பாடல் 869 - கும்பகோணம் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனத்த தந்தன தானன தானன தனத்த தந்தன தானன தானன தனத்த தந்தன தானன தானன ...... தனதான |
செனித்தி டுஞ்சல சாழலு மூழலும் விளைத்தி டுங்குடல் பீறியு மீறிய செருக்கொ டுஞ்சதை பீளையு மீளையு ...... முடலூடே தெளித்தி டும்பல சாதியும் வாதியும் இரைத்தி டுங்குல மேசில கால்படர் சினத்தி டும்பவ நோயென வேயிதை ...... யனைவோருங் கனைத்தி டுங்கலி காலமி தோவென வெடுத்தி டுஞ்சுடு காடுபு காவென கவிழ்த்தி டுஞ்சட மோபொடி யாய்விடு ...... முடல்பேணிக் கடுக்க னுஞ்சில பூடண மாடைகள் இருக்கி டுங்கலை யேபல வாசைகள் கழித்தி டுஞ்சிவ யோகமு ஞானமு ...... மருள்வாயே தனத்த னந்தன தானன தானன திமித்தி திந்திமி தீதக தோதக தகுத்து துந்துமி தாரைவி ராணமொ ...... டடல்பேரி சமர்த்த மொன்றிய தானவர் சேனையை வளைத்து வெஞ்சின வேல்விடு சேவக சமத்து ணர்ந்திடு மாதவர் பாலருள் ...... புரிவோனே தினைப்பு னந்தனி லேமய லாலொரு மயிற்ப தந்தனி லேசர ணானென திருப்பு யந்தரு மோகன மானினை ...... யணைவோனே சிவக்கொ ழுஞ்சுட ரேபர னாகிய தவத்தில் வந்தருள் பாலக்ரு பாகர திருக்கு டந்தையில் வாழ்முரு காசுரர் ...... பெருமாளே. |
பிறப்பு என்கின்ற பொய்ம்மையோடு கூத்து விளையாட்டு போன்றவை என்ன, ஆபாசம் என்ன, பிறப்பால் ஏற்படும் குடல், அந்தக் குடலைக் கிழித்துக்கொண்டு எழுவது போல மேல் நோக்கி எழுகின்ற ஆணவம் என்ன, அந்த உடலில் உள்ள சதை, பீளை, கோழை முதலியவை என்ன, தோன்றியுள்ள பல சாதிகள் என்ன, அதைக் குறித்து வாதிப்பவர் என்ன, கூச்சலிட்டுப் பேசும் குலத்தவர் என்ன, சில சமயங்களில் துன்பம் கோபித்து எழுவது போல் பிறப்பு என்னும் நோய் என்றே இவ்வாழ்வை எல்லோரும் ஒலித்து எழும் கலிகாலத்தின் கூத்தோ இது என்று கூறுவது என்ன, (பிணத்தை) எடுங்கள், சுடு காட்டுக்குச் செல்லுங்கள் என்று கூறுவதும், (அங்கே போய் பாடையிலிருந்து) கவிழ்க்கப்பட்டதுமான உடல் சாம்பலாகிவிடும் இந்த உடம்பை நான் விரும்பிப் போற்றி, (அவ்வுடலை அலங்கரிக்கக்) கடுக்கன் முதலிய சில அணிகலன்களை அணிவது என்ன, உடைகள் அணிவது என்ன, 'ரிக்கு' வேத மந்திரங்களால் பெறப்படும் சாஸ்திர நூல்களைப் படிப்பது என்ன, இவை யாவற்றையும் ஒழிக்க வல்ல சிவ யோகத்தையும் சிவ ஞானத்தையும் எனக்கு அருள்வாயாக. தனத்த னந்தன தானன தானன திமித்தி திந்திமி தீதக தோதக (இதே ஒலியில்) தம்பட்டை, வீராணம் என்ற பெரிய பறை, வெற்றி முரசு இவைகளுடன் போருக்குக் கூடி வந்த அசுரர்களுடைய சேனைகளை வளைத்து, கொடிய கோபம் கொண்டு வேலாயுதத்தைச் செலுத்திய வலிமை உள்ளவனே, உனது திறமையை தெரிந்துள்ள சிறந்த முனிவர்களுக்கு அருள் செய்பவனே, தினைப் புனத்தில் காதல் இச்சையால் ஒப்பற்ற மயில் போன்ற வள்ளியின் பாதத்தில் நான் அடைக்கலம் என்று நீ கூற, தனது அழகிய புயங்களைத் உனக்குத் தந்த மோகனமான மானை ஒத்த வள்ளியை அணைபவனே, சிவனிடத்தினின்றும் தோன்றிய செவ்விய சுடரே, தவம் செய்வோர் பொருட்டுப் பரனாகி வெளித் தோன்றி வந்து அருளும் குழந்தையே, கருணைத் தெய்வமே, கும்பகோணத்தில் வாழும் முருகனே, தேவர்களின் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 869 - கும்பகோணம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - என்ன, தானன, தனத்த, தந்தன, பிறப்பு, நான், அணிவது, பெருமாளே, எழுவது, தோதக, னந்தன, திமித்தி, திந்திமி, தீதக, வளைத்து