பாடல் 894 - குறட்டி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தானன தனத்த தான தானன தனத்த தான தானன தனத்த தான ...... தனதான |
நீரிழிவு குட்ட மீளை வாதமொடு பித்த மூல நீள்குளிர் வெதுப்பு வேறு ...... முளநோய்கள் நேருறு புழுக்கள் கூடு நான்முக னெடுத்த வீடு நீடிய விரத்த மூளை ...... தசைதோல்சீ பாரிய நவத்து வார நாறுமு மலத்தி லாறு பாய்பிணி யியற்று பாவை ...... நரிநாய்பேய் பாறோடு கழுக்கள் கூகை தாமிவை புசிப்ப தான பாழுட லெடுத்து வீணி ...... லுழல்வேனோ நாரணி யறத்தி னாரி ஆறுச மயத்தி பூத நாயக ரிடத்து காமி ...... மகமாயி நாடக நடத்தி கோல நீலவ ருணத்தி வேத நாயகி யுமைச்சி நீலி ...... திரிசூலி வாரணி முலைச்சி ஞான பூரணி கலைச்சி நாக வாணுத லளித்த வீர ...... மயிலோனே மாடம தில்முத்து மேடை கோபுர மணத்த சோலை வாகுள குறட்டி மேவு ...... பெருமாளே. |
நீர் இழிவு, குஷ்ட நோய், கோழை, வாயு இவைகளோடு பித்த நோய், வெகு நாளாக உள்ள குளிர் நோய், சுர நோய், மற்ற நோய்கள், வேர் ஊன்றி இருப்பதுவாய், புழுக்களுக்கு இருப்பிடமானதாய், பிரமனால் படைக்கப்பட்டது (இந்த உடலாகிய) வீடு. நெடிதாய்ப் பரவி இருக்கும் ரத்தம், மூளை, மாமிசம், தோல், சீழ் ஆகியவைகள் பொருந்திய பருத்த, ஒன்பது துவாரங்களை உடைய, நாற்றம் மிகுந்த, ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களின் வழியால் ஏற்படுகின்ற பிணி இவைகளால் ஆக்கப்பட்ட பொம்மை. நரியும் நாயும் பேயும் பருந்தும் கழுகுகளும் கோட்டான்களும் இவைகள் உண்ணுவதற்கு உரிய பாழான இந்த உடலை நான் எடுத்து வீண் பொழுது போக்கித் திரிவேனோ? துர்க்கை, முப்பத்திரண்டு அறங்களைப்* புரிந்த தேவி, ஆறு சமயங்களையும் சார்ந்தவள், பூத கணங்களுக்குத் தலைவரான சிவபெருமானுடைய இடது பாகத்தில் விரும்பி இருப்பவள், மகமாயி, நடனங்களைச் செய்பவள், அழகிய நீல நிறம் உடையவள், வேதத் தலைவி, உமையம்மை, காளி, முத்தலைச் சூலத்தைக் கொண்டவள், கச்சு அணிந்த மார்பகங்களை உடையவள், ஞானத்தைப் பூரணமாகக் கொண்டவள், கலைகளுக்குத் தலைவி, மலை மகளாகிய, ஒளி வீசும் நெற்றியைக் கொண்ட பார்வதி தேவி பெற்ற வீரனே, மயில் வாகனனே, மாடங்களும் மதில்களும் முத்து இழைத்த மேடான தளங்களும் கோபுரங்களும் நறு மணம் வீசுகின்ற சோலைகளும் அழகாக வாய்ந்துள்ள குறட்டி** என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
* பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு, பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல், அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல், நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய், ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல், தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.
** குறட்டி புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 894 - குறட்டி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - நோய், உணவு, தானன, தனத்த, அமைத்தல், கொண்டவள், தலைவி, அநாதைகளுக்கு, தொழில், காத்தல், மருந்து, வளர்த்தல், உடையவள், நல்கல், முப்பத்திரண்டு, மகமாயி, மூளை, வீடு, பித்த, சோலை, குறட்டி, என்னும், தோல், பெருமாளே, தேவி