பாடல் 974 - இலஞ்சி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தான தனந்த தான தனந்த தனா தனந்த ...... தனதான |
மாலையில் வந்து மாலை வழங்கு மாலை யநங்கன் ...... மலராலும் வாடை யெழுந்து வாடை செறிந்து வாடை யெறிந்த ...... அனலாலுங் கோல மழிந்து சால மெலிந்து கோமள வஞ்சி ...... தளராமுன் கூடிய கொங்கை நீடிய அன்பு கூரவு மின்று ...... வரவேணும் கால னடுங்க வேலது கொண்டு கானில் நடந்த ...... முருகோனே கான மடந்தை நாண மொழிந்து காத லிரங்கு ...... குமரேசா சோலை வளைந்து சாலி விளைந்து சூழு மிலஞ்சி ...... மகிழ்வோனே சூரிய னஞ்ச வாரியில் வந்த சூரனை வென்ற ...... பெருமாளே. |
அந்திப் பொழுதில் வந்து காம இச்சையைத் தருகின்ற (மகிழம் பூ) மாலையை அணிந்த மன்மதன் எய்கின்ற மலர்ப் பாணங்களாலும், வாடைக் காற்று கிளம்பி, (அதனுடன் கலந்து வரும் மலர்களின்) வாசனைகள் மிகுந்து வடவா முகாக்கினி போல வீசி எறியும் நெருப்பாலும், தனது அழகு எல்லாம் அழிந்து, மிகவும் மெலிந்து, அந்த இளமை வாய்ந்த வஞ்சிக்கொடி போன்ற பெண் சோர்வு அடைவதற்கு முன்பு, இளமை கூடிய மார்பு அன்பு மிக்கு விம்மும் படியாகவும் நீ இன்று வந்து அருள வேண்டும். யமன் நடுங்கவும், கையிலே வேலாயுதத்தைக் கொண்டு, (பொய்யாமொழிப் புலவர் வரும்) காட்டில் (வேடனாய்) நடந்த முருகனே,* வள்ளி மலைக் காட்டில் இருந்த பெண்ணாகிய வள்ளி நாணும்படியாக அவளிடம் பேசி, அவள்மீது உனக்கிருந்த காதலை வெளிப்படுத்திய குமரேசனே, சோலைகள் சுற்றியும் உள்ள, நெற்பயிர் உள்ள வயல்கள் விளைந்து சூழ்ந்துள்ள, இலஞ்சி** என்னும் நகரில் (வீற்றிருந்து) மகிழ்ச்சி கொண்டவனே, சூரியன் தான் உதிப்பது எப்படி என்று பயப்படும்படியாக, கடலில் நின்று கொண்டிருந்த (மாமரமாகிய) சூரனை வென்ற பெருமாளே.
* சிவனையே பாடும் பொய்யாமொழிப் புலவர் முருகனைப் பாடாது இருக்க, அவரது ஆணவத்தை அடக்க முருகன் வேலைத் தோளில் தாங்கி வேடனாக வந்து காட்டில் புலவர் தனிவழி செல்கையில் மடக்கி ஆட்கொண்டார்.
** இலஞ்சி தென்காசி ரயில் நிலையத்துக்கு 4 மைலில் உள்ள தலம். குற்றால அருவிக்கு மிக அருகில் உள்ளது.இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.மன்மதன், மலர்க் கணைகள், வடக்கே இருந்து வீசும் வாடைக் காற்று - இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 974 - இலஞ்சி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வந்து, புலவர், தனந்த, உள்ள, காட்டில், வாடை, முருகனைப், காற்று, வரும், பொய்யாமொழிப், வாடைக், வள்ளி, இளமை, வென்ற, அன்பு, கூடிய, மெலிந்து, மாலை, கொண்டு, நடந்த, பெருமாளே, சூரனை, விளைந்து, மன்மதன்