பாடல் 893 - குறட்டி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தானன தனத்த தான, தானன தனத்த தான தானன தனத்த தான ...... தனதான |
கூரிய கடைக்க ணாலு மேருநி கரொப்ப தான கோடத னில்மெத்த வீறு ...... முலையாலுங் கோபவ தரத்தி னாலு மேவிடு விதத்து ளால கோலவு தரத்தி னாலு ...... மொழியாலும் சீரிய வளைக்கை யாலு மேகலை நெகிழ்ச்சி யேசெய் சீருறு நுசுப்பி னாலும் ...... விலைமாதர் சேறுத னினித்த மூழ்கி நாளவ மிறைத்து மாயை சேர்தரு முளத்த னாகி ...... யுழல்வேனோ தாரணி தனக்குள் வீறி யேசம ரதுட்ட னான ராவணன் மிகுத்த தானை ...... பொடியாகச் சாடுமு வணப்ப தாகை நீடுமு கிலொத்த மேனி தாதுறை புயத்து மாயன் ...... மருகோனே வாரண முரித்து மாதர் மேகலை வளைக்கை நாண மாபலி முதற்கொ ணாதன் ...... முருகோனே வாருறு தனத்தி னார்கள் சேரும திளுப்ப ¡£கை வாகுள குறட்டி மேவு ...... பெருமாளே. |
கூர்மை கொண்ட கடைக்கண்ணாலும், மேரு மலை போல மிகவும் மேம்பட்டு எழுகின்ற மார்பகத்தாலும், (இந்த்ரகோபம் என்ற) தம்பலப் பூச்சி போன்ற சிவந்த வாயிதழ்களாலும், பொருந்தியுள்ள தன்மையில் ஆல் இலை போன்ற அழகிய வயிற்றாலும், பேச்சினாலும், சிறந்த வளையல்களை அணிந்த கைகளாலும், மேகலை என்னும் இடையணியை நெகிழ்ந்து விழும்படிச் செய்கின்ற அழகு அமைந்த மெல்லிய இடையினாலும், பொது மகளிர் என்கின்ற சேற்றிலே நான் நாள் தோறும் முழுகி, வாழ் நாளை வீணிலே செலவழித்து, மாயை பொருந்திய அறிவு கொண்டவனாகித் திரிவேனோ? பூமிதனில் மிகுந்த அகந்தை உடையவனாகி போர் செய்யும் துஷ்டனான ராவணனுடைய பெரிய சேனை பொடிபட்டு அழியுமாறு தாக்கிய, கருடக் கொடியைக் கொண்ட, பெரிய கரு மேகத்தை ஒத்த உடலையும், தாது மலர் மாலையை அணிந்துள்ள புயங்களையும் கொண்ட திருமாலின் மருகனே, (கஜமுகாசுரன் என்ற) யானையைக் கொன்று அதன் தோலை உரித்து (போர்த்தி), (தாருகா வனத்து ரிஷி) பத்தினிகளின் இடையணி, கைவளைகள், நாணம் இவை மூன்றையும் அழகிய பிச்சையால் முன்னாளில் கொண்ட* சிவபெருமானின் மகன் முருகனே, கச்சு அணிந்த மார்பகங்களை உடைய மாதர்கள் சேர்ந்து வாழும் மதிலையும் மேல் மாடங்களையும் கொண்ட அழகு வாய்ந்த குறட்டி** என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
* தாருகா வனத்து முனிவர்கள் சிவபெருமானிடத்தில் அன்பு இல்லாதவர்களாகப் பல வேள்விகளைப் புரிந்து வந்தனர். இவர்கள் செருக்கை அடக்க, திருமால் மோகினியாகவும், சிவபெருமான் பிச்சை எடுத்தும் அவ்வனத்துக்குச் செல்ல, முனிவர்கள் மோகினியின் அழகில் மயங்கி அவளைப் பின் தொடர்ந்தனர். இசை பாடி பிச்சை எடுக்கச் சென்ற சிவனது அழகைக் கண்டு ரிஷி பத்தினிகள் அவர் மீது மோகம் கொள்ள, தமது நாணம், கைவளை, மேகலை மூன்றையும் இழந்தனர் - சிவ புராணம்.
** குறட்டி புதுக்கோட்டைக்கு கிழக்கே 5 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 893 - குறட்டி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மேகலை, கொண்ட, தனத்த, தானன, தாருகா, பெரிய, வனத்து, நாணம், பிச்சை, முனிவர்கள், மூன்றையும், அழகு, ரிஷி, அழகிய, வளைக்கை, னாலு, தரத்தி, மாயை, குறட்டி, அணிந்த, பெருமாளே, என்னும்