யும், புகழ், உடைய, ஒப்பில், வலிய