பாடல் 872 - சிவபுரம் - திருப்புகழ்

ராகம் - நீலாம்பரி
தாளம் - அங்கதாளம் - 7 1/2
- எடுப்பு - 1 தள்ளி
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தந்தன தானன தானன தனன தந்தன தானன தானன தனன தந்தன தானன தானன ...... தனதான |
மனமெ னும்பொருள் வானறை கால்கனல் புனலு டன்புவி கூடிய தோருடல் வடிவு கொண்டதி லேபதி மூணெழு ...... வகையாலே வருசு கந்துய ராசையி லேயுழல் மதியை வென்றுப ராபர ஞானநல் வழிபெ றும்படி நாயடி யேனைநி ...... னருள்சேராய் செனனி சங்கரி ஆரணி நாரணி விமலி யெண்குண பூரணி காரணி சிவைப ரம்பரை யாகிய பார்வதி ...... அருள்பாலா சிறைபு குஞ்சுரர் மாதவர் மேல்பெற அசுரர் தங்கிளை யானது வேரற சிவனு கந்தருள் கூர்தரு வேல்விடு ...... முருகோனே கனக னங்கையி னாலறை தூணிடை மனித சிங்கம தாய்வரை பார்திசை கடல்க லங்கிட வேபொரு தேயுகிர் ...... முனையாலே கதற வென்றுடல் கீணவ னாருயி ருதிர முஞ்சித றாதமு தாயுணு கமல வுந்திய னாகிய மால்திரு ...... மருகோனே தினக ரன்சிலை வேளருள் மாதவர் சுரர்க ளிந்திர னாருர காதிபர் திசைமு கன்செழு மாமறை யோர்புக ...... ழழகோனே திரும டந்தையர் நாலிரு வோர்நிறை அகமொ டம்பொனி னாலய நீடிய சிவபு ரந்தனில் வாழ்குரு நாயக ...... பெருமாளே. |
மனம் என்ற ஒரு பொருளுடன் ஆகாயம், வீசும் காற்று, நெருப்பு, நீர், பூமி ஆகிய பஞ்சபூ தங்களும் ஒரு தேகம் என்ற உருவத்தைக் கொண்டு அதில் (13ஐ 7 ஆல் பெருக்கிய) 91 தத்துவ மாற்றங்களாலே(*1) ஏற்படும் இன்பம், துன்பம், ஆசை இவற்றிலே உழல்கின்ற என் புத்தியை நான் ஜெயித்து, மேலான ஞானமென்னும் நல்ல நெறியை அடையும்படியாக நாய் ஒத்த இந்த அடியேனுக்கு உன் திருவருளைச் சேர்ப்பாயாக. உலகங்களைப் பிறப்பித்தவள், சங்கரி, வேத முதல்வி, நாராயணி, குற்றமற்றவள், எண்குணங்களும்(*2) நிறைந்தவள், காரணமானவள், சிவை, பராபரை ஆகிய பார்வதி அருளிய குழந்தாய், சூரனின் சிறையில் இருந்த தேவர்கள், முனிவர்கள் விடுதலை பெற, அசுரக்கூட்டமெல்லாம் வேரற்று அழிய, சிவபிரான் மகிழ்ந்து உனக்குத் தந்த கூரிய வேலைச் செலுத்திய முருகப் பெருமானே, இரணியன் தன் உள்ளங்கையால் அறைந்த தூணிலிருந்து நரசிம்ம உருவத்தில் மலை, பூமி, திசைகள், கடல் இவையாவும் கலங்கிடத் தோன்றி, இரணியனுடன் போர்செய்து தன் நகத்தின் நுனியாலே, அவனைக் கதறி அழும்படி வென்று, அவனது அரிய உயிரை ரத்தம் சிந்தாவண்ணம் அமுதுபோல் அருந்திய தாமரை ஒத்த வயிறுடைய திருமாலின் அழகிய மருமகனே, சூரியன், கரும்புவில் மன்மதன், அருள்மிகு முனிவர்கள், தேவர்கள், இந்திரர்கள், நாகலோகத்து அதிபர்கள், பிரம்மா, செம்மை பொருந்திய சிறந்த அந்தணர்கள் ஆகியோர் போற்றிப் புகழ்கின்ற அழகனே, அஷ்டலட்சுமிகள்(*3) நிறைந்த வீடுகளும், சொக்கத் தங்கத்தால் ஆன கோயிலும் சிறப்பாக விளங்கும் சிவபுரம்(*4) என்ற தலத்தில் வாழும் குருமூர்த்திப் பெருமாளே.
(*1) 96 வகை தத்துவங்களில் சிவதத்துவங்கள் ஐந்து நீங்கிய மற்றவை 91. சிவதத்துவங்கள் இருந்தால் மனமும் புத்தியும் உழல்தல் இல்லை. 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.
(*2) எண் குணங்கள் பின்வருமாறு:தன் வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றும் உணர்தல், பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைமை, முடிவிலா ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை.
(*3) அஷ்டலட்சுமிகள் பின்வருமாறு:தன, தான்ய, ¨தரிய, வீர, வித்தியா, கீர்த்தி, விஜய, ராஜ்ய லட்சுமி.
(*4) சிவபுரம் கும்பகோணத்துக்கு தென்கிழக்கில் 3 மைல் தொலைவில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 872 - சிவபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, தகதிமி, தத்துவம், பின்வருமாறு, தந்தன, உடைமை, அஷ்டலட்சுமிகள், முனிவர்கள், சிவபுரம், சிவதத்துவங்கள், தேவர்கள், தத்துவங்கள், புறநிலை, இன்பம், மாதவர், பார்வதி, சங்கரி, பெருமாளே, காற்று, ஆகிய, பூமி, நீர், ஒத்த