பாடல் 963 - மதுரை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தானத்தன தானன தானன தானத்தன தானன தானன தானத்தன தானன தானன ...... தனதான |
ஏலப்பனி நீரணி மாதர்கள் கானத்தினு மேயுற வாடிடு மீரத்தினு மேவளை சேர்கர ...... மதனாலும் ஏமக்கிரி மீதினி லேகரு நீலக்கய மேறிய னேரென ஏதுற்றிடு மாதன மீதினு ...... மயலாகிச் சோலைக்குயில் போல்மொழி யாலுமெ தூசுற்றிடு நூலிடை யாலுமெ தோமிற்கத லீநிக ராகிய ...... தொடையாலும் சோமப்ரபை வீசிய மாமுக சாலத்திலு மாகடு வேல்விழி சூதத்தினு நானவ மேதின ...... முழல்வேனோ ஆலப்பணி மீதினில் மாசறு மாழிக்கிடை யேதுயில் மாதவ னானைக்கினி தாயுத வீயருள் ...... நெடுமாயன் ஆதித்திரு நேமியன் வாமன னீலப்புயல் நேர்தரு மேனியன் ஆரத்துள வார்திரு மார்பினன் ...... மருகோனே கோலக்கய மாவுரி போர்வையர் ஆலக்கடு வார்கள நாயகர் கோவிற்பொறி யால்வரு மாசுத ...... குமரேசா கூர்முத்தமிழ் வாணர்கள் வீறிய சீரற்புத மாநக ராகிய கூடற்பதி மீதினில் மேவிய ...... பெருமாளே. |
வாசனைத் தைலமும், பன்னீரும் பூசும் (கூந்தலை உடைய) விலைமாதர்களின் இசைப் பாடல் மீதும், உறவாடிப் பேசும் அன்பு மொழிகள் மீதும், வளையல் அணிந்த கரங்களின் மீதும், பொன்மலையின் மீது கரிய யானை ஏறியது போன்று பொருந்தினவாய் விளங்கும் பெரிய மார்பகங்களின் மீதும் காம இச்சை கொண்டு, சோலையில் உள்ள குயிலின் குரல் போன்ற பேச்சுக்களாலும், ஆடை சுற்றியுள்ள நூல் போன்ற இடையாலும், குற்றம் இல்லாத வாழைத் தண்டுக்கு ஒப்பான தொடையாலும், நிலவொளி வீசிடும் அழகிய முகத்தின் மினுக்கு நடிப்பாலும், மிக்க விஷம் கொண்ட வேல் போன்ற கூரிய கண்களின் சூதிலும் அகப்பட்டு, நான் வீணாக நாள்தோறும் அலைச்சல் உறுவேனோ? விஷம் கொண்ட பாம்பாகிய ஆதிசேஷன் மேல் குற்றம் இல்லாத பாற்கடலிடையே அறிதுயில் கொண்டுள்ள பெரியோன், யானையாம் கஜேந்திரனுக்கு அன்புடனே உதவி செய்தருளிய பெரிய மாயவன், ஆதி மூர்த்தியாய் விளங்கும் அழகிய சக்ராயுதன், வாமன அவதாரம் (குறள் வடிவம்) எடுத்தவன், நீல மேகம் போன்ற கரிய நிறம் கொண்டவன், மாலையாக துளசியை நிரம்பக் கொண்ட அழகிய மார்பை உடையவன் ஆகிய திருமாலின் மருகனே, அழகிய யானையின் பெரிய உரித்தோலை போர்வையாகக் கொண்டவர், ஆலகால விஷம் நிறைந்த கழுத்தைக் கொண்ட தலைவராகிய சிவபெருமானின் கண்களினின்று எழுந்த தீப்பொறியால் வெளிவந்த சிறந்த பிள்ளையான குமரேசனே, சிறந்த முத்தமிழ்ப் புலவர்கள் விளங்கிய சிறப்பைக் கொண்ட அற்புதமான பெருநகரமாகிய நான்மாடற்கூடலாம் மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 963 - மதுரை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, கொண்ட, அழகிய, மீதும், பெரிய, தானத்தன, விஷம், சிறந்த, இல்லாத, ராகிய, யாலுமெ, குற்றம், விளங்கும், மீதினில், வாமன, பெருமாளே, கரிய, தொடையாலும்