பாடல் 886 - சப்த.தானம் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனன தானன தான தனத்தன தனன தானன தான தனத்தன தனன தானன தான தனத்தன ...... தனதான |
மருவு லாவிடு மோதி குலைப்பவர் சமர வேலெனு நீடு விழிச்சியர் மனதி லேகப டூரு பரத்தைய ...... ரதிகேள்வர் மதன னோடுறழ் பூச லிடைச்சியர் இளைஞ ராருயிர் வாழு முலைச்சியர் மதுர மாமொழி பேசு குணத்தியர் ...... தெருமீதே சருவி யாரையும் வாவெ னழைப்பவர் பொருளி லேவெகு ஆசை பரப்பிகள் சகல தோதக மாயை படிப்பரை ...... யணுகாதே சலச மேவிய பாத நினைத்துமுன் அருணை நாடதி லோது திருப்புகழ் தணிய வோகையி லோத எனக்கருள் ...... புரிவாயே அரிய கானக மேவு குறத்திதன் இதணி லேசில நாளு மனத்துடன் அடவி தோறுமெ வாழி யல்பத்தினி ...... மணவாளா அசுரர் வீடுகள் நூறு பொடிப்பட உழவர் சாகர மோடி யொளித்திட அமரர் நாடுபொன் மாரி மிகுத்திட ...... நினைவோனே திருவின் மாமர மார்ப ழனப்பதி அயிலு சோறவை யாளு துறைப்பதி திசையி னான்மறை தேடி யமுற்குடி ...... விதியாதிச் சிரமு மாநிலம் வீழ்த ருமெய்ப்பதி பதும நாயகன் வாழ்ப திநெய்ப்பதி திருவை யாறுட னேழு திருப்பதி ...... பெருமாளே. |
நறுமணம் உலவும் கூந்தலை வேண்டுமென்றே அவிழ்ப்பவர்கள், போருக்கு உற்ற வேல் என்று சொல்லத் தக்க நீண்ட கண்களை உடையவர்கள், உள்ளத்தில் வஞ்சனை ஊர்கின்ற வேசியர்கள், ரதியின் கணவனான மன்மதனுக்கு ஒப்பானதும்*, போருக்கு ஏற்றதுமான இடையை உடையவர்கள், இளைஞர்களின் அருமையான உயிர் தங்கி வாழ்கின்ற மார்பகங்களை உடையவர்கள், இனிமையான பெரிய பேச்சுக்களைப் பேசும் குணம் கொண்டவர்கள், தெருவில் கொஞ்சிக் குலாவி யாரையும் (வீட்டுக்கு) வரும்படி அழைப்பவர்கள், பொருள் பெறுவதிலேயே மிக்க ஆசை பரந்துள்ள மனத்தினர்கள், எல்லா விதமான வஞ்சக மாய வித்தைகளையும் கற்றவர்களாகிய வேசியரை நான் நெருங்காமல், தாமரையை ஒத்த உனது திருவடியைத் தியானித்து, முன்பு திருவண்ணாமலை நாட்டில் நான் ஓதிய திருப்புகழை மனம் குளிர மகிழ்ச்சியுடன் (எப்போதும்) ஓதும்படியான பாக்கியத்தை எனக்கு அருள் புரிவாயாக. அருமையான (வள்ளி மலைக்) காட்டில் இருந்த குறப்பெண்ணின் பரண் மீது சிறிது காலம் மனம் வைத்து, (சந்தனக்காடு, சண்பகக் காடு முதலிய) பல காடுகள் தோறும் வாழ்ந்து உலவிய பத்தினி வள்ளியின் காதல் கணவனே, அசுரர்கள் இருப்பிடம் யாவும் பொடியாக, அசுரப் படை வீரர்கள் கடலுள் ஓடி ஒளிந்து கொள்ள, தேவர்களின் பொன்னுலகத்தில் பொன் மழை மிகப் பொழிய நினைந்து உதவியவனே, லக்ஷ்மிகரம் பொருந்திய பெரிய மாமரங்கள் நிறைந்த திருப்பழனம் (1) என்னும் தலம், உண்பதற்குரிய திருச்சோற்றுத்துறை (2) என்ற தலம், திசைகள் தோறும் நான்கு வேதங்கள் (ஈசனைத்) தேடி அடைந்த பழம் பதியாகிய திருவேதிக்குடி (3) என்ற தலம், பிரமனுடைய முதல் (உச்சித்) தலை பெரிய பூமியில் (சிவபிரானால்) கிள்ளி வீழ்த்தப்பட்ட திருக்கண்டியூர் (4) என்ற தலம், தாமரையில் வாழும் நாயகனான சூரியன் பூஜித்து வாழ்ந்த ஊராகிய திருப்பூந்துருத்தி (5) என்ற தலம், திருநெய்த்தானம் (6), திருவையாறு (7) என்ற தலங்களுடன், ஏழு திருப்பதிகளில் (சப்தஸ்தானத்தில்**) வாழ்கின்ற பெருமாளே.
* இடைக்கு மன்மதனை உவமித்த காரணம், மன்மதன் சிவசாபம் காரணமாக அருவமாக இருப்பதால் கண்ணுக்குத் தெரியான், பெண்களின் இடை மெலிந்து அருவமாக இருப்பதால் கண்ணுக்குத் தெரியாது.
** இவை திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம், திருவையாறு என்னும் ஏழு தலங்கள் - தஞ்சாவூருக்கு அருகில் உள்ளன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 886 - சப்த.தானம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தலம், பெரிய, தானன, உடையவர்கள், தனத்தன, திருக்கண்டியூர், திருவேதிக்குடி, கண்ணுக்குத், திருச்சோற்றுத்துறை, திருப்பூந்துருத்தி, திருவையாறு, இருப்பதால், திருநெய்த்தானம், அருவமாக, தோறும், போருக்கு, பெருமாளே, தேடி, யாரையும், அருமையான, வாழ்கின்ற, திருப்பழனம், மனம், நான், என்னும்