பாடல் 877 - திருப்பழையாறை - திருப்புகழ்

ராகம் -.....; தாளம் -
தானத்தத் தானன தானன தானத்தத் தானன தானன தானத்தத் தானன தானன ...... தனதான |
தோடுற்றுக் காதள வோடிய வேலுக்குத் தானிக ராயெழு சூதத்திற் காமனி ராசத ...... விழியாலே சோடுற்றத் தாமரை மாமுகை போலக்கற் பூரம ளாவிய தோல்முத்துக் கோடென வீறிய ...... முலைமானார் கூடச்சிக் காயவ ரூழிய மேபற்றிக் காதலி னோடிய கூளச்சித் தாளனை மூளனை ...... வினையேனைக் கோபித்துத் தாயென நீயொரு போதத்தைப் பேசவ தாலருள் கோடித்துத் தானடி யேனடி ...... பெறவேணும் வேடிக்கைக் காரவு தாரகு ணாபத்மத் தாரணி காரண வீரச்சுத் தாமகு டாசமர் ...... அடுதீரா வேலைக்கட் டாணிம காரத சூரர்க்குச் சூரனை வேல்விடு வேழத்திற் சீரரு ளூறிய ...... இளையோனே ஆடத்தக் காருமை பாதியர் வேதப்பொற் கோவண வாடையர் ஆலித்துத் தானரு ளூறிய ...... முருகோனே ஆடப்பொற் கோபுர மேவிய ஆடிக்கொப் பாமதிள் சூழ்பழை யாறைப்பொற் கோயிலின் மேவிய ...... பெருமாளே. |
தோடுகளை அணிந்த காது வரைக்கும் ஓடி வேலுக்கு ஒப்பானது என்று சொல்லும்படி விளங்கி, வஞ்சனை மிகுந்து, மன்மதனின் ரஜோ குணம் படைத்த கண்களும், இரட்டையாகப் பொருந்தி தாமரையின் அழகிய மொட்டுப் போன்ற, பச்சைக் கற்பூரம் சேர்ந்த கலவையைப் பூசிய தோலும், முத்து மாலையும் அணிந்த, யானையின் தந்தம் போல் மேலிட்டெழுந்த மார்பகங்களும் உடைய விலைமாதர்களின் வசத்தில் அகப்பட்டு, அவர்களுக்குத் தொண்டு செய்து ஆசையுடன் காலம் கழிக்கும் குப்பை போல் பயன் இல்லாதவனாகிய என்னை, சிற்றேவல் செய்யும் என்னை, சிற்றறிவுடன் செயல் படும் என்னை, வினைக்கு ஈடான என்னை, நீ கண்டித்து, தாய் போல நீ ஒப்பற்றதான ஒரு ஞானத்தை உபதேசிக்க, அதனால் ஞானம் பெற்றமையால் உனது திருவருளைப் புகழ்ந்து உன்னைப் பிரார்த்திக்க அடியேன் உன் திருவடியைப் பெற வேண்டுகிறேன். விநோதமான திருவிளையாடல்களைச் செய்பவனே, தாராள குணம் உடையவனே, தாமரை மலர் மாலை அணியும் மூலப்பொருளே, வீரனே, பரிசுத்தமானவனே, மகுடம் தரித்தவனே, போரில் (பகைவரைக்) கொல்லும் தீரனே, செய்யும் தொழிலில் சமர்த்தனே, ரதம் ஓட்டுவதில் வல்ல சூரர்களுக்கு எல்லாம் மேலான சூரன் மீது வேலைச் செலுத்துபவனே, ஐராவதம் என்னும் யானையின் மீது சீரான திருவருள் ஊறிய இளையவனே, கூத்தாட வல்லவர், உமா தேவியைப் பாகத்தில் கொண்டவர், வேதத்தையே அழகிய கோவணமாகக் கொண்டவர் ஆகிய சிவபிரான் களித்து மகிழ்ச்சி பூண்டு திருவருள் சுரந்த குழந்தை முருகனே, பொன்னாலாகிய கோபுரத்தைக் கொண்டதும், கண்ணாடிக்கு ஒப்பான மதில் சூழ்ந்த பழையாறை என்னும் தலத்தின் அழகிய கோவிலில் வீற்றிருக்கும் பெருமாளே.
* பழையாறை கும்பகோணத்துக்கு தென்மேற்கே 5 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 877 - திருப்பழையாறை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, என்னை, தானத்தத், அழகிய, மீது, செய்யும், என்னும், திருவருள், பழையாறை, கொண்டவர், தாமரை, போல், அணிந்த, பெருமாளே, குணம், ளூறிய, யானையின், மேவிய